ஹெல்மெட் அணியாதவர்களுக்கு ரோஜா வழங்கல்
திண்டுக்கல்லில் சாலை பாதுகாப்பு மாத விழாவினை முன்னிட்டு ஹெல்மெட் அணியாமல் வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ரோஜாப்பூ கொடுத்து போக்குவரத்து பொது மேலாளர் அனுப்பி வைத்தார்.
ஒவ்வொரு வருடமும் ஜனவரி இரண்டாவது வாரம் சாலை பாதுகாப்பு வார விழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு முதல் முறையாக சாலை பாதுகாப்பு வார விழா ஒரு மாதம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இன்று (18 ம் தேதி) தொடங்கி பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இதன் தொடக்கவிழா இன்று திண்டுக்கல் அரசு மருத்துவமனை எதிரே நடைபெற்றது.
இதையொட்டி அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் கணேசன், வட்டார போக்குவரத்து அலுவலர் சுரேஷ், நகர துணை கண்காணிப்பாளர் மணிமாறன் தலைமையில் ஓட்டுனர்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலை விதிகளை கடைப்பிடிப்பதாக உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். நிகழ்ச்சி நடைபெற்ற திருச்சி சாலையில், ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களை ஓட்டி வந்த வாகன ஓட்டிகளுக்கு, போக்குவரத்துக் கழக பொது மேலாளர் கணேசன், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சுரேஷ், துணை கண்காணிப்பாளர் மணிமாறன் ஆகியோர் ரோஜா பூக்களை கொடுத்தனர்.
தொடர்ந்து கல்லூரி மாணவிகள் மற்றும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ்களை வழங்கினர். மேலும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் இருந்து விழிப்புணர்வு பேரணி தொடங்கி திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் அரசு போக்குவரத்து துறை அலுவலர்கள் மற்றும் வட்டார போக்குவரத்து துறையினர் கலந்து கொண்டனர்.