மைதானத்தில் உயிரிழந்த கபடி வீரர்: ராமதாஸ் இரங்கல்

மைதானத்தில் உயிரிழந்த கபடி வீரர்: ராமதாஸ் இரங்கல்
X

மைதானத்தில் உயிரிழந்த கபடி வீரர் விமல்

மைதானத்தில் உயிரிழந்த கபடி வீரர் விமல்ராஜ் குடும்பத்திற்கு நிதியுதவி அளிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்

மாநில அளவிலான கபடி போட்டியில் பண்ருட்டி அடுத்த மானடிக்குப்பம் பகுதியில் மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. அந்த போட்டியில் கலந்து கொண்ட கடலூர் மாவட்டத்தை சேர்ந்த கபடி வீரர் விமல் என்பவர் விளையாடும் பொழுது மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையறிந்த சகவீரர்கள் விமலின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், "கடலூர் மாவட்டம் பண்ருட்டி மானடிக்குப்பத்தில் நடைபெற்ற கபாடி போட்டியின் போது காடாம்புலியூரைச் சேர்ந்த விமல்ராஜ் என்ற வீரர் மார்பில் அடிபட்டு உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். அவரது குடும்பத்திற்கு இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். விமல்ராஜ் ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்தவர். கபாடிப் போட்டிகளில் பதக்கங்களை வென்றவர் சேலத்தில் பட்டப்படிப்பு படித்து வந்த விமல்ராஜ் தான் அவரது குடும்பத்தின் எதிர்கால நம்பிக்கையாக இருந்தார்.

அவரது எதிர்பாராத மறைவால் அவரது குடும்பம் நிலைகுலைந்து போயிருக்கிறது! விளையாட்டு வீரர் விமல்ராஜை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்!" என்று பதிவிட்டுள்ளார்.

Tags

Next Story