இபிஎஸ்-ஐ அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரித்தது தேர்தல் ஆணையம்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி.
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இருதரப்பு வாதங்களும் கடந்த 22ம் தேதி முடிவடைந்த நிலையில் மார்ச் 28ம் தேதி நீதிபதி கே.குமரேஷ்பாபு தீர்ப்பளித்தார்.
அந்த தீர்ப்பில், அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. ஓ.பி.எஸ். தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட 4 இடைக்கால மனுக்கள் நிராகரிப்பட்டன. மேலும் பொதுக்குழு மற்றும் பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்களும் செல்லும் என தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார். இதன் பின்னர் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்க கோரி அதிமுக தரப்பிலிருந்து தேர்தல் ஆணையத்திடம் மனு அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் பொதுச் செயலாளராக அங்கீகரித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் அதிமுகவின் சட்டவிதிகள் திருத்தம், நிர்வாகிகள் மாற்றம் போன்றவற்றை ஏற்கப்பட்டதாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu