9 நாள் சுற்றுப்பயணம் முடிந்து சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்
சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்தார் முதல்வர் ஸ்டாலின்.
சிங்கப்பூர் ஜப்பான் நாடுகளில் ஒன்பது நாள் சுற்றுப்பயணம் முடிந்து முதல்வர் மு. க. ஸ்டாலின் சென்னை திரும்பி உள்ளார்.
தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும், 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர் மாநாட்டில் கலந்து கொள்வதற்கு அழைப்பு விடுப்பதற்காகவும் சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளில் ஒன்பது நாட்கள் சுற்றுப்பயணம் செய்வதற்காக கடந்த 23ஆம் தேதி சென்னையில் இருந்து புறப்பட்டார்.
முதலில் சிங்கப்பூர் நாட்டில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் செய்த முதல்வர் ஸ்டாலின் அங்குள்ள தமிழர்களை சந்தித்து பேசினார். தொழிலதிபர்களையும் சந்தித்தார். நாட்டின் முக்கிய அமைச்சர்களை சந்தித்து தொழில் தொடங்குவதற்கு அழைப்பு விடுத்தார்.
அதனைத் தொடர்ந்து அங்கிருந்து ஜப்பான் நாட்டுக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின் அங்கு 7 நாட்கள் சுற்றுப்பயணம் செய்தார். ஜப்பான் நாட்டில் ஒசாகா நகரில் இருந்து டோக்கியோ நகருக்கு புல்லட் ரயிலில் பயணம் செய்தார். பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செய்துள்ளார். இந்நிலையில் ஒன்பது நாள் சுற்றுப்பயணம் முடிவடைந்து இன்று இரவு முதல்வர மு. க. ஸ்டாலின் சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு தமிழக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
அங்கு அளிக்கப்பட்ட வரவேற்பிற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மு. க. ஸ்டாலின் ஒன்பது நாள் வெற்றிகரமாக அமைந்ததாகவும் இந்த சுற்றுப்பயணத்தின் போது சுமார்ரூ. 3000 கோடி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்வது என திட்டமிட்டு இருந்தோம். ஆனால் ரூ. 3231 கோடி புரிந்துணர்வு ஒப்பந்தம் ஜப்பான் நாட்டு நிறுவனங்களுடன் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே மெட்ரோ ரயில் திட்டம் மற்றும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் ஆகியவை ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் செயல்பட்டு வருகிறது. இப்போது செய்யப்பட்டிருக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் தமிழகத்தில் மேலும் 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றார்.
மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய நிறுவனங்களில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனை பற்றிய கேள்விக்கு மத்திய அரசு தங்களது ஆட்சி இல்லாத மாநிலங்களில் உள்ள அமைச்சர்களை இதே போல் சி.பி.ஐ. வருமான வரி மற்றும் அமலாக்கத்துறை மூலம் சோதனை நடத்தி கெடுபிடி செய்து வருகிறது என குற்றம் சாட்டினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu