/* */

தமிழகத்திற்கு 10 ஆண்டுகளில் ரூ.7 லட்சம் கோடி: மத்திய நிதியமைச்சர்

தமிழ்நாட்டிற்கு நலத்திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளில் ரூ.7 லட்சம் கோடி வழங்கியுள்ளதாக மத்திய நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

தமிழகத்திற்கு 10 ஆண்டுகளில் ரூ.7 லட்சம் கோடி: மத்திய நிதியமைச்சர்
X

சென்னை மேற்கு மாம்பலத்தில் நடைபெற்ற வளர்ச்சியடைந்த பாரதம் லட்சிய யாத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

2047-ம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக வேண்டும் என்ற குறிக்கோளுடன் நாட்டு மக்கள் பயன்பெறும் வகையிலான 17 முக்கிய நலத்திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடியின் உத்தரவாதத்துடன் மத்திய அரசு செயல்படுத்தி வருவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

சென்னை மேற்கு மாம்பலத்தில் நடைபெற்ற வளர்ச்சியடைந்த பாரதம் லட்சிய யாத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், பிரதமரின் கிராமசாலை திட்டம், ஜல்ஜீவன் திட்டம், ஆயுஷ்மான் பாரத் உள்ளிட்ட திட்டங்களால் நாட்டில் உள்ள கடைக்கோடி மக்கள் பயன்பெற்றுள்ளனர்.

இத்திட்டங்களை செயல்படுத்துவதற்காக அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு பாரபட்சமின்றி நிதி வழங்கி வருவதாகவும் அவர் கூறினார். இதில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு கவனத்துடன் செயல்படுவதாக அவர் தெரிவித்தார்.

வளர்ச்சியடைந்த பாரதம் லட்சிய யாத்திரையின் போது, நடைபெறும் முகாம்களில், மத்திய அரசின் இந்த திட்டங்களில் இதுவரை சேராத மக்கள், அவற்றில் சேர்ந்து பயன்பெறும் வகையில் விண்ணப்பங்களை அளிக்க வேண்டும் என நிதியமைச்சர் கேட்டுக்கொண்டார்.

கடந்த 10 ஆண்டுகளில் தமிழக அரசுக்கு மத்திய அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் வழங்கப்பட்ட தொகையினை நிதியமைச்சர் பட்டியலிட்டார்.

பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் கிராமப்புறப்பகுதிகளில் ஏழை எளிய மக்களுக்கு 6.8 லட்சம் வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளதாக அவர் கூறினார். நகர்ப்புற வீட்டுவசதி திட்டத்தின் கீழ், சென்னையில் மட்டும் 1.5 லட்சம் வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளது.

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் 57 லட்சம் மற்றும் நகரப்புறங்களில் 5.23 லட்சம் கழிப்பறைகளும் கட்டப்பட்டுள்ளன என்றும், சென்னையில் மட்டும் 6751 கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். பிரதமரின் மருத்துவ காப்பீட்டு திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் சென்னையில் 6340 பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.

மகளிருக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கும் உஜ்வாலா திட்டத்தில் மாநிலம் முழுவதும் 37 லட்சம் பெண்கள் பயனடைந்திருப்பதாகவும், சென்னையில் 32,000 பேருக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஏழைகளின் நலன்காக்கும் உணவுப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாநில அரசின் பங்கு எதுவுமின்றி 3.64 கோடி பேருக்கு இலவச உணவு தானியங்கள் வழங்கப்படுவதாகவும், சென்னையைப் பொருத்தமட்டில் 25.7 லட்சம் பேர் பயன்பெற்று வருகின்றனர்.

மக்கள் வங்கித் திட்டம் எனப்படும் ஜன் தன் திட்டத்தின் கீழ் 1.5 கோடி பேருக்கு இருப்புத் தொகை ஏதுமற்ற வங்கி கணக்குகள் தமிழ்நாட்டில் துவக்கப்பட்டுள்ளதாகவும், இதில் 58 சதவீதம் பெண்கள்.

பிரதமரின் முத்ரா திட்டத்தின் கீழ், உத்தரவாதமின்றி 2.67 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு தொழில் தொடங்க கடன்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதனால் 5.2 கோடி பேர் பயன்பெற்றுள்ளனர்.

மாநிலத்தில் ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்தில் 20,000-க்கும் மேற்பட்ட தொழில் முனைவோருக்கு 2200 கோடி ரூபாய் வழங்கப் பட்டிருப்பதாகவும், இதே போல் பிரதமர் ஸ்வநிதி திட்டத்தில் 3.6 லட்சம் சாலையோர வியாபாரிகளுக்கு கடன்கள் வழங்கப் பட்டுள்ளது.

ஸ்வநிதி திட்டத்தின் கீழ் பயனாளிகளின் விவரங்களை பட்டியலிட்ட அவர், கடன் பெற்றதில் 67 சதவீதம் பேர் பெண்கள் என்றும், 32 சதவீதம் பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்றும், 18 சதவீதம் பேர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்தார்.

மேலும் மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு அளித்த பல்வேறு கட்டமைப்பு திட்டங்கள் குறித்து பட்டியலிட்ட நிதியமைச்சர் சென்னை- பெங்களூர் விரைவுச் சாலை 50 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு வருவதாகவும், 150 கி.மீ. கிழக்கு கடற்கரை சாலை ரூ.3000 கோடி செலவில் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.

வந்தே பாரத் திட்டத்தைப் பொருத்தவரை இந்த ரயிலுக்கான அனைத்துப் பெட்டிகளும் சென்னை பெரம்பூர் இணைப்பு ரயில்பெட்டி (ஐசிஎப்) தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், மாநிலத்தில் 4 வழித்தடங்களில் இந்த ரயில் தற்போது இயக்கப்பட்டு வருகிறது.

பிரதமர் மோடி ஆட்சி பொறுப்பேற்ற 2014-ம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த நிதி ஆணையத்தின் பரிந்துரையின் படி, 6 லட்சத்து 96 ஆயிரத்து 666 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

வரிப்பகிர்வு அடிப்படையில் தமிழ்நாட்டுக்கு கடந்த 10 ஆண்டுகளில் 2.8 லட்சம் கோடி ரூபாயும், மானியங்கள் மற்றும் உதவித் தொகை அடிப்படையில் அதே காலகட்டத்தில் 2.58 லட்சம் கோடி ரூபாயும் ஒதுக்கியிருப்பதாக அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

கடந்த 10 ஆண்டுகளில் நேரடி வரி வருவாய் மூலம் தமிழ்நாடு வெறும் 6 லட்சத்து 23 ஆயிரத்து 713 கோடி ரூபாய் மட்டுமே மத்திய அரசுக்கு கொடுத்துள்ளது என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

ஜிஎஸ்டி வரியைப் பொறுத்தவரை, மாநில ஜிஎஸ்டி வரி வருவாயில் 100 சதவீதமும் மாநிலங்களுக்கே வழங்கப்படுவதாகவும், தமிழ்நாட்டுக்கும் இது பொருந்தும் என்றும், அதில் கடந்த ஆண்டு தமிழ்நாட்டிற்கு 36,353 கோடி ரூபாய் கிடைத்துள்ளது என்றும், தமிழ்நாட்டில் வசூலிக்கப்படும் மத்திய ஜிஎஸ்டியை பொறுத்தவரை 41 சதவீதம் மாநிலத்திற்கே ஒதுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

மத்திய அரசு வசூலிக்கும் செஸ் வரியில், தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை அமல்படுத்த, 37,965 கோடி ரூபாயும், அனைவருக்கும் கல்வி திட்டத்தை செயல்படுத்த 11,116 கோடி ரூபாயும், கிராம சாலைகள் திட்டத்திற்கு 3637 கோடி ரூபாயும், வீட்டு வசதி திட்டத்திற்கு 4739 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விரிவாக விளக்கினார்.

இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மத்திய அரசின் திட்டப்பயனாளிகளின் அனுபவங்கள் குறித்து நிதியமைச்சர் கேட்டறிந்தார். புதிய திட்டப்பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அவர், பல்வேறு திட்டங்களின் அடிப்படையில் கடன்களையும் வழங்கினார்.

நிகழ்ச்சியில் இந்தியன் வங்கியின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் சாந்திலால் ஜெயின், சென்னை பத்திரிகை தகவல் அலுவலக கூடுதல் தலைமை இயக்குநர் அண்ணாதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 4 Jan 2024 4:20 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  2. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  3. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  4. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  5. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  7. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  8. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே யானை தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் ஒருவர்
  9. லைஃப்ஸ்டைல்
    முகப்பொலிவின் மந்திரம் - சாலிசிலிக் ஆசிட்!
  10. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?