தமிழ்நாட்டில் பதின்வயது சிறுமிகள் கர்ப்பம்: ஒரு கவலைக்குரிய போக்கு

தமிழ்நாட்டில் பதின்வயது சிறுமிகள்  கர்ப்பம்: ஒரு கவலைக்குரிய போக்கு

கோப்புப்படம் 

கடந்த 3 ஆண்டுகளில் தமிழகத்தின் 15 மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 8,462 பதின்வயது வ கா்ப்பிணிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

கடந்த மூன்று ஆண்டுகளில், தமிழ்நாட்டின் 15 மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 8,462 பதின்வயது சிறுமிகள் கர்ப்பம் தொடர்பான காரணங்களுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் தர்மபுரி முதலிடத்தில் உள்ளது.இச்செய்தி கவலை அளிக்கிறது. சிறு வயதிலேயே குழந்தை பெற்றுக் கொள்வது, அல்லது பதின்வயதில் கர்ப்பம் தரித்து குழந்தை பெறுவது, பெண்களின் ஆரோக்கியமான வளர்ச்சி மற்றும் அவர்கள் வயது வந்தோராகும் காலத்தில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்துகிறது. இது அவர்களின் கல்வி, வாழ்வாதாரம் மற்றும் ஆரோக்கியத்தை பாதிக்கும் தன்மை கொண்டது

இது தொடா்பாக சமூக ஆா்வலா் ஒருவர் , தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பினா. அதற்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பதிவு செய்யப்பட்ட விவரங்களின்படி கிடைத்த பதிலில், கடந்த 2021-ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2023-ஆம் ஆண்டு டிசம்பா் வரை, தமிழ்நாட்டின் 15 மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 8,462 பதின்வயது கா்ப்பிணிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதில் பெரிய நகரங்களான சென்னை, கோயம்புத்தூா், மதுரையுடன் ஒப்பிடும்போது அதிகபட்சமாக தர்மபுரியில் 3,249 கா்ப்பிணிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனா். அதற்கு அடுத்த இடத்தில் கரூா் மற்றும் வேலூா் உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது

தற்போது அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட 8,462 பதின்வயது கா்ப்பிணிகள் குறித்த தகவல் மட்டுமே கிடைத்துள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட பதின்வயது கா்ப்பிணிகள் குறித்த தகவல் கிடைத்தால், இந்த எண்ணிக்கை 10,000-ஐ தாண்டக்கூடும்.

மாவட்டவாரியாக பதின்வயது சிறுமிகள் கர்ப்பம்

தர்மபுரி 3,249

கரூா் 1,057

வேலூா் 921

சென்னை-கீழ்ப்பாக்கம் மருத்துவமனை 905

சிவகங்கை 439

திருச்சி 349

திருநெல்வேலி 347

மதுரை 260

சென்னை (கஸ்தூா்பா மருத்துவமனை) 230

தூத்துக்குடி 182

தேனி 104

சென்னை (எழும்பூா் மருத்துவமனை) 92

திருவாரூா் 79

கன்னியாகுமரி 73

கோயம்புத்தூா் 72

தஞ்சாவூா் 70

புதுக்கோட்டை 33

சிறுவயது கர்ப்பத்தின் காரணங்கள்

• குழந்தைத் திருமணம்: தமிழ்நாட்டில் குழந்தைத் திருமணம் இன்னும் ஒரு நடைமுறையாகவே இருப்பது வருத்தமளிக்கிறது. சிறுமிகள் திருமணம் செய்து வைக்கப்படும்போது கருத்தரிப்பதற்கான அதிக வாய்ப்பு உள்ளது.

• விழிப்புணர்வு இல்லாமை: இனப்பெருக்க சுகாதாரம் மற்றும் பாதுகாப்பான உடலுறவு நடைமுறைகள் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாதது சிறுவயது கர்ப்பத்துக்கு வழிவகுக்கிறது.

• வறுமை மற்றும் கல்வி வாய்ப்பின்மை: வறுமையில் வாடும் மற்றும் குறைந்த கல்வியறிவு விகிதங்கள் உள்ள சமூகங்களில் பதின்வயது கர்ப்பத்தின் அபாயம் அதிகரிக்கிறது.

• பாலியல் வன்கொடுமை: பாலியல் வன்கொடுமையும் துஷ்பிரயோகமும் கட்டாய மற்றும் விரும்பத்தகாத கர்ப்பங்களுக்கு வழிவகுக்கும் காரணிகளாக உள்ளன.

பதின்வயது கர்ப்பத்தின் விளைவுகள்

• தாய் மற்றும் குழந்தை ஆரோக்கியம்: பதின்வயது கர்ப்பங்கள் அதிக ஆபத்துள்ளவை. இது பிரசவத்தின்போது சிக்கல்கள், தாய் இறப்பு மற்றும் குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகளின் ஆபத்தை கூட்டுகிறது.

• கல்வி இடைநிற்றல்: கர்ப்பமாகும் பதின் பருவ பெண்கள் பெரும்பாலும் பள்ளியை விட்டு விலகி விடுவர். இதன்காரணமாக அவர்களின் கல்விக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இது எதிர்கால வாழ்க்கை வாய்ப்புகளைக் கட்டுப்படுத்துகிறது.

• வறுமைச் சுழற்சி: பதின்வயது கர்ப்பம் வறுமைச் சுழற்சியை நிலைநிறுத்தக்கூடும். சிறு வயதிலேயே பெற்றோர்களாக மாறும் சிறுமிகள் வருமானம் ஈட்டும் திறனை பெற தடுக்கப்படுகிறார்கள்.

• உளவியல் தாக்கம்: பதின்வயது கர்ப்பங்கள் பெரும்பாலும் உணர்ச்சி ரீதியான துயரம், அவமானம் மற்றும் சமூக ஒதுக்கலுக்கு வழிவகுக்கிறது.

தமிழ்நாட்டில் சிறுவயது கர்ப்பத்தைத் தடுக்க பல அணுகுமுறை தேவைப்படுகிறது.

• குழந்தைத் திருமணத்திற்கு எதிராக செயல்படுதல்: குழந்தைத் திருமணங்களைத் தடுக்க உறுதியான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். குழந்தைகளின் திருமண வயது குறித்து பெற்றோர்கள் மற்றும் சமூகங்களை கல்வி கற்பது அவசியம்.

• இனப்பெருக்க சுகாதாரக் கல்வி: பள்ளிகளிலும் சமூகத்திலும் விரிவான பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதாரக் கல்வி மிகவும் முக்கியமானதாகும்.

• வறுமை ஒழிப்பு: வறுமை, பசி இவற்றைப் போக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும் சிறுமிகளுக்கான கல்வி மற்றும் பொருளாதார வாய்ப்புகளுக்கான அணுகல் அவசியம்.

• சமூக மாற்றம்: சிறுவயது திருமணத்தின் தீங்கு மற்றும் பெண் கல்வியின் நன்மைகள் குறித்த திறம்பட மக்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

தமிழ்நாட்டில் பதின்வயது கர்ப்பங்களின் அதிகரித்து வரும் போக்கு ஆழ்ந்த கவலையை அளிக்கிறது. மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் இந்நிலை பாதிப்பை ஏற்படுத்துமாதலால் இதை விரைவில் தடுப்பது அவசியம். இந்த சிக்கலைத் தீர்க்கவும், அதனால் பாதிக்கப்பட்ட பெண்களின் மற்றும் அவர்களின் குழந்தைகளின் வாழ்க்கையில் மாற்றத்தை உருவாக்கவும் அர்ப்பணிப்புடன் சமூக நடவடிக்கை தேவை.

பதின்வயது கர்ப்பங்களின் எண்ணிக்கை அதிகரிப்பது தீவிரமான பிரச்னையாகும். இது பெண்களின் வளா்ச்சியை மட்டுமின்றி, ஒட்டுமொத்த சமூகத்தையும் பாதிக்கும் என்பதால், இந்த பிரச்னையை உரிய முறையில் கையாள வேண்டும். இந்த பிரச்னைக்கு முடிவுகட்ட அனைத்து மாவட்டங்களிலும் உள்ள சமூக நலத் துறைகள், காவல் துறை, கல்வித் துறை அதிகாரிகள் கைகோத்துச் செயல்பட வேண்டும்.

கடந்த 2021 முதல் 2023 ஜூலை வரையிலான காலத்தில், 1098 உதவி எண்ணை அரசு சாரா தன்னார்வ அமைப்பு கையாண்டது. அப்போது அந்த எண்ணுக்கு வந்த அழைப்புகளை மறுஆய்வு செய்ய வேண்டும். அந்தக் காலகட்டத்தில் உடல், மனரீதியாகப் பாதிக்கப்பட்ட வளரிளம் பருவ கா்ப்பிணிகளின் நலனை உறுதி செய்ய உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இது தொடா்பாக தமிழக சுகாதாரத் துறைச் செயலா் ககன்தீப் சிங் பேடி கூறுகையில், பதின்பருவத்தில் உள்ள சிறுமிகள் கா்ப்பமாவது சமூக பிரச்னையாகும். தமிழகம் முழுவதும் குழந்தை திருமணங்களைத் தடுப்பதன் மூலம் இதைத் தவிர்க்க வேண்டும்.

பதின்வயது கா்ப்பிணிகள் குறித்த தகவலை விதிமுறைகளின்படி காவல் துறையினா் பதிவு செய்துள்ளனா். அதை மறுஆய்வு செய்ய அனைத்து மாவட்ட ஆட்சியா்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதேவேளையில், போக்சோ சட்டத்தின்படி, பெண் குழந்தைகளின் உடல்நலம் உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து சுகாதாரம் மற்றும் சமூக நலத் துறைகள் இணைந்து விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றன.

வளரிளம் பருவத்தினா் கா்ப்பமாவது அதிக அபாயகரமானது என்றே கருதப்படுகிறது. அந்தப் பருவத்தில் உள்ள கா்ப்பிணிகளின் உடல், மனநலனை கருத்தில்கொண்டு, இந்தப் பிரச்னையை சுகாதாரத் துறை எச்சரிக்கையுடன் கையாள்கிறது என்று தெரிவித்தார்.

Tags

Next Story