பழங்குடியின பெண்களுக்கும் குடும்ப சொத்தில் சமபங்கு : ஐகோர்ட் உத்தரவு

பைல் படம்.
பழங்குடியின பெண்களுக்கும் குடும்ப சொத்தில் சமபங்கு பெறும் உரிமையை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு உரிய அறிவிப்பாணை வெளியிடுவதற்கு தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குடும்ப சொத்தில் தங்களுக்கும் சம பங்கு வழங்கக் கோரி பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த ராமசாமி என்பவரின் மனைவியும், மகளும் சேலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த சேலம் நீதிமன்றம், இந்து வாரிசுரிமை சட்டப்படி, ஆண்களைப் போல பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு பெற உரிமையுள்ளதாக கூறி, இரு பெண்களுக்கும் சொத்தில் பங்கு கொடுக்க உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து ராமசாமியின் மகன்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்த போது, இந்து வாரிசுரிமைச் சட்டத்தில் பழங்குடியின பெண்கள் சேர்க்கப்படாததால், இந்த சட்டத்தின் கீழ் பெண்களுக்கு சொத்தில் பங்கு கொடுக்க வேண்டும் என சேலம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தவறு என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, பழங்குடியின பெண்களுக்கு சொத்தில் பங்கு மறுக்கும் வகையில் எந்த மரபும், நடைமுறையும் நிரூபிக்கப்படாததால், இந்து வாரிசுரிமை சட்டத்தின் கீழ் பெண்களுக்கு சொத்தில் பங்கு வழங்க வேண்டும் என சேலம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் தலையிட எந்த காரணமும் இல்லை எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மேலும், நடைமுறை, மரபு பின்பற்றப்படாத நிலையில் பழங்குடியின பெண்களுக்கு குடும்ப சொத்தில் பங்கு கிடைக்கும் வ்கையில் மத்திய அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதி, அரசியலமைப்பு சட்டம் அமலுக்கு வந்து 70 ஆண்டுகள் கடந்த நிலையிலும், பழங்குடியின பெண்களுக்கு சொத்தில் சம பங்கு பெறும் உரிமை மறுக்கப்படுவது வருத்தத்துக்குரியது என வேதனை தெரிவித்துள்ளார்.
பழங்குடியின பெண்கள் குடும்ப சொத்தில் சமபங்கு பெறும் வகையில் மத்திய அரசு மூலம் அறிவிப்பு வெளியிடச் செய்வதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu