மழுப்பலாக பதில் கூறி மாட்டிக்கொள்ளாதீர்கள் : அதிகாரிகளுக்கு துரைமுருகன் அட்வைஸ்

மழுப்பலாக பதில் கூறி மாட்டிக்கொள்ளாதீர்கள் : அதிகாரிகளுக்கு துரைமுருகன் அட்வைஸ்
X

பொது கணக்கு குழு செயலாளர் கேட்கும் கேள்விக்கு மழுப்பலாக பதில் கூறி மாட்டிக்கொள்ளாதீர்கள் என திருச்சியில் அதிகாரிகளிடம் துரைமுருகன் பேசினார்.

திருச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவை பொது கணக்கு குழு கூட்டம் அந்த குழுவின் தலைவர் காட்பாடி சட்டமன்ற உறுப்பினர் துரைமுருகன் தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி நடைபெற்றது.இந்த கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்களான டி.ஆர்.பி ராஜா, பழனிவேல் தியாகராஜன்,உதயசூரியன், நட்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு உள்ளிட்ட பல துறை அதிகாரிகள் இந்த ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய துரைமுருகன்,எந்த குழுவிற்கும் இல்லாத அதிகாரம் பொது கணக்கு குழுவிற்கு இருக்கிறது. எந்த துறை அதிகாரிக்கு வேண்டுமானாலும் சம்மன் அனுப்பும் அதிகாரமும்,அதிகாரிகள் தவறு செய்தால் அவர்களை பணி நீக்கம் செய்யும் அதிகாரம்,பதவி உயர்வை ரத்து செய்யும் அதிகாரம்,அவர்களை சிறைக்கு அனுப்பும் அதிகாரம் கூட இந்த குழுவிற்கு உண்டு.செயலாளர் கேட்கும் கேள்விக்கு அதிகாரிகள் தெரிந்தால் பதில் கூறுங்கள்,இல்லையென்றால் தெரியாது என பதில் அளியுங்கள். மழுப்பலான எதுவும் கூறி மாட்டி கொள்ளாதீர்கள்.

என்னுடைய அரசியல் வாழ்வில் பொதுபணித்துறை,நெடுஞ்சாலைதுறை,மின்சாரதுறை அமைச்சராக இருந்துள்ளேன். கிட்டத்தட்ட 14 ஆண்டுகள் பொதுப்பணி துறை அமைச்சராக இருந்துள்ளேன். என்னுடைய வாழ்நாளில் யாரையும் பணி இடை நீக்கம் செய்தது கிடையாது.எனவே நாங்கள் கேட்கும் கேள்விக்கு அதிகாரிகள் நேர்மையாக பதில் கூறுங்கள் என்றார்.இந்த கூட்டத்தைத் தொடர்ந்து,சத்திரம் பேருந்து நிலையம், அரசு கூர் நோக்கு இல்லம், வேளாண்மை கல்லூரி உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் திட்டத் பணிகளை இந்த குழுவினர் ஆய்வு செய்தனர்.

Tags

Next Story