'சதீசை ரயிலில் தள்ளி விடுங்கள்' நடிகர் விஜய் ஆண்டனி குமுறல் பதிவு
நடிகர் விஜய் ஆண்டனி.
சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் நேற்று கல்லூரி மாணவி சத்ய பிரியா என்கிற சத்யா(வயது 22) அவரது காதலரான சதீஷ் என்பவரால் ரயிலில் தள்ளி விடப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தலைமறைவாக இருந்த காதலன் சதீசை இன்று பரங்கிமலை ரயில்வே போலீசார் கைது செய்தனர். அவர் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
என்னுடைய தந்தை காவல்துறையில் சப் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து ஓய்வு பெற்று விட்டார். நாங்கள் ஆதம்பாக்கம் காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறோம். அதே காவலர் குடியிருப்பில் தான் சத்யாவும் வசித்து வந்தாள். 2 பேரின் வீடுகளும் அருகருகே இருந்ததால் பள்ளி பருவத்தில் இருந்தே நாங்கள் நண்பர்களாக பழகி வந்தோம். பின்னர் அது காதலாக மாறியது. ஆரம்பத்தில் சத்யா என்னை காதலித்தார். நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்திருந்தோம். இதற்கிடையில் திடீரென சத்யா என்னிடம் பேசுவதை நிறுத்திக் கொண்டார்.
இது பற்றி நான் விசாரித்த போது வேறு இடத்தில் அவருக்கு திருமண ஏற்பாடு நடப்பதாக அறிந்தேன். நான் எனது காதலை ஏற்கும் படி அவரிடம் பலமுறை கூறி கெஞ்சினேன். ஆனால் அவள் ஏற்றுக்கொள்ளவில்லை இதனால் அவள் மீது எனக்கு வெறுப்பு ஏற்பட்டது. எனக்கு கிடைக்காத சத்யா வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது. நானும் செத்து விட வேண்டும் என நினைத்தேன். அதற்காகத்தான் சத்யாவை ரயில் முன் தள்ளினேன். நானும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ளலாம் என்று தான் நினைத்திருந்தேன். ஆனால் இந்த சம்பவம் நடந்த அடுத்த வினாடியே பொதுமக்கள் என்னை சூழ்ந்து கொண்டதால் அங்கிருந்து தப்பி ஓடி விட்டேன். மேற்கண்டவாறு சதீஷ் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சதீசை பரங்கிமலை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர் .அவரை வருகிற 28ஆம் தேதி வரை புழல் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையில் மகள் சத்யா இறந்த அதிர்ச்சியை தாங்க முடியாமல் அவரது தந்தை மாணிக்கம் இன்று காலை விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
சத்யாவின் தாயார் ராமலக்ஷ்மி சென்னையில் உள்ள ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் குற்ற பிரிவு தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். அவரது வீட்டிற்கு இன்று சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நேரடியாக வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறினார். அப்போது சங்கர் ஜிவாலிடம் ராமலட்சுமி கண்ணீர் விட்டு அழுதார். நீங்கள் வந்து ஆறுதல் கூறுவதால் என் மகள் திரும்ப கிடைத்து விடுவாளா? என்று ஆதங்கத்தில் கூறினார். அவருக்கு கமிஷனர் மற்றும் அதிகாரிகள் ஆறுதல் கூறி விட்டு சென்றுள்ளனர்.காதல் விவகாரத்துக்காக சத்யாவை சதீஷ் ரெயிலில் தள்ளிவிட்டு கொலை செய்துள்ள சம்பவம் தமிழக மக்களிடம் பெரும் குமுறலை ஏற்படுத்தியிருக்கிறது.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக நடிகர் விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார். அதில் 'சத்யாவை கொன்று, சத்யாவின் அப்பாவின் தற்கொலைக்கு காரணமான சதீசை பொறுமையாக விசாரித்து, 10வருஷத்திற்கு அப்புறம் தூக்குல போடாமல், தயவு செய்து உடனே விசாரித்து ,ரயில்ல தள்ளிவிட்டு தண்டிக்கும்படி சத்யாவின் சார்பாக, பொதுமக்களில் ஒருவனாக, கனம் நீதிபதி அவர்களை கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன்' என குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் அந்த பதிவில் சத்யா மற்றும் சதீசின் படங்களையும் அதில் காப்பி செய்து உள்ளார்.
நடிகர் விஜய் ஆண்டனியின் இந்த சமூக வலைத்தள பதிவுக்கு தமிழக மக்கள் பெரும்பாலானவர்கள் லைக் கொடுத்துள்ளார்கள். அவர்கள் இதைவிட கடுமையான வார்த்தைகளால் சதீஷ்க்கு எதிராக தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu