பாப்பாக்குடி ஊராட்சி கிராமசபை கூட்டத்தில் கண்ணன் எம்.எல்.ஏ. பங்கேற்பு
ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம், பாப்பாக்குடி ஊராட்சியில், தேசிய ஊராட்சிகள் தினத்தை முன்னிட்டு நடைப்பெற்ற நீடித்த வளர்ச்சிகள் குறித்த,"சிறப்பு கிராம சபைக் கூட்டம்" நடைபெற்றதில், ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
இக்கூட்டத்தில் எம்.எல்.ஏ. க.சொ.க.கண்ணன் பேசுகையில்,
இந்த ஊராட்சியில் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் வகையில் 3 இலக்குகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதன்படி முதல் இலக்கு சுத்தமான குடிநீர், சுகாதாரமான காற்று,நீர் நிறைந்த கிராமம் ஆகும். ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு குடிநீர் இணைப்பு வழங்க முடியாத குடும்பத்தினருக்கு சிறுமின்விசை தொட்டி,மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் போர்வெல் அமைத்து தேவையான குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அரியலூர் மாவட்டத்தைப் பொறுத்த வரையில் பல்வேறு குடிநீர் திட்டங்களின் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் முழுமையாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கிராம மக்கள் குடிநீர் வீணாவதை தவிர்த்து,சிக்கனமாக குடிநீரை பயன்படுத்த வேண்டும். தங்களது பகுதியில் உள்ள நீர்தேக்க தொட்டியில் வீணாக குடிநீர் செல்வதை தடுத்து நீரை சிக்கனமாகவும் தேவைக்கேற்பவும் பயன்படுத்த வேண்டும்.
இரண்டாவது இலக்கு சுத்தமான பசுமையான கிராமம் என்பது பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்த்தல் வேண்டும். மேலும் தமிழக அரசு தற்பொழுது மீண்டும் மஞ்சப்பை இயக்கத்தை கொண்டு வந்துள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்த்து மஞ்சப்பை மூலம் தங்களுக்கு தேவையான பொருட்களை கடைகளில் வாங்க வேண்டும்.
மூன்றாவது இலக்கு குழந்தைகள் நேய ஊராட்சி என்பது குழந்தைகளை முறையாக பராமரிக்க வேண்டும் என்பதாகும். இந்த மூன்று இலக்குகளையும் வரும் இரண்டு ஆண்டுகளுக்குள் முடிக்க வேண்டும். இப்பணிகளின் முன்னேற்றம் குறித்து அடுத்து வரக்கூடிய கிராம சபை கூட்டங்களில் எடுத்து விவாதிக்க வேண்டும் என்றார்.
இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன் (வட்டார ஊராட்சி), ஊராட்சி மன்ற தலைவர் ஆஷாவினோத், துணைத்தலைவர் குமார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தமிழரசன், கிளை செயலாளர்கள் பட்டுசெல்வம், வேல்முருகன், கல்யாணம், அன்பழகன், பிரதிநிதி சம்பத் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள்,கழக முன்னோடிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu