அரியலூர்:வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக பணமோசடி செய்தவர் கைது
அரியலூர் மாவட்டத்தில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டம் சாலைகரைக்கிராமம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் அந்தோணிசாமி. 2019 ஆண்டு தனது மகனை வெளிநாட்டிற்குவேலைக்கு அனுப்புவதற்காக ஜெயங்கொண்டத்தில் பி.கே. டிராவல்ஸ் நிர்வகித்து வந்த நாகல்குழியை சேர்ந்த கலியபெருமாள் மகன் பரமசிவம் மற்றும் துறையூரைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர்களை சந்தித்துள்ளார்.
பரமசிவம் மற்றும் பிரகாஷ் ஆகிய இருவரும் அந்தோணிசாமி மகனுக்கு பிரான்ஸ் நாட்டில் அதிக சம்பளத்துக்கு வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி, ரூபாய் 4,80,000 பணத்தைப் பெற்றுக் கொண்டு போலி விசா,விமான டிக்கெட் அளித்து ஏமாற்றிவிட்டு இருவரும் தங்களது தொடர்பு எண்ணை சுவிட்ச் ஆப் செய்து விட்டு, மற்றும் அலுவலகம் ஆகியவற்றை காலி செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டனர்.
இதுகுறித்து அந்தோணிசாமி அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லாவிடம் அளித்த புகாரின் அடிப்படையில் மாவட்ட குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை தொடங்கப்பட்டது.
வழக்கின் இரண்டாவது குற்றவாளியான பிரகாஷ் வெளிநாடு தப்பிச் சென்ற நிலையில், அவர் மீண்டும் இந்தியா திரும்பிய போது கைது செய்யப்பட்டார். இந்நிலையில் முதல் குற்றவாளியான பரமசிவம் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார்.
இந்த வழக்கை இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து விசாரணை செய்து வந்த நிலையில், வழக்கின் முதல் குற்றவாளியான பரமசிவம் என்பவர் ஜெயங்கொண்டத்தில் விசாலாட்சி நகரில் வாடகை வீட்டில் தலைமறைவாக இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின்படி, இன்று மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் அனிதா ஆரோக்கியசாமி தலைமையிலான காவல்துறையினர் பரமசிவத்தை கைது செய்தனர்.
ஜெயங்கொண்டம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட பரமசிவம், சிறையில் அடைக்கப்பட்டார்.