கார் மோதி தொழிலாளி இறப்பையொட்டி உடையார்பாளையத்தில் சாலை மறியல்
அரியலூர் மாவட்டம் உடையார் பாளையத்தில் விபத்தில் தொழிலாளி இறந்ததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள ஏந்தல் மெயின்ரோட்டுத் தெருவைச் சேர்ந்தவர் தினக் கூலி தொழிலாளி முத்து. அவரது மனைவி சரோஜா. இருவரும் இருசக்கர வாகனத்தில் உடையார் பாளையத்தில் உள்ள தனது மகளுக்கு குழந்தை பிறந்துள்ளதை பார்ப்பதற்கு சென்றுள்ளனர். பார்த்து விட்டு அங்கிருந்து ஏந்தல் செல்வதற்காக திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையை கடந்த போது, அவ்வழியே வந்த கார் மோதியதில், முத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் சரோஜா ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்திற்கு மதுபான கடையும், மேம்பாலம் அமைக்காமல் நான்கு ரோடும் சந்திக்கும் சாலையாக இருப்பதும் காரணம் எனக்கூறி பொதுமக்கள் சாலை மறியலில் 1 மணிநேரத்திற்கு மேலாக ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் உடையார் பாளையம் காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தினர்.
உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் அளித்த உறுதிமொழியின்பேரில் மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.