தாமதமாக வந்த பெண்களிடம் காரை நிறுத்தி மனு வாங்கிய மாவட்ட கலெக்டர்
பெண்கள் இருப்பதை பார்த்து மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி காரை நிறுத்தி அவர்களை மதித்து மனுவாங்கியது அனைவரது பாராட்டையும் பெற்றது.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கட்கிழமை பொது மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் ஆட்சியர் ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெறுவது வழக்கம். இன்று குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம், கீழராயபுரம் கிராமத்தை சேர்ந்த காலனி தெருவில் வசிக்கும் 50 பெண்கள் தங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர். அப்போது ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் இருந்த காவல்துறையினர் மனு வாங்கும் நேரம் கடந்து விட்டது என பொது மக்களை நிறுத்தினர்.
கலெக்டர் முகாமிற்கு காரில் சென்ற கலெக்டர் ரமண சரஸ்வதி பெண்களைப் பார்த்து தனது வாகனத்தை நிறுத்தினார். பின்னர் பெண்கள் தங்களுக்கு பேருந்து வசதி இல்லாத காரணத்தினால் தாமதமாக வர நேரிட்டது எனவும் தங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை வைத்தனர். அதனை பெற்றுக் கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் ரமண சரஸ்வதி கூறினார்.
மேலும் இதனை தொடர்ந்து நரிக்குறவர் இனத்தினர் அவர்களும் தங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வேண்டும் என மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.மனுக்களை வாங்கி கொண்டு கலெக்டர் ரமண சரஸ்வதி முகாமிற்கு ( வீட்டிற்க்கு) சென்றார்.
நேரம் கடந்து வந்த சூழ்நிலையிலும் பெண்கள் இருப்பதை பார்த்து ஒரு பெண்ணாக இருக்கும் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி காரை நிறுத்தி அவர்களை மதித்து மனு வாங்கியது அனைவரது பாராட்டை பெற்றது.