ரூ. 100க்கு ஆன்லைனில் தங்கம்: வாங்குவதற்கு குவியும் இந்தியர்கள்
தொற்றுநோய் காரணமாக விற்பனை மந்தமான பிறகு இந்தியாவில் உள்ள நகைக்கடைக்காரர்கள் ஆன்லைனில் ரூ.100 அளவிற்கு தங்கத்தை விற்கத் தொடங்கியது மட்டுமல்லாது, அவர்களின் பாரம்பரிய வணிக முறைகளை மறுபரிசீலனை செய்யவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர்.
நாடு முழுவதும் ஊரடங்கு காரணமாக கடைகள் மூடப்பட்டதால், கடந்த ஆண்டு இரண்டாவது பெரிய நுகர்வோர் சந்தையில் விற்பனை சரிந்தது. ஆனால் இது ஆன்லைன் மூலம் தங்கம் விற்பனைக்கான புதிய சந்தைக்கு வழிவகுத்தது. டாடா குழுமத்தின் தனிஷ்க், கல்யாண் ஜூவல்லர்ஸ் இந்தியா லிமிடெட், பிசி ஜுவல்லர் லிமிடெட் மற்றும் செங்கோ கோல்ட் அண்ட் டைமண்ட்ஸ் போன்ற தங்க நகை விற்பனையாளர்கள் தங்களுடைய வலைத்தளங்களில் நேரடியாகவோ அல்லது இணைப்புகள் மூலமாகவோ 100 ரூபாய்க்கு தங்கத்தை விற்கும் சலுகைகளைத் தொடங்கினர். நுகர்வோர் குறைந்தபட்சம் 1 கிராம் தங்கத்திற்கு முதலீடு செய்தவுடன் டெலிவரி எடுத்துக்கொள்ளலாம்.
டிஜிட்டல் தங்க விற்பனை என்பது இந்தியாவிற்கு புதிதல்ல. ஆக்மாண்ட் கோல்ட் ஃபார் ஆல் போன்ற தளங்கள், மற்றும் உலக தங்க கவுன்சிலின் சேஃப் கோல்ட் ஆகியவை டிஜிட்டல் தங்க விற்பனையை அளிக்கின்றன. தங்க விற்பனை இந்தியாவில் பெரும்பாலும் நேரடியாக நடைபெறுவதால், நகை விற்பனையாளர்கள் தங்கத்தை ஆன்லைனில் விற்பனை செய்வதில் நாட்டமின்றி இருந்தனர்.
"கொரோனா, நிறைய நகைக்கடைக்காரர்களின் மனநிலையை மாற்றியுள்ளது, மேலும் அவர்கள் ஆன்லைனில் நகைகளை விற்பனை செய்வதில் ஆர்வமுடன் உள்ளனர்" என்று ஆக்மாண்ட் கோல்டின் இயக்குனர் கேதன் கோத்தாரி கூறினார். அவரது நிறுவனத்தில் 4,000 நகைக்கடைக்காரர்கள் இணைந்துள்ளனர்.
பண்டிகைகால தேவை
இந்தியாவில் தங்க விற்பனை உச்சத்தில் இருக்கும் பண்டிகைக் காலம் தொடங்கவுள்ள நிலையில் நகைக்கடைக்காரர்கள் சலுகைகளை வழங்க தொடங்கியுள்ளனர். இணையம் வழியாக வாங்குவதற்கு அதிகமான இந்தியர்கள் ஆர்வமாக இருப்பதால் டிஜிட்டல் விற்பனை அதிகரித்து வருகிறது. இளைய தலைமுறை நுகர்வோர் இந்தத் துறையை மேம்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கல்யாண் ஜூவல்லர்ஸ் நிர்வாக இயக்குனர் ரமேஷ் கல்யாணராமன் கூறுகையில், தங்கத்தில் முறையான முதலீடுகளை செய்ய விரும்பும் நுகர்வோர், குறிப்பாக இளைஞர்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது என கூறினார்.
உலக தங்க கவுன்சிலின் கடந்த ஆண்டு அறிக்கை, நகை விற்பனையாளர்களின் இணையதளங்களில் ஆபரணங்கள் விற்பனையை உள்ளடக்கிய ஆன்லைன் தங்கம் விற்பனை, 2019ம் ஆண்டில் மொத்த விற்பனை மதிப்பில் 2% மட்டுமே. இந்த பரிவர்த்தனைகளில் பெரும்பகுதி 45 வயதிற்குட்பட்டவர்களால் மேற்கொள்ளப்பட்டது என கூறுகிறது
சேஃப் கோல்ட் நிறுவனர் கவுரவ் மாத்தூர் கூறுகையில், தங்கத்தின் விலை வீழ்ச்சி ஆன்லைன் விற்பனையை அதிகரித்துள்ளது. தற்போது தங்கத்தின் விலை குறைவாக இருப்பதை மக்கள் உணர்கிறார்கள், மேலும் அவர்கள் தங்கம் மட்டுமல்லாமல் பல்வேறு பிரிவுகளிலும் டிஜிட்டல் முறையில் பரிவர்த்தனை செய்ய பழகிவிட்டனர் என்றார்.
ஆக்மாண்டின் கோத்தாரி கூறுகையில், கடந்த ஆண்டு பிப்ரவரி முதல், எங்கள் தளத்தில் 200% விற்பனை அதிகரித்தது. பெரும்பாலான நுகர்வோர் தங்க நாணயங்கள் மற்றும் பார்களை 3,000 முதல் 4,000 ரூபாய் வரையில் வாங்குகிறார்கள். கொரோனா காலத்தில், டிஜிட்டல் வடிவத்தில் தங்கத்தை வாங்குவது வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த பண்டிகை காலத்தில் விற்பனை 20% -30% அதிகரிக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று கூறினார்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu