சென்னையில் புகை மூட்டம், வாகன ஓட்டிகள் அவதி

சென்னையில் புகை மூட்டம், வாகன ஓட்டிகள் அவதி
அதிகாலை வேளையில் சராசரி அளவை விட புகைமூட்டம் அதிகமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்.

தமிழகத்தில் போகி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் திருநாளுக்கு முன் வீட்டில் உள்ள இயற்கை சார்ந்த தேவையில்லா பொருட்களை எரித்து பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகையினை கொண்டாடி வருகின்றனர் அந்த வகையில், இந்த ஆண்டுக்கான போகி பண்டிகை தமிழ்நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. போகி அன்று மக்கள் பழைய பொருட்களை எரித்து கொண்டாடுவார்கள்.

பொதுவாகவே மார்கழி கடைசி நாளான போகி அன்று பனிமூட்டம் அதிகமாக இருக்கும். சென்னையில் பல்வேறு பகுதிகளில் மக்கள் பழைய பொருட்களை தீயிட்டு எரித்து போகி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். சென்னை,மயிலாப்பூரில், சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், எழும்பூர், கிண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்கள் போகி கொண்டாடி, தைத்திருநாளை வரவேற்கும் பொருட்டு பழைய பயனற்ற பொருட்களை எரித்து போகி கொண்டாடி வருகின்றனர்.

இதனால் சென்னையில் புகைமூட்டம் அதிகரித்துள்ளது. அதிகாலை வேளையில் சராசரி அளவை விட புகைமூட்டம் அதிகமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்.

அத்துடன் சென்னையில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது. நகர் முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்துள்ளதால் சென்னை மணலி பெருங்குடியில் 277 என்ற அளவில் மோசமான அளவில் உள்ளது. அத்துடன் எண்ணூர், அரும்பாக்கம், ராயபுரம், கொடுங்கையூர் உள்ளிட்ட பகுதிகளிலும் காற்றின் தரக்குறியீடு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், பனி மற்றும் புகைமூட்டம் காரணமாக சென்னையில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளன. சென்னை நகர் முழுவதும் புகைமூட்டமாக உள்ளதால் விமான நிலையத்தில் விமான புறப்பாடு மற்றும் தரையிறங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளன.

தற்போது சென்னை விமான நிலையத்தில் 16 உள்நாட்டு விமான சேவைகள் மற்றும் 8 வெளிநாட்டு விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. புகைமூட்டம் சீரான பிறகு விமான சேவைகள் சீரடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story