மனைவியை குத்தி, காரை ஏற்றி கொன்ற கணவன்

மனைவியை குத்தி, காரை ஏற்றி கொன்ற கணவன்
X

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் மனைவியை மருத்துவர் குத்திக் கொன்றது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூரைச் சேர்ந்தவர் கோகுல்குமார். இவர் சென்னையை அடுத்துள்ள புறநகர் பகுதி மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வந்ததாக தெரிகிறது. இவருக்கும், செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் பகுதியிலுள்ள ஆனந்தா நகரில் வசிக்கும் முஹாரி என்பவரின் மகள் கீர்த்தனாவுக்கும், மூன்று வருடங்களுக்கு முன்னதாக திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் கோகுல்குமாருக்கும் அவரது மனைவி கீர்த்தனாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, இவர்கள் விவாகரத்துக்கு விண்ணப்பித்து, அந்த வழக்கு தற்பொழுது வரை நிலுவையில் உள்ளது என்றும் தெரிகிறது. எனவே, கீர்த்தனா தனது கணவரை விட்டுப் பிரிந்து கடந்த ஒரு வருடமாக மதுராந்தகத்தில் உள்ள தனது தந்தையின் வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் கோகுல்குமார் மேல்மருவத்தூர் அருகே சோத்துபாக்கத்தில் தனியாக வீடு எடுத்து தங்கி வந்துள்ளார். சம்பவத்தன்று தனது மாமனார் வீட்டுக்கு வந்ததும் அங்கு தம்பதிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமுற்ற கோகுல்குமார் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தனது மனைவி கீர்த்தனாவின் கழுத்தில் குத்தினார். இதை தடுக்க வந்த மாமனார் முஹாரியையும் குத்தியுள்ளார். கீர்த்தனா வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்து சாலையில் விழுந்து உள்ளார். சாலையில் விழுந்ததும் மேலும் கோகுல்குமார் அவரது காரை எடுத்து மூன்று முறை அவர் உடல் மீது ஏற்றி இறக்கி உயிர் இழந்ததை உறுதி செய்ததை அடுத்து அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

கீர்த்தனாவின் தந்தை முஹாரி காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மனைவியைக் கொலை செய்த பதற்றத்தில் தப்பிக்க முயன்ற கோகுல்குமார், தனது வாகனத்தில் சென்றபோது, அச்சிறுப்பாக்கம் அருகே விபத்து ஏற்பட்டு அவருக்கும் காயம் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரை மீட்ட அச்சிறுப்பாக்கம் போலீஸார் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் குறித்து மதுராந்தகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
காய்கறி, தக்காளி விலை வீழ்ச்சி..!