பள்ளி சமையலறை அருகே உடல் கருகிய நிலையில் கிடந்த ஐந்தாம் வகுப்பு மாணவி

பள்ளி சமையலறை அருகே கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சிறுமி பிரித்திகா
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான பாச்சலூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பாச்சலூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி சத்யராஜ் மற்றும் பிரியா ஆகியோரின் குழந்தைகளான தர்ஷினி, பிரித்திகா, பிவின்குமார் ஆகிய மூன்று குழந்தைகள் அந்தப் பள்ளியில் படித்து வருகின்றனர்.
இன்று ஐந்தாம் வகுப்பு படிக்கும் பிரித்திகா வழக்கம்போல் உணவு இடைவேளையின் பொழுது பள்ளியிலிருந்து வீட்டுக்கு வரவில்லை. பெற்றோர்கள் மூத்தப் பெண்ணான தர்ஷினியிடம் கேட்டபோது பிரித்திகா உணவு இடைவெளியில் இருந்தே காணவில்லை என்று கூறியுள்ளார்.
உடனே குழந்தையின் பெற்றோர் இருவரும் பள்ளிக்குச் சென்று பார்த்த போது பள்ளியின் அருகே உள்ள சமையலறை அருகே பிரித்திகா உடல் கருகிய நிலையில் கிடந்துள்ளார். உடனே பெற்றோர்கள் பிரித்திகாவை மீட்டு அருகில் இருந்த உறவினரின் வாகனத்தில் குழந்தையை எடுத்துக்கொண்டு ஒட்டன்சத்திரம் நோக்கி வந்தபோது குழந்தை இறந்து விட்டது.
குழந்தையின் உடல் ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டு உள்ளது.
இச்சம்பவம் குறித்து பாச்சலூர் கிராம மக்கள் ஒன்று கூடி ஒட்டன்சத்திரம் தாண்டிக்குடி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் கிரித்திகாவின் பெற்றோர் கூறுகையில் தனியார் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப வேண்டாம், அரசு பள்ளியில் சேருங்கள் என்று கூறும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள், பள்ளி வளாகத்தில் ஒரு குழந்தை உடல் கருகிய நிலையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்ததை பள்ளியில் இருந்த மூன்று ஆசிரியர்களோ, சமையல் ஆட்களோ கண்டுகொள்ளவே இல்லை எனவும் அவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu