காடுவெட்டி கிராமத்தில் 144 தடை உத்தரவு: ஜெ.குரு நினைவிடத்துக்கு செல்ல வெளிஆட்களுக்கு தடை
காடுவெட்டிகிராமத்தில் 144 தடை உத்தரவு. மறைந்த வன்னியர்சங்கதலைவர் ஜெ.குரு நினைவிடத்துக்குசெல்ல வெளிஆட்களுக்கு அனுமதிஇல்லை
HIGHLIGHTS
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த காடுவெட்டி கிராமத்தில் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளதால், மறைந்த வன்னியர் சங்க தலைவர் ஜெ.குரு நினைவிடத்துக்கு செல்ல அரசியல் கட்சியினர், அமைப்பினர் மற்றும் வெளியாட்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஜெயங்கொண்டம் அடுத்த காடுவெட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜெ.குரு (எ) குருநாதன். இவர், மாநில வன்னியர் சங்க தலைவராகவும், எம்எல்ஏவாகவும் இருந்தார். கடந்த2018ம் ஆண்டு மே 25 அன்று உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இந்நிலையில் அவரது குடும்பத்தில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால், குருவின் பிறந்த நாள், நினைவு தினம் வரும் போது அப்பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது.
இந்நிலையில், இன்று (பிப் 01) குருவின் பிறந்த நாள் கொண்டாடப்படும் நிலையில், அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக உடையார்பாளையம் கோட்டாட்சியர் அமர்நாத், ஜன 31, பிப் 1 ஆகிய 2 தினங்களுக்கு 144 தடை உத்தரவு விதித்து உத்தரவிட்டார்.மேலும், குருவின் நினைவிடத்துக்கு செல்ல அவரது குடும்பத்தினர் மற்றும் காடுவெட்டி கிராம மக்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர், அமைப்பினர், வெளியாட்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, காடுவெட்டி, மீன்சுருட்டி, பாப்பாக்குடி, வடவார் தலைப்பு, ராமதேவநல்லூர், குறுக்கு ரோடு, படநிலை உள்ளிட்ட கிராமங்களில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.