அழகர் கோவில் பட்டருக்கு நிலம் வழங்கப்பட்ட விவகாரத்தில் ஐகோர்ட்டு உத்தரவு
சென்னை உயர் நீதிமன்றம். (கோப்பு படம்).
மதுரை அழகர் கோயிலுக்கு சொந்தமாக பல இடங்களில் நிலம் உள்ளது. இந்த நிலையில், மேலமடை கிராமத்தில் உள்ள 1.83 ஏக்கர் நிலத்துக்கான பட்டா அந்த கோயிலின் பட்டராக இருந்த லட்சுமணன் என்பவருக்கு வழங்கப்பட்டது. இருப்பினும், அவர் அந்த நிலத்தை வேறு சில நபர்கள் பெயருக்கு எழுதி வைத்தார். அதனை மாவட்ட ஆட்சியரும் தனது உத்தரவில் உறுதி செய்தார்.
இதனை எதிர்த்து அழகர் கோயில் நிர்வாகம் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனு நிலுவையில் இருக்கும் போதே லட்சுமண பட்டர் காலமானார். இந்த மனு நீதிபதி சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்த போது ஆஜரான கோயில் தரப்பு வழக்கறிஞர், கோயிலில் அர்ச்சனை செய்வது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதை ஒப்புக்கொண்டதற்காக மட்டுமே லட்சுமண பட்டருக்கு நிலம் ஒதுக்கப்பட்டதாகவும், அதனை மற்றவர்களுக்கு மாற்றவோ, விற்கவோ அவருக்கு அதிகாரமில்லை என்றும் வாதிடப்பட்டது.
பட்டா வழங்கப்பட்டு இருந்தாலும் கூட மற்றவருக்கு விற்பதற்கு இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தில் இடமில்லை என்றும் வழக்கறிஞர் வாதிட்டார். மாவட்ட ஆட்சியர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அனைத்து சட்ட விதிகளையும் ஆய்வு செய்த பிறகே மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்ததாகவும், இந்த மனுவை நிராகரிக்க வேண்டும் என்றும் வாதிட்டார்.
அந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி சுப்ரமணியம், கோயிலில் சேவை செய்வதற்காக வழங்கப்பட்ட நிலத்தை வேறொருவர் பெயருக்கு எழுதி வைக்க முடியாது என கூறி மாவட்ட ஆட்சியரின் உத்தரவை நீதிபதி சுப்ரமணியம் ரத்து செய்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu