கொள்ளிடம் ஆற்றில் இருந்து 98,918 கன அடிநீர் வீணாக கடலுக்கு திறப்பு

கொள்ளிடம் ஆற்றில் இருந்து 98,918 கன அடிநீர் வீணாக கடலுக்கு திறப்பு
கொள்ளிடம் ஆற்றின் வழியாக வீணாக கடலுக்கு செல்லும் காவிரி நீர்.
கொள்ளிடம் ஆற்றில் இருந்து திறக்கப்படும் 98,918 கன அடிநீர் வீணாக கடலுக்கு கடலுக்கு செல்கிறது.

கனமழை காரணமாக, கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பியதால், உபரிநீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. கடந்த 11ம் தேதி ஒகேனக்கல்லுக்கு விநாடிக்கு 18,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று முன்தினம் 1.20 லட்சம் கனஅடியாக அதிகரித்தது. அதே அளவில் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. வெள்ளப்பெருக்கு காரணமாக அருவியில் குளிப்பதற்கும், பரிசல் சவாரி செய்வதற்கும் தடை நீடிக்கிறது.

அதே போல், மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 11ம் தேதி நீர்மட்டம் 98.00 அடியாக இருந்த நிலையில், தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பால், நீர்மட்டம் கடந்த 6 நாட்களில் 22 அடி வரை உயர்ந்து, நேற்று காலை 10 மணியளவில் முழு கொள்ளளவான 120 அடியை எட்டி அணை நிரம்பியது. அப்போது, அணைக்கு விநாடிக்கு 1,18,671 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாக இருந்தது.

கடந்த ஆண்டு நவம்பர் 13ம் தேதி நிரம்பிய மேட்டூர் அணை, டிசம்பர் 25ம் தேதி முதல் குறையத்தொடங்கியது. 202 நாட்களுக்கு பின்பு, மீண்டும் 120 அடியை எட்டியுள்ளது. அணை வரலாற்றில் முழுமையாக நிரம்புவது இது 42வது முறையாகும்.

இதையடுத்து, உபரிநீர் போக்கியான 16 கண் மதகு பகுதியில், நீர்வளத்துறை அதிகாரிகள் மலர்தூவி காவிரித்தாயை வரவேற்றனர். முதற்கட்டமாக விநாடிக்கு 25,000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இரவு 8 மணி நிலவரப்படி, அணைக்கு வந்த 1.23 லட்சம் கனஅடி நீரும் அப்படியே காவிரியில் வெளியேற்றப்பட்டது. அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையங்கள் வழியாக 23,000 கனஅடியும், உபரிநீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக ஒரு லட்சம் கனஅடியும் திறந்து விடப்பட்டுள்ளது.

இதை காண மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால், மேட்டூர் அணை விழாக்கோலம் பூண்டுள்ளது. அணை நிரம்பியதையடுத்து, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடு துறை, நாகப்பட்டினம், கடலூர் ஆகிய 11 மாவட்டங்களில் உள்ள காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரியலூர் மாவட்டம் அணைக்கரையில் உள்ள கீழணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் உபரி நீர் வினாடிக்கு 98918 கன அடி தண்ணீர் கடலுக்கு திறக்கப்படுகிறது. மேட்டூரில் திறக்கப்பட்ட தண்ணீர் அணைக்கரை கொள்ளிடம் கீழணை வந்த நிலையில் தற்போது நீர் 1 லட்சத்து 1385 கன அடி நீர்வரத்து உள்ள நிலையில் கிளை பாசன வாய்க்கால்கள் மற்றும் வீராணம் ஏரிக்கு வடவார் தலைப்பு வாய்க்கால் மூலமும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story