தோசை பிரசாதமாக வழங்கப்படும் கோயில்கள்

தோசை பிரசாதமாக வழங்கப்படும் கோயில்கள்
அந்தக் காலத்தில் திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாளுக்கு தோசையில் சர்க்கரை தூவித்தான் படைப்பார்களாம்.

பின்னர் தான் "லட்டு" வழக்கத்திற்கு வந்தது. தோசையை பிரசாதமாக தரும் மற்ற கோயில்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?. கோயில் பிரசாதம் என்றால் பழனி பஞ்சாமிர்தம், திருப்பதி லட்டு, உப்பிலியப்பன் கோயில் புளியோதரை போல் மதுரை அழகர் கோயில் தோசையும் புகழ்பெற்றது.

செங்கல்பட்டை அடுத்துள்ள சிங்கப்பெருமாள் கோயிலில் மிளகு தோசை பித்தளை பானைகளில் வைத்திருப்பார்கள். பக்தர்களுக்கு தரும் தோசையில் மிளகாய் பொடி, நல்லெண்ணெய் கலந்து தருகிறார்கள். இதன் சுவைக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அடிமையாக இருக்கிறார்கள். அங்கு வரும் பக்தர்களிடம் இந்த தோசை மிகவும் பிரசித்தி பெற்றது. அரிசி, உளுந்து, மிளகு, சீரகம், நெய் சேர்த்து தயாரிக்கப்படுகிறது இந்த மிளகு தோசை.

2000 ஆண்டுகள் பழமையான பல்லவர் காலத்தைச் சேர்ந்த சிங்கப்பெருமாள் நரசிம்மர் குடைவரை கோயிலில் அதிரசம், லட்டு, முறுக்கு, தட்டை, தோசை போன்றவை பிரசாதமாக வழங்கப்பட்டாலும் மிளகு தோசை தான் பக்தர்களின் பெரும்பாலான விருப்பமாக உள்ளது.

அழகர் கோயில் சுந்தரராஜ பெருமாள் கோயிலுக்கு வரும் பக்தர்கள் அழகர் கோயில் ஸ்பெஷல் தோசையை வாங்காமல் செல்ல மாட்டார்கள். இங்கு மலை உச்சியில் நூபுர கங்கை பாய்கிறது. இந்த நீரை பயன்படுத்தி தான் தோசை பிரசாதம் செய்து அழகருக்கு படைக்கப்பட்டு பின்பு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

திருப்பதி, ஸ்ரீரங்கம், காஞ்சிபுரம் போன்ற கோயில்களில் உள்ள கல்வெட்டுகளில் தோசை பிரசாதத்திற்காக பணம் வழங்கும் சேவை அக்காலத்தில் இருந்ததாகவும் அதற்கு "தோசைப்படி" என்றும் குறிப்பிடுகின்றன.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் (1524 AD) கிருஷ்ணதேவராய மன்னர் தோசைப்படி சேவைக்காக 3000 பணம் நன்கொடையாக வழங்கியதாக கல்வெட்டு குறிப்புகளில் காணப்படுகிறது.

இந்தத் தொகையில் நிலம் வாங்கப்பட்டு தினமும் 15 தோசை பிரசாதம் வழங்கப்பட்டதாகவும், அதே கோயிலில் விஜயநகர மன்னன் அச்சுதராயரின் ஆட்சிக்கால கல்வெட்டில் கிருஷ்ணரின் பிறந்த நாளின் போது செய்யப்பட்ட தோசை பிரசாதம் பற்றி குறிப்பிடுகிறது.

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் உள்ள 17 ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகள் கோயில் திருவிழாக்களுக்கான தோசை பிரசாதத்தையும் குறிப்பிடுகின்றன.

சிங்கப்பெருமாள் கோயில், அழகர் கோயில், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் போன்ற பிரசித்தி பெற்ற கோயில்களில் தோசை பிரசாதம் விசேஷமாக சொல்லப்படுகிறது.

பெரும்பாலான கோயில் கல்வெட்டுகளிலும் வெவ்வேறு தோசைகளுக்கான சமையல் குறிப்புகளும் காணப்படுகின்றன. பெரும்பாலான கோயில் கல்வெட்டுகளில் தோசை பிரசாதம் செய்ய கொடுக்கப்பட்ட மூலப்பொருட்களின் அளவீடுகளும் குறிப்பிடப்பட்டுள்ளன.

அந்தக் காலத்தில் திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாளுக்கு தோசையில் சர்க்கரை தூவி படைப்பார்களாம். பின்னர்தான் "லட்டு" வழக்கத்திற்கு வந்தது.

ஸ்ரீரங்கம் பெருமாள் கோயிலில் பெருமாளுக்கு தோசை, ரொட்டி, வெண்ணை, வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல், அப்பம், தேன்குழல், அதிரசம் ஆகியவை அந்தந்த காலத்திற்கேற்ப அமுது செய்விக்கப்படுகின்றது. வைகுண்ட ஏகாதசி நாட்களில் பெருமாளுக்கு "சம்பாரா தோசை" எனப்படும் பெரிய தோசையும், செல்வரப்பமும் அமுது செய்விக்கப்படுகின்றது.

Tags

Next Story