அரியலூர் அருகே 'ஸ்பைகி' நாய் திரும்பி வந்ததால் குடும்பத்தினர் மகிழ்ச்சி

அரியலூர் அருகே 50 கி.மீட்டர் தூரத்தில் விட்ட நிலையில், உரிமையாளரின் வீட்டுக்கு நாய் திரும்பி வந்ததால் குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்தனர்.
அரியலூர் அருகே தனியார் சிமென்ட் நிறுவனம் தெருவில் சுற்றித்திரிந்த நாய்களுடன் வளர்ப்பு நாயை பிடித்து 50 கி.மீட்டர் தூரத்தில் விட்ட நிலையில், உரிமையாளரின் வீட்டுக்கு நாய் திரும்பி வந்ததால் குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்தனர்.
அரியலூர் அடுத்த தாமரைக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜகோபால்(45). இவர், கடந்த 5 ஆண்டுகளாக ஸ்பைகி என பெயரிட்டு நாட்டு நாய் ஒன்றை செல்லமாக வளர்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில், அப்பகுதியில் தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை அப்பகுதியில் உள்ள தனியார் சிமென்ட் நிறுவனம் கடந்த 15ம் தேதி சுமார் 15 க்கும் மேற்பட்ட நாய்களை பிடித்து, பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் வனப்பகுதியில் விட்டுள்ளது. அதில், ராஜகோபால் வளர்த்து வந்த நாயும் பிடிக்கப்பட்டதால், ஆலையிலிருந்து சிமென்ட் ஏற்றி வந்த லாரிகளை முற்றுகையிட்டு ராஜகோபால் மற்றும் அவரது குடும்பத்தினர் கடந்த 15 ம்தேதி இரவு மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து பாடாலூர் வனப்பகுதியில் தேடிய நிலையில், நாய் கிடைக்காததால் ராஜகோபால் திரும்பி வந்தார். இந்நிலையில், அவரது நாய் நேற்று காலை வீட்டுக்கு திரும்பியது. சுமார் 50 கி.மீட்டர் தூரத்தை கடந்து வீட்டுக்கு வந்த நாயை குடும்பத்தினர் பார்த்து மகிழ்ச்சியடைந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu