பெரவள்ளூரில் ரவுடியை வெட்டிய வழக்கில் 3 பேர் கைது
சென்னை அண்ணனூர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணகாந்த், வயது 35, இவர் தனது பாட்டி பாப்பம்மாவை பார்ப்பதற்காக இரு தினங்களுக்கு முன்பு பெரவள்ளூர் ஜி கே எம் காலனி பகுதிக்கு வந்தார். மாலை 4 மணி அளவில் ஜி கே எம் காலனி 30 வது தெரு வழியாக சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் வந்து கிருஷ்ணகாந்தை சரமாரியாக வெட்டினர். இதில் கிருஷ்ணகாந்த் தலை, மார்பு உள்ளிட்ட இடங்களில் வெட்டு காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே மயக்கமடைந்தார்.
அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை, பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி செய்யப்பட்ட நிலையில், தற்போது ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கிருஷ்ணகாந்த் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் தொடர்பாக பெரவள்ளூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து பெரவள்ளூர் ஜி கே எம் காலனி பகுதியை சேர்ந்த வெள்ளை என்கின்ற மொபசீர் 30. கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த அப்பு என்கின்ற ஹரிகரன் 20. மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக் 19 ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
போலீசாரின் விசாரணையில வெட்டுப்பட்ட கிருஷ்ணகாந்த்திற்கும், கைது செய்யப்பட்டவர்களுக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று கிருஷ்ணகாந்த் அவரது பாட்டி வீட்டிற்கு வருவதை முன்கூட்டியே அறிந்தவர்கள், அவரை கொலை செய்யும் நோக்கத்துடன் வெட்டியது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu