/* */

New year rasi palan 2023-தனுசு ராசிக்கு 2023ம் ஆண்டு ஓகோன்னு இருக்குமாம்..!

2023ம் ஆண்டின் அனைத்து ராசிக்காரர்களுக்குமான ஆண்டு பொது ராசிபலன் தரப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

New year rasi palan 2023-தனுசு ராசிக்கு 2023ம் ஆண்டு ஓகோன்னு இருக்குமாம்..!
X

New year rasi palan 2023-2023ம் ஆண்டின் பொது ராசி பலன்கள். (கோப்பு படம்)

New year rasi palan 2023

2023 ஆம் ஆண்டில் நவக்கிரகங்களும் இடப்பெயர்ச்சியாகின்றன. 12 ராசிகளில் சில ராசிக்காரர்களுக்கு கிரங்களின் சஞ்சாரம் சாதகமாகவும், அதிர்ஷ்டமாகவும் இருக்கும். சிலருக்கு பிரச்னைகளும், சவால்களும் தொடரலாம்.

அந்தவகையில், 2023ம் ஆண்டு புத்தாண்டில் உங்க வாழ்க்கையில் என்ன நடக்கும் என்பதை தெரிந்துக்கொள்ள இந்தக் கட்டுரையில், 12 ராசிகளுக்கான புத்தாண்டு பலன்கள் தரப்பட்டுள்ளன. படிங்க. பலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்.

New year rasi palan 2023


மேஷம்

செவ்வாய் பகவானின் அருள் பெற்ற மேஷ ராசிக்காரர்களே, 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசியின் அதிபதியான செவ்வாய் இரண்டாவது வீட்டில் வக்ர நிலையில் இருப்பார். இதனால், நிதி ரீதியாக வலுவாக இருப்பீர்கள். இருந்தாலும், உங்க பேச்சு மற்றும் செயல்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில், உறவில் அதுவே பெரிய ஆப்பாக வந்து நிற்கும்.

பதவி உயர்வு கிடைக்கும்

அதேபோல், ஜனவரி 17 ஆம் தேதி சனி பகவான் 11 ஆவது வீட்டிற்கு, அதாவது லாப ஸ்தானத்தில் பயணம் செய்யப்போகிறார். இதனால், தனியார் துறையில் வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வும் சம்பள உயர்வும் தேடி வரும். பல நாட்களாக முடங்கிக் கிடந்த உங்களது திறமைகள் பளிச்சிட ஆரம்பிக்கும். அதேபோல், உங்களது மூன்றாவது நபர் தலையீட்டை முடிந்த அளவுக்கு தவிர்த்து விடுவது நல்லது. மேலும், செய்யும் தொழிலில் வருமானம் அதிகரிக்கக் கூடிய ஆண்டாகவும் அமையும்.

திருமணத் தடை நீங்கும்

இதுவரை இருந்து வந்த திருமணத் தடை அகலும், குழந்தை பாக்யம் உண்டாகும். அதேபோல், சொந்த தொழில் செய்பவர்களுக்கு உழைப்பு இருந்தால் சீரான வளர்ச்சியும் ஆதாயமும் கிட்டும். பொது இடங்களில் பேசும்போது வார்த்தைகளில் நிதானமாக இருக்க வேண்டும். வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. இதன் மூலம் சகோதர சகோதரிகளின் ஆதரவு கைக்கூடும். ஆரோக்யம் நன்றாக இருக்கும். மாணவர்களின் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும்.

பரிகாரங்கள்:

கும்பகோணத்திற்கு அருகிலுள்ள சுவாமிமலை முருகப்பெருமானை செவ்வாய் கிழமை, செவ்வாய் ஓரையில் சென்று தரிசித்து வந்தால், கஷ்டங்கள் யாவும் விலகி வாழ்க்கையில் மகிழ்ச்சியும், நிம்மதியும் பெருகும். காலஹஸ்தி அல்லது வேறு ராகு பகவான் கோவிலுக்குச் சென்று வர முயற்சி செய்யலாம். அமாவாசை நாட்களில் விரதம் இருக்க முயற்சி செய்யுங்கள். செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது.

New year rasi palan 2023


ரிஷபம்

உங்கள் குடும்பத்திற்காக உழைத்துக் கொண்டே இருக்கும் ரிஷப ராசிக்காரர்களே, இந்த ஆண்டு உங்களுக்கு வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும் என்று பாடப்போகிறீர்கள். ஏனென்றால் அந்த அளவிற்கு நன்மைகள் நிறைந்த ஆண்டாக அமையப்போகிறது. கலைத்துறை, அழகு, சமையல் துறை என தன் திறமையை அழகாக வெளிப்படுத்தக்கூடியவர்கள் சுக்கிரனை அதிபதியாக கொண்ட ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு தொழிலில் எதிர்பாராத வளர்ச்சி ஏற்படும்.

ராஜயோகம்

சனிபகவானின் பார்வையும் சாதகமான இடங்களில் விழுவதால் உங்களுக்கு ராஜ யோகங்கள் கிடைக்கிப்போகிறது. 12 ஆம் வீட்டில் ராகுவும், 6 ஆம் வீட்டில் கேதுவும் சஞ்சரிப்பதால் திருமண யோகம் பெறக்கூடிய அற்புத ஆண்டாக இருக்கும். உங்களுக்கு சமுதாயத்தில் நல்ல பேரும் புகழும் அதிகரிக்கும். மே மாதத்திற்குப் பிறகு குரு பகவான் மீன ராசியில் இருந்து மேஷம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். உங்களுக்கு இது விரைய ஸ்தானம் என்பதால் சுப விரைய செலவுகள் அதிகரிக்கும். எனவே, பங்குச்சந்தை வர்த்தகத்திலிருந்து விலகி இருப்பது நல்லது.

வேலை கிடைக்கும்

குடும்பத்தில் சண்டை சச்சரவு குறைந்து மகிழ்ச்சி அதிகரிக்கும். சிலர் தற்காலிகமாக பிரிந்து இருந்தாலும், இப்போது மீண்டும் இணைவீர்கள். இதுவரை சொல் பேச்சு கேட்காமல் இருந்து வந்த குழந்தைகள் உங்கள் பேச்சை கேட்டு நடப்பார்கள். மகன், மகளுக்கு திருமணம் நிச்சயிக்க நல்ல நேரம்.

இதுவரை இருந்துவந்த பிரச்னைகள் குறையும். நீங்கள் திருமணம் ஆகாதவராக இருந்தால், இந்த ஆண்டு காதலிக்கத் தொடங்க வாய்ப்பு உள்ளது. காதலிப்பவராக இருந்தால் பெற்றோரிடம் இருந்து கிரீன் சிக்னல் கிடைக்கும். மாணவர்கள் நினைத்த கல்லூரிக்கு சென்று படிப்பீர்கள். அரசு வேலை வாய்ப்பு எதிர்பார்ப்பவர்களுக்கு, வேலை கிடைக்க சாதக வாய்ப்புகள் உள்ளன.

கவனம் தேவை

இத்தனை நாட்களாக போட்டு பாடாய் படுத்திய மனக் கவலை, வலி போன்றவற்றில் இருந்து வெளியில் வருவீர்கள். ஆரோக்யத்தில் முன்னேற்றம் ஏற்படும். இருப்பினும், வாகனங்களில் செல்லும் போது கவனமாக இருக்க வேண்டும்.

பரிகாரம்:

ஏகாதசி நாட்களில் விரதம் இருக்க முயற்சி செய்யுங்கள். வீட்டிற்கு அருகில் இருக்கும் சனி பகவான் கோவிலுக்குச் சென்று வர முயற்சி செய்யுங்கள். பெருமாளை வணங்கி வருவதன் மூலம் நிதி நிலைகளில் அதிர்ஷ்டத்தையும், வளர்ச்சியை காணலாம்.

New year rasi palan 2023


மிதுனம்

கடந்த சில ஆண்டுகளாகவே இருந்த பிரச்னைகள் மற்றும் தடைகளை தீர்க்கக்கூடிய ஆண்டாக இந்த 2023 புத்தாண்டு அமையப் போகிறது. எந்தக்காரியமும் செய்யமுடியாமல் தடை நீடித்து வந்தது. நெருங்கிய சொந்த பந்தங்கள் கூட வெறுத்து ஒதுக்கினார்கள். ஏன் வாழ்கிறோம் என்ற எண்ணம் கூட வந்திருக்கும்.

ஆனால், இந்த புத்தாண்டு எல்லாத் துயரங்களுக்கும் விடிவு காலமாக இருக்கப் போகிறது. கடந்த சில ஆண்டுகளாக சனி பகவான் அஷ்டம ஸ்தானத்தில் பயணம் செய்தார். இனி, பாக்ய ஸ்தானத்தில் 9 ஆம் வீட்டிற்கு வரப்போகிறார். அதேபோல், குரு பகவானும் லாப ஸ்தானத்திற்கு வரப்போகிறார். இதனால், பல வகையில் நன்மைகள் நடக்கும். நிம்மதி பெருமூச்சு விடுவதற்கான வாய்ப்புகளும் அமையும்.

கடன் பிரச்னை தீரும்

கடந்த ஐந்து வருடங்களாக அஷ்டம சனியால் வாழ்க்கையில் எத்தனையோ துன்பங்களை அனுபவித்து வந்த நீங்கள், அதிலிருந்து ஏராளமான பாடங்களை கற்றுக்கொண்டிருப்பீர்கள். இனி எல்லா காரியங்களும் வெற்றியை தேடிக் கொடுக்கும். 2023 ஆம் ஆண்டு தொடங்கும்போதே பட்ட கடன்கள் முடிவுக்கு வரப்போகிறது. கடனுக்கு மேல் கடன் வாங்கி அடிபட்டு வாழ்க்கையை நடத்திக்கொண்டிருந்த மிதுன ராசிக்காரர்களே, இதுக்கு மேல் அந்த கவலை வேண்டாம். பணப் பிரச்சனைகள் அனைத்தும் தீரப்போகின்றன.

லாபம் இரட்டிப்பாகும்

கடனால் ஏற்பட்ட கடுமையான மன உளைச்சலுக்கு தள்ளப்பட்டு இருப்பீர்கள். அதுக்கும் இனி விடிவு காலம் தான். சமுதாயத்தில் பட்ட அவமானங்கள் அனைத்திற்கும் தீர்வு கிடைக்கப்போகிறது. குருபகவான் ஏப்ரல் 2023 வரை உங்க ராசிக்கு 10 ஆம் இடமான கர்ம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இதனால் சொந்தத் தொழில், வியாபாரம் சிறக்கும். லாபம் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியைக் கொடுக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

குடும்பத்தில் மகிழ்ச்சி

இதுவரை குடும்பத்தில் இருந்த வந்த சண்டைச் சச்சரவுகள் அனைத்தும் நீங்கி மகிழ்ச்சியும் ஒற்றுமையும் அதிகரிக்கும். கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். பிள்ளைகளால் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும். சனி பகவான் உங்கள் ராசிக்கு 9ம் இடத்தில் அமர்ந்து அவரின் 7ம் பார்வையால், ராசிக்கு 3ம் இடமான இளைய சகோதரர், தைரிய ஸ்தானத்தைப் பார்க்கிறார். இதனால் உங்களின் இளைய சகோதரருடன் இருந்த மன கஷ்டம், வருத்தம் தீரும்.

அதிர்ஷ்டம்

தந்தை ஸ்தானத்தில் சனி அமர்ந்திருப்பதால், உங்களின் மனைவிக்கு யோகம் உண்டாகும். மனைவியால் உங்களுக்கும் அனுகூல பலன் கிடைக்கப் போகிறது. நினைத்த காரியங்கள் எல்லாம் கைகூடும். வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசன் கிடைக்கப்போகிறது.

சிலருக்கு வீடு, பொன், பொருள் வாங்கும் யோகமும் கைகூடி வரும்.மேலும், யாரிடம் பேசும் போதும் கவனமாக இருப்பதன் மூலம் தேவையற்ற பிரச்னைகளை தவிர்க்கலாம். ஆரோக்கியம் மேம்படும். கடவுளின் நற்கருணை உங்களுக்கு கைகூடி வரப்போகிறது.

பரிகாரம்:

வியாழன், சனிக்கிழமைகளில் அசைவ உணவுகளைத் தவிர்க்க வேண்டும். ஏகாதசி மற்றும் அமாவாசை நாட்களில் விரதம் இருந்து முன்னோர்களை வழிபட முயற்சி செய்யுங்கள். தேனி மாவட்டத்தில் உள்ள குச்சனூர் சனி பகவான் கோவில் அல்லது திருநள்ளாறு அல்லது ஏதாவது ஒரு சனி பகவான் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வது நன்மையை சேர்க்கும்.

New year rasi palan 2023


கடகம்

சந்திரனை ராசி அதிபதியாக கொண்ட கடக ராசிக்காரர்களே, இந்த புத்தாண்டு மகிழ்ச்சியும் கவலையும் கலந்த கலவையாக இருக்கப்போகிறது. மே மாதம் வரை உங்களுக்கு குருவின் பார்வை இருப்பதால், குரு பார்த்தால் கோடி நன்மையைப் பெறுவீர்கள். இருப்பினும், புனர்பூசம் 4 ஆம் பாதம், பூசம், புனர்பூசம், ஆயில்யம் ஆகிய நட்சத்திரங்களை கொண்ட கடக ராசியினருக்கு சனி தசை நடக்கும் என்பதால் கண்டிப்பாக கவனமாக இருக்க வேண்டியது அவசியம். யாரை நம்பியும் உங்களுக்கு கொடுத்த பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம்.

முக்கிய பெயர்ச்சியால் ஆபத்து

2023 ஆம் ஆண்டு குரு, ராகு, கேது, சனி பெயர்ச்சி என முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி அடுத்தடுத்து நடப்பது கடக ராசிக்கும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும், சனி பகவான் 8 ஆம் இடத்தில் இருப்பதால் கடக ராசியினரின் தொழில், உத்தியோகம், வியாபாரம் என எல்லா விஷயங்களிலும் தடை, தாமதம் ஏற்பட வாய்ப்புண்டு. அதேபோல், வாய்ப்புகள் தேடி வந்தாலும் அவை பெரிய அளவில் திருப்தி தரக்கூடியதாக இருக்காது.

வேலையில் கவனம்

வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை அதிகரித்து காணப்படும். என்ன தான் கஷ்டப்படாலும் அதில் ஒருவித திருப்தியற்ற மனநிலையிலேயே இருப்பீர்கள். அதேபோல், வேலையில் முன்னேற்றம் மெதுவாக இருக்கும். சக ஊழியர்கள், மேலதிகாரிகளுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது ரொம்பவே நல்லது. மேலும், வேலை சம்பந்தமான விஷயங்களில் தேவையற்ற பேச்சை குறைத்துக் கொண்டு, உங்க வேலையில் மட்டும் கண்ணும் கருத்துமாக செயல்பட வேண்டும்.

திருமணம் தாமதமாகும்

குருபகவான் 9 ஆம் இடத்தில் இருப்பதால், சுப காரியங்கள் சார்ந்த விஷயங்களிலும், புதிய முயற்சிகளில் நன்மைகளும் நடக்கும். பொருளாதார ரீதியாக முன்னேற்றத்தை தரக்கூடிய ஆண்டாகவும் உள்ளது. அதேசமயம் அஷ்ட சனி இருப்பதால், சில பொருளாதார தடைகளும் வரும்.

எனவே, பணத்தை கையாள்வதில் அதிக கவனம் வேண்டும். லாட்டரி, ரேஸ் போன்ற சூதாட்ட விஷயங்களில் ஈடுபடுதல் கூடாது. அதேபோல், 8ல் சனி செல்வதால் திருமண வயதில் இருக்கும் கடக ராசிக்காரர்களுக்கு திருமணம் தாமதமாகும். காதலில் இருப்பவர்கள் திருமணம் செய்து கொள்ள மிகவும் போராட்டமான சூழல் ஏற்படும்.

குடும்ப வாழ்க்கை

திருமணமான தம்பதிகள் விட்டுக் கொடுத்துச் செல்வது மட்டுமில்லாமல் மரியாதை கொடுத்து பேசுவது அவசியம். இல்லையென்றால், தம்பதிகளுக்கு இடையில் மிகப் பெரிய பிரிவை ஏற்படுத்திவிடும். எனவே, வார்த்தையில் கவனம் தேவை. மாணவர்கள் தேவையற்ற விஷயங்களில் கவனத்தை சிதறவிடாமல் படிப்பில் கவனம் செலுத்தினால் அனுகூலப் பலன்களை பெறலாம்.

உடல்நலனில் கவனம் செலுத்தணும்

வயிறு சம்பந்தமான பிரச்னைகள் ஏற்பட இருப்பதால், உணவில் அதிக கவனம் தேவை. அதேபோல், வண்டி வாகனங்களில் வேகமாக செல்வதைத் தவிர்க்க வேண்டும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். பங்கு சந்தை, முதலீடு போன்ற விஷயங்களில் அனுபவமிக்க நபரிடம் கேட்டு தெரிந்து கொண்டு அதன்பிறகு இறங்குவது நல்லது. இல்லையென்றால், அதிக நஷ்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும்.

பரிகாரங்கள்:

சனிக்கிழமை மற்றும் அமாவாசைகளில் அசைவ உணவு உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். அருகில் இருக்கும் சனிபகவான் கோவில் அல்லது நவக்கிர கோவிலுக்கு சென்று வருவதன் மூலம் சில நன்மைகளை பெறுவீர்கள். பௌர்ணமி நாட்களில் சத்யநாராயண விரதம் இருந்தால், வாழ்க்கையில் சில அனுகூலப் பலன்களை பெறலாம். முடிந்தால், காலஹஸ்தி ஒருமுறை சென்றுவாருங்கள்.

New year rasi palan 2023


சிம்மம்

சூரியனை அதிபதியாக கொண்ட சிம்ம ராசியினரே, உங்களுக்கு 2023 ஆம் ஆண்டு புத்தாண்டில் சூரிய பகவான் நிறைய நன்மைகளை தரப்போகிறார். தைரியமும் தன்னம்பிக்கையும் கொண்ட உங்களுக்கு இவ்வளவு நாட்களாக வேலையில் இருந்த நெருக்கடிகள் நீங்கும்.

மே மாதத்திற்கு பிறகு குரு பகவான் பாக்ய ஸ்தானத்திற்கு செல்வதால், குருவின் பார்வையும் உங்களுக்கு கிடைக்கிறது. இதனால், புதிய தொழில் வாய்ப்புகள் தேடி வரும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு தரும் ஆண்டாக இருக்கும்.

இருப்பினும், அரசு, தனியார் துறையில் வேலை செய்பவர்கள் அதிக கவனமாக இருக்க வேண்டியதும் அவசியம். இந்த ஆண்டு சிம்ம ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் நல்ல உயரங்களை அடையவீர்கள். இதுவரை பட்ட கஷ்டங்கள் அனைத்திற்கும் நல்ல பலன் கிடைக்கும்.

வேலையில் கவனம்

ஏப்ரல் மாதத்திற்கு பிறகு குரு மேஷ ராசியிலிருந்து உங்க ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் நுழைகிறார், இதனால் திடீர் நன்மைகளை கொடுக்கும். பண வருமானமும் அபரிமிதமாக இருக்கும். சமூகத்தில் மரியாதை, கௌரவம் அதிகரிக்கும். ஆனால், குரு பகவான் ராகு பகவான் உடன் இணைந்திருப்பதால் குரு சண்டால் யோகம் உருவாகும். அதனால், உங்கள் தந்தைக்கு சில பிரச்னைகள் ஏற்படலாம். மேல் அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடு அதிகரிக்கலாம். யாரை நம்பியும் புதிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம்.

பண இழப்பு

அக்டோபர் மாதத்தில் ராகு உங்க 8 ஆவது வீட்டில் பெயர்ச்சி செய்வதால், வாழ்க்கையில் திடீர் மாற்றங்களை ஏற்படுத்தும். அதேபோல், சாதகமான சூழ்நிலை இருக்கும் என்று சொல்ல முடியாது. இதனால் பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது, எனவே பண விஷயத்தில் அதிக கவனம் வேண்டும். அதேபோல், வாகனத்தில் செல்லும் போது மிகுந்த கவனம் தேவை.

குடும்ப வாழ்க்கை

திருமணமானவர்களுக்கு மாமியாரின் ஆதரவு பெருகும். ஆனால், உங்க துணையுடன் தேவையற்ற பேச்சை குறைத்துக்கொள்வது நல்லது. கோபத்தை கட்டுப்படுத்துவதும் முக்கியம். இதன் மூலம் வீட்டில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். உடல் ஆரோக்யத்தில் இருந்த பிரச்னைகள் முடிவுக்கு வரும்.

இந்த ஆண்டு நீங்கள் அணிய வேண்டிய நிறங்கள் வெளிர் மஞ்சள், இளஞ்சிவப்பு, மெருன். காதல் விவகாரங்களில் வெற்றியைக் கொடுக்கும் ஆண்டாகவும் உள்ளது. காதலில் இருந்த கசப்பு நீங்கி ஒருவரையொருவர் அன்பாகப் பார்க்கும் உணர்வு வளரும்.

பரிகாரம்:

வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் அசைவ உணவைத் தவிர்க்க முயற்சி செய்ய வேண்டும். குரு பகவான் கோவில் அல்லது வேறு நவகிரக கோவில்களுக்கு சென்று வர முயற்சி செய்யுங்கள். பௌர்ணமி நாட்களில் அல்லது ஏகாதசி நாட்களில் விரதம் இருக்க முயற்சி செய்யலாம். பெருமாளை வணங்கி வருவதன் மூலம் நிதி நிலையில் நல்ல வளர்ச்சியையும் அதிர்ஷ்டத்தையும் பெறமுடியும்.

New year rasi palan 2023


கன்னி

புதன் பகவானை ராசி அதிபதியாக கொண்ட கன்னி ராசிக்காரர்களே, அரசு வேலைக்காக தேர்வு எழுதி காத்திருப்பவர்களுக்கு இந்த ஆண்டு நல்ல செய்தி தேடி வரும். அதை அனுபவிக்கத் தயாராக இருங்க. எதிரிகள் தொந்தரவு நீங்கும். சனி பகவானும் சாதகமாக இருப்பதால் புதியதாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடக்கும்.

ஏற்கனவே வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும் கிடைக்கும். இருப்பினும், எல்லாவற்றிலும் கவனமாக இருக்க வேண்டும். எதிலும் இருமன நிலையை தவிர்ப்பது நல்லது. சிலருக்கு, நீண்ட நாட்களாக வாங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த சொத்து வாங்கும் யோகம் உண்டு.

காதல் வாழ்க்கை

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு காதல் உறவில் சோதனைகளை சந்திப்பீர்கள். உங்கள் துணை ஒரு சில காரணங்களால் உங்களை விட்டு சில காலம் பிரிந்து இருக்கலாம். எனவே, முரணான பேச்சை தவிர்ப்பது நல்லது. ஆனால், ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதத்திற்கு திருமணம் செய்துக்கொள்ள விரும்பும் கன்னி ராசிக்காரர்களுக்கு திருமணயோகம் உண்டு. நீங்கள் திருமணமானவராக இருந்தால், இந்த நேரம் திருமண வாழ்க்கையில் மன அழுத்தத்தைக் குறைக்க உதவும்

தொழில் நிலை

இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே உங்கள் தொழில் குறித்த சரியான முடிவை எடுக்க வேண்டும். இதனால், தொழிலில் முன்னேற நிறைய வாய்ப்புகள் உண்டாகும். ஆனால் மே மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில், வியாபாரத்தில் எதிர்பார்த்த பலன் கிடைக்காததால் சில ஏமாற்றங்களை சந்திக்க நேரிடலாம். ஏப்ரல் மாதத்திற்கு பிறகு வியாபாரத்தை மாற்றுவதற்கான வாய்ப்புகளும் இருக்கும். எனவே, எதையும் திட்டமிட்டு வைத்துக்கொள்வது நல்லது. அதுவே, அக்டோபர் - டிசம்பர் வரை பணவரவில் நல்ல மாற்றம் ஏற்படும். இதனால், சேமிப்பதற்கு வாய்ப்புக் கிடைக்கும்.

மாணவர்களுக்கு

இத்தனை நாட்கள் பட்ட கஷ்டம் வீண் போகாது. இருப்பினும், வருடத்தின் ஆரம்பம் சற்று கடினமாக இருக்கும். இந்த சமயத்தில் ஏதேனும் போட்டித் தேர்வுகளுக்கு தயாரானால் வெற்றி கிடைக்காது. எனவே, மனம் தளராமல் தொடர்ந்து படிப்பில் கவனம் செலுத்துங்கள். நிச்சயம் வெற்றி அடைவீர்கள். அக்டோபர், நவம்பர், டிசம்பர் கால கட்டத்தில் உங்களுடையை வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. சிலருக்கு வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பும் கிட்டும்.

பொருளாதார நிலை

இந்த ஆண்டு கன்னி ராசிக்காரர்கள் நிதி விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கிரகங்களின் சேர்க்கையால் வருடத்தின் முதல் பாதி சாதகமானதாக இருந்தாலும், நிதானமும், சேமிப்பும் மிகவும் அவசியம். ஏதேனும் முதலீடு செய்ய விரும்பினால், இந்த மாதத்தில் செய்யுங்கள். ஆனால், ஒருமுறைக்கு இருமுறை யோசித்துக்கொள்வது சிறந்தது. அதுவே, ஏப்ரல் மாதத்திற்கு பிறகு சூதாட்டம், லாட்டரி, சூதாட்டம் போன்றவற்றில் ஈடுபட்டிருந்தால் நஷ்டத்தை அடைவீர்கள்.

குடும்பத்தில் சிக்கல்

ராகுவின் பார்வையால் குடும்ப வாழ்க்கையில் துன்பம் அதிகரிக்கும். சொந்தபந்தங்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். ஆனால், விட்டுக்கொடுத்து போகும் வரை உங்களுக்கு பிரச்னையில்லை. இந்த ஆண்டு குடும்பத்தில் வயதானவர்கள் மற்றும் உடன் பிறந்தவர்களுக்கு உடல்நல பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புண்டு. ஏப்ரல் முதல் மே வரையில் உடல்நலம் தொடர்பான பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, ஆரோக்யத்தில் அதிக அக்கறை காட்ட வேண்டியது அவசியம். வாழ்க்கையில் அனுகூலப் பலன்களை அனுபவிக்க உங்களுக்கான அதிர்ஷ்ட எண் 5 மற்றும் 6.

பரிகாரம்:

புதன்கிழமை நெய் தீபம் ஏற்றி பெருமாளை வணங்குங்கள், நல்லதே நடக்கும். செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் அசைவ உணவைத் தவிர்த்துவிடுங்கள். தேனி மாவட்டத்தில் உள்ள குச்சனூர் அல்லது திருநள்ளாரில் உள்ள சனி பகவான் கோவிலுக்கு சென்று வர முயற்சி செய்யுங்கள்.

New year rasi palan 2023


துலாம்

2023 புத்தாண்டு ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் ஒவ்வொரு விதமான மாற்றங்களையும் நன்மைகளையும் அளிக்கப் போகிறது. அந்த வகையில், துலாம் ராசிக்காரர்களுக்கு 2023 சில தனித்துவமான பலன்களை அளிக்கப் போகிறது என்றே சொல்லலாம். எல்லாவற்றிலும் சமநிலையை பராமரிக்கும் துலாம் ராசியினருக்கு 2023 ஆம் ஆண்டு அதிர்ஷ்டமாகவும், சாதகமானதாகவும் அமையும்.

குரு உங்கள் ராசிக்கு ஆறாவது வீட்டில் இருந்து ஏழாவது வீட்டிற்கு நகர்கிறார். அதனால், வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குருவின் பரிபூரணமான பார்வை உங்கள் ராசிக்கு கிடைக்கப்போவதால் நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாகப்போகிறது.

திருமண யோகம்

குருவின் பார்வை உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தின் மீது விழுவதால், உங்களுக்கு இருந்த திருமணத் தடை விலகி திருமண யோகம் கூடும். வைகாசி மாதத்தில் மண மேடை ஏறப்போகிறீர்கள். காதலில் அன்பும், அரவணைப்பும் கூடும். காதலிப்பவர்களுக்கு பெற்றோர்களிடம் இருந்து கிரீன் சிக்னல் கிடைக்கும். மேலும், அரசாங்க துறையில் பணிபுரிபவர்களுக்கு சம்பளமும் முன்பை விட அதிகமாக இருக்கும் மேலும் நீங்கள் விரும்பும் இடத்திற்கு மாற்றப்படலாம்.

தந்தையின் ஆரோக்யத்தில் கவனம்

சனி 5 ஆவது வீட்டிற்கு செல்வதால் சிரமங்கள் குறையும். குடும்பத்தில் இருந்துவந்த பிரச்னைகள், சச்சரவுகள் குறைந்து பாசமும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். ஆனால், மே - ஜூலை மாதங்களுக்கு இடையில் கணிசமான மாற்றம் இருக்கும். கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன ஊடல்கள் வந்து போகும் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. துலாம் ராசியினருடைய தந்தைக்கு உடல்நிலை கணிசமாக மோசமடையக்கூடும். எனவே, கூடுதல் கவனம் தேவை.

யோகம் அடிக்கப் போகுது

அர்த்தாஷ்டம சனி பகவான் உங்களை விட்டு நீங்கப்போகிறது. லாட்டரி மற்றும் பங்குச்சந்தை முதலீடுகளில் திடீர் ஜாக்பாட் அடிக்கப்போகிறது. எனவே, பணத்தை திட்டமிட்டு செலவிடுவது நல்லது. சிலருக்கு புது வீடு கட்டவும், அசையா சொத்து வாங்கவும் யோகம் உண்டு. ஜனவரி, ஜூன், டிசம்பர் மாதங்களில் புதிய வாகனம் வாங்கவும் வாய்ப்புள்ளது. சுப காரியங்கள் நடைபெறுவதில் இருந்த தடைகள் அனைத்தும் விலகும். இருப்பினும், ஏப்ரல் மாதங்களில் வாகனத்தில் செல்லும் போது கூடுதல் கவனம் தேவை.

வியாபார நிலை

இந்த ஆண்டின் தொடக்கத்தில் வியாபாரம் சற்று மந்தமாகத் தான் இருக்கும். எனவே, சில புதிய வழிகளை கையாண்டு வியாபாரத்தை உயர்த்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். இல்லையென்றால், சிரமங்களை சந்திக்க நேரிடலாம். நஷ்டம் கூட ஏற்பட வாய்ப்புண்டு. ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இந்த நிலைமை சற்று மாறும். வெளிநாடு வாய்ப்புகளும் தேடி வரும்.

பொருளாதார நிலை

அக்டோபர் மாத இறுதியில் ராகு 6 ஆவது வீட்டில் நுழையும்போது எதிர்ப்பாராத செலவுகள் அதிகரிக்கும். அதனால், பணத்தை கையாள்வதில் அதிக கவனத்தோடு இருக்க வேண்டும். வீண் செலவுகளை குறைத்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால், நிதி சிக்கல்களை சமாளிக்க வேண்டியிருக்கும். மாணவர்களை பொறுத்து வரை இந்த ஆண்டு கொஞ்சம் கடினமாகத் தான் இருக்கும். எனவே, கவனத்தோடும் முழுமனதோடும் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.

பரிகாரம்:

வாழ்க்கையில் மன நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்க விநாயகப் பெருமானை வழிபாடு செய்யுங்கள். ஆலங்குடி குரு பகவான் கோவில் அல்லது வேறு குரு பகவான் கோவில்களுக்கு சென்று வர முயற்சி செய்யுங்கள்.

New year rasi palan 2023


விருச்சிகம்

செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களே.. சனி பகவான் 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 3 ஆம் வீடான தைரிய ஸ்தானத்தில் அமர்ந்து ஓரளவு நற்பலன்களையே கொடுத்துக் கொண்டிருக்கின்ற நிலையில், தற்போது 4ஆம் வீடான சுக, கிருகம், மாத்ரு ஸ்தானத்திற்கு செல்கிறார்.

அதாவது அர்த்தாஷ்டம இடத்திற்கு செல்கிறது. இதனால், அடுத்த இரண்டரை ஆண்டுகள் உங்களுக்கு அர்த்தாஷ்டம சனி நடக்க உள்ளது. எனவே, இந்த ஆண்டு முழுவதும் யாரிடமும் கடன் வாங்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். ஒருவேலை வாங்கிவிட்டால், அதை இரண்டரை வருஷத்திற்கு திருப்பி செலுத்த முடியாது. இழுபறியாகவே இருக்கும். முடிந்தவரை கடனை தவிர்த்துவிடுங்கள்.

அர்த்தாஷ்டம சனி

இந்த காலக் கட்டத்தில் நீங்கள் இருக்கும் வீட்ட்டில் இருந்து மாறவேண்டி இருக்கும். அல்லது வேலை, தொழிலில் மாற்றம் நடக்கும். அதன்படி, நீங்கள் பணியாற்றும் நிறுவனத்தில் பொறுப்புகளில் மாற்றம் ஏற்படும். அல்லது இப்போது வேலை செய்துக்கொண்டிருக்கும் நிறுவனத்தையே மாற்றக்கூடிய சூழலும் ஏற்படலாம்.

எனவே, அதற்கேற்ப திட்டமிடல் தேவை. அதேபோல், விருச்சிக ராசிக்காரர் சிலர் சொந்தமாக வீடு வாங்கி அங்கு குடியேறவும் செய்வீர்கள். மேலும், சிலருக்கு இருக்கும் சொந்த வீட்டை விற்றுவிட்டு, வேறு இடத்தில் புதிய வீடு வாங்கி குடியேறவும் வாய்ப்புண்டு.

குரு பகவான்

குரு பகவானின் பார்வை மே மாதம் வரை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் மதிப்பு மரியாதை உயரும். திருமண பாக்யம் கைகூடி வரும். திருமணமான தம்பதிகளுக்கு குழந்தை பேறும் கிடைக்கும். அதேபோல், மே மாதத்திற்கு பிறகு குரு பகவான் 6 ஆவது வீட்டிற்கு செல்வதால், சுப விரைய செலவுகள் அதிகரிக்கும். இளைய சகோதரர்களின் உதவி தேடி வரும். குருவின் அமைப்பால் கலைத்துறையில் இருப்பவர்களுக்கு முதல் பாதியில் சிறப்பான பலன்கள் கிடைக்கும். ஏப்ரலுக்குப் பின் குரு பெயர்ச்சி நடந்த பின்னர் சற்று மந்தமாக இருக்கும்.

மாணவர்களுக்கு

விருச்சிக ராசி மாணவர்களுக்கு நினைத்த கல்லூரிகளில் உயர்கல்வி படிக்க யோகம் உண்டு. அதேபோல், படிப்பில் மட்டும் கவனம் செலுத்தினால் அனுகூலப் பலன்கள் கிடைக்கும். சூரியனும், செவ்வாயும் ஆண்டு முழுவதும் சாதகமாகவே இருக்கும். செப்டம்பர் வரை வெளிநாடு வேலைக்கு முயல்பவர்களுக்கு சாதகமான காலமாக இருக்கும்.

தொழில் நிலை

உங்க ராசிக்கு குரு, சனியின் பார்வை இருப்பதால் தொழிலில் அதிகளவில் முதலீடு செய்வதைத் தவிர்க்கவும். இல்லையென்றால், நஷ்டத்தை சந்திக்க நேரிடலாம். அதேபோல், பெரிய முதலீடு, புதிய தொழிலில் இறங்குவதாக இருந்தால் முதலில் உங்க ஜனன கால ஜாதகத்தை ஆராய்வது சிறந்தது.

ஆரோக்யத்தில் கவனம் தேவை

அர்த்தாஷ்டம சனி என்பதால் உங்க அம்மாவின் ஆரோக்யத்தில் சிறு சிறு பிரச்னைகள் உண்டாகும். உங்களுடைய ஆரோக்யத்திலும் அடிக்கடி பிரச்னைகள் ஏற்படும். உடல்நலத்தை தாண்டி, மனதில் கவலை உண்டாகவும் அதிகளவில் வாய்ப்புள்ளது. இவ்வளவு பிரச்னை இருப்பினும் உங்க ராசிக்கு பூர்வ புண்ணியாதிபதி குரு, பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ஏப்ரல் மாதம் வரை சஞ்சரிப்பதால் எதையும் சமாளிக்கக்கூடிய மனஉறுதியை வளர்த்துக்கொள்வீர்கள்.

எண்ணம் போல் வாழ்க்கை

எண்ணம் போல் வாழ்க்கை என்று சொல்வது போல.. நீங்க நல்லதை நினைப்பதாலும், நல்லதை பேசுவதாலும் நல்லதே நடக்கும். யார் எப்படி இருந்தால் நமக்கு என்ன நாம் சரியாக இருந்துக்கொண்டால் உங்களுக்கு நல்லது. மேலும் அனுகூலப் பலன்களை அனுபவிக்க இந்த வருடம் முழுவதும் மெருன், வெளிர் மஞ்சள் நிறத்தை பயன்படுத்துங்கள். உங்களுக்கான ராசி எண்கள் 1, 3, 9 ஆகும்.

பரிகாரம்:

குல தெய்வ வழிபாடு செய்வதும், நரசிம்மர் வழிபாடு செய்து வர சிறப்பான பலன்களை அடைய முடியும். அதேபோல், அமாவாசை நாட்களில் அசைவ உணவைத் தவிர்த்துவிட்டு முன்னோர்களை வழிபட முயற்சி செய்யுங்கள்.

ஜனவரி 2023 க்கு பிறகு அருகில் உள்ள சனி பகவான் கோவிலுக்கு அல்லது நவகிரக கோவில் சென்று வர முயற்சி செய்யுங்கள். ஏப்ரல் 21, 2023 க்கு பிறகு குரு பகவான் கோவிலுக்கு சென்று வர முயற்சி செய்யுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் அனுகூலப் பலன்களை பெறலாம்.

New year rasi palan 2023


தனுசு

குரு பகவானை ராசி அதிபதியாக கொண்ட தனுசு ராசிக்காரர்களே, கடந்த ஏழரை ஆண்டுகளாக போட்டு பாடாய் படுத்திய ஏழரை சனி உங்க ராசியை விட்டு விலகுவதால், 2023 புத்தாண்டு முழுவதும் அற்புதமான ஆண்டாக இருக்கப்போகிறது. வரும் ஜனவரி 17 ஆம் தேதி சனி மகரத்திலிருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சியாக உள்ளார். மேலும், குரு பகவானும் உங்க ராசியை பார்க்கப்போகிறார். இனி எல்லாமே ஜெயம் தான்.

இனி நீங்கதான் ராஜா

சனி பகவான் உங்களை விட்டு விலகுவதால் நன்மைகளை அள்ளிக் கொடுத்துவிட்டுச் செல்கிறார். அதனால், வேலையில் இருந்து வந்த பிரச்னைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். வேலை தேடக்கூடியவர்களுக்கு கை நிறைய சம்பளத்தில் நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பட்ட அவமானங்கள் நீங்கி, அடுத்த கட்டத்திற்கு முன்னேறுதல், பதவி உயர்வு, சம்பள உயர்வு என அடுத்தடுத்த மகிழ்ச்சியான சம்பவங்கள் உங்க வாழ்க்கையில் நிகழப்போகிறது.

குருபகவானின் பார்வையும் உங்க ராசியின் மீது விழுவதால், மனதாலும் உடலாலும் உற்சாகமாக இருப்பீர்கள். அரசு வேலைக்கு தேர்வு எழுதியவர்களுக்கு அற்புத செய்திகள் தேடி வரும். கூலித் தொழில் செய்பவர்களுக்கு கூட தொடர்ந்து வேலை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

கடன் தொல்லை நீங்கும்

சரியான வேலை அமையாததால் கடனை வாங்கி குவித்திருப்பீர்கள். இது உங்களை ரொம்ப நாட்களாக போட்டு வாட்டி வதைத்திருக்கும். 2023 ஆம் ஆண்டில் நிலவும் கிரக நிலை மேன்மை தரக்கூடியதாக இருக்கும் என்பதால், கடன் தொல்லையிலிருந்து மீளப்போகிறீர்கள். வாய்ப்பிழந்த தொழில் கூட மீட்டெடுக்கக்கூடிய ஆண்டாகவும் இருக்கும். வியாபாரம் சிறக்கும். இதுவரை உங்களை போட்டு வாட்டி வதைத்த ஆரோக்ய குறைபாடு, உடல் நலனில் ஏற்பட்ட தொடர் தொல்லைகள் நீங்க ஆரோக்யம் மேம்படும்.

குடும்பத்தில் ஒற்றுமை

இந்த ஆண்டு பிரிந்து போன உறவினர்கள் வந்து சேருவார்கள். உங்க துணையுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் கூட நீங்கும். பிரிந்து வாழ்ந்த தம்பதியர்களும் மீண்டும் சேர்ந்து வாழக்கூடிய ஆண்டு. சிலருக்கு வீடு, மனை வாங்கும் யோகம் உண்டு. மாணவர்கள் தேர்வில் சிறப்பாக செயல்படுவீர்கள். கல்வி தொடர்பான அனைத்து முயற்சியும் வெற்றி தரக்கூடிய ஆண்டாகவும் உள்ளது. திருமணத்திருக்கு காத்திருப்பவர்கள் இந்த ஆண்டு நல்ல செய்தி வரும்.

பரிகாரம்:

அருகில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்று அடிக்கடி சென்று வழிபாடு செய்யுங்கள். நவகிரக வழிபாடும் உங்களுக்கு மேன்மையைக் கொடுக்கும். குரு பார்வை உங்க ராசி மீது விழுவதால், வியாழக்கிழமைகளில் குரு பகவானை குரு ஓரையில் விளக்கேற்றி வழிபட நன்மைகள் நடைபெறும்.

New year rasi palan 2023


மகரம்

சனி பகவானை ராசி அதிபதியாக கொண்ட மகர ராசிக்காரர்களே, 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் சனி பகவான் உங்க ராசிக்கு 2 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இருப்பினும், ஏழரை சனியில் இன்னும் இரண்டரை ஆண்டு காலத்தை கடத்த வேண்டியிருக்கும். கடந்த ஐந்து ஆண்டுகளாக எத்தனையோ சோதனைகளை கடந்து வந்த மகர ராசிக்காரர்களே, இந்த ஆண்டு இனி எல்லாமே ஜெயம்தான். அந்த அளவிற்கு சனி பகவான் உங்களுக்கு அற்புதமான நன்மைகளை அள்ளித்தரப் போகிறார். நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள்.

தொழில் வியாபாரத்தில் வருமானம் இரட்டிப்பாகும். கை நிறைய சம்பளத்துடன் நல்ல வேலை கிடைக்கும். மேலும், குரு பகவான் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசிக்கு லாப ஸ்தானம், பாக்ய ஸ்தானம், களத்திர ஸ்தானத்தை பார்வையிடுகிறார்.

திருமண யோகம்

இதனால், கூட்டுத் தொழில் சிறப்படையும். திருமணமான புது தம்பதிகளுக்கு குழந்தை பாக்யம் கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் ஒற்றுமை அதிகரிக்கும். காதலிப்பவர்களுக்கு திருமண யோகம் கை கூடி வரப்போகிறது. அதேபோல், மே மாதத்திற்கு பிறகு குரு பகவான் மூன்றாம் வீடான முயற்சி ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானமான 4 ஆம் வீட்டிற்கு செல்கிறார். இது உங்களுடைய வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும்.

மாணவர்களுக்கு

கல்லூரி மாணவர்களுக்கு கல்வியில் இருந்த சிக்கல்கள் நீங்கி, கல்வியில் வெற்றி பெறுவீர்கள். அரியர் வைத்த மகர ராசிக்காரர்கள் அனைவரும் இந்த வருடம் கிளியர் செய்துவிட்டு வேலைக்கு ரெடியாகி விடுவீர்கள். நிலம் அல்லது சொத்து விற்பனை மற்றும் வாங்குவதல் மூலம் லாபம் உண்டாகும். இன்னும் சிலருக்கு வைகாசி மாதத்திற்கு மேல் புது வீடு கட்டி குடியேறவும் யோகம் உண்டு.

இதில் கவனம் தேவை

அக்டோபர் மாதத்திற்கு பிறகு நிகழப்போகும் ராகு கேது பெயர்ச்சியும் உங்களுக்கு நிறைய நன்மைகளையும் லாபத்தையும் தரப்போகிறது. அதே நேரத்தில் பண சம்பந்தமான விஷயங்களில் மிகுந்த கவனம் தேவை. அவரசப்பட்டு பங்குச்சந்தை முதலீடுகளில் ஈடுபட வேண்டும். அதேபோல், இருக்கின்ற வேலையை சிறப்புடன் செய்ய முயற்சி செய்யுங்கள். புதிய வேலைக்கு முயற்சிக்க இது நல்ல காலமும் இல்லை. இந்த விஷயங்களை தவிர வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றங்கள் அற்புதங்களை ஏற்படுத்தப்போகிறது இந்த 2023.

பரிகாரம்:

அரசு போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற தினமும் சூரிய பகவானை வழிபாடு செய்யுங்கள். வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் அசைவ உணவை தவிர்க்க முயற்சி செய்ய வேண்டும். நிதி பிரச்னைகளை குறைத்துக் கொள்ள பெருமாளை வழிபாடு செய்யுங்கள்.

New year rasi palan 2023


கும்பம்

ஏழரை சனி ஆரம்பித்த நாளில் இருந்தே பிரச்னைக்கு மேல் பிரச்னைதான். இதன் மூலம் எத்தனையோ பாடங்களை கற்றுக்கொண்ட உங்களுக்கு இந்த 2023 புத்தாண்டு நிறைய அனுகூலப் பலன்களை தரப்போகிறது. இருப்பினும், விரைய ஸ்தானத்தில் இருக்கும் சனி பகவான் வருட ஆரம்பத்தில் ஜென்ம ராசிக்கு வரப்போகிறார். ஏழரை சனியில் ஜென்ம சனி நடக்கப்போகிறது. அதாவது, உங்க ராசி அதிபதி ஆட்சி பெற்று அமரப்போகிறார். இதனால், எதையும் நிதானமாக யோசித்து செயல்படுவது நல்லது.

ராசிக்குள் நுழையும் சனி பகவான் இந்த வருடத்தில் உங்களைப் பற்றியும், உங்களைச் சுற்றி இருப்பவர்கள் பற்றியும் உங்களுக்கு புரிய வைப்பார். இதன் மூலம் நிறைய அனுபவங்களை கற்றுக்கொடுப்பார். சனி பகவான் நிறைய சோதனைகளை கொடுத்தாலும் கடைசியில் நன்மைகளை அள்ளிக்கொடுக்கக் கூடியவர். எனவே, மனம்தளராமல் இருக்க முயற்சி செய்யுங்கள்.

மிகுந்த கவனம் தேவை

இந்த காலத்தில் உங்கள் ஆரோக்யத்தில் அக்கறை காட்ட வேண்டியது அவசியம். அதேபோல், உறவினர்களிடமும் சக பணியாளர்களிடமும் பேசும் வார்த்தையில் கவனமாக பேச வேண்டும். எதையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசி மாட்டிக் கொள்ளாதீர்கள். அதேபோல், உங்கள் தொழிலில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஏனெனில் குழப்பமான சூழ்நிலைகள் எழும். உடன் பணிபுரிபவர்கள் உங்களுக்கு தொந்தரவு செய்யலாம். மே - ஆகஸ்ட் வரை வேலையில் சவாலான கட்டத்தை அனுபவிக்க நேரிடும். வாகன விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், மிகுந்த எச்சரிக்கையுடன் இருங்கள்.

மாணவர்களுக்கு

ஆண்டின் தொடக்கத்தில் மாணவர்களுக்கு சிறப்பாக இருக்கிறது. கல்வியில் அதிக கவனம் செலுத்துவீர்கள். எடுத்த எந்த முயற்சியிலும் வெற்றி காண்பீர்கள். ஆனால், மே - செம்டம்பர் வரை மன அழுத்தம் அதிகரிக்கும். கடினமான உழைத்தால் வெற்றி அடைவீர்கள். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு நல்ல வாய்ப்புக் கிடைக்கும்.

பொருளாதார நிலை

2023-ல் கும்ப ராசிக்காரர்கள் நிதி ரீதியாக சில ஏற்ற இறக்கங்களை அனுபவிப்பீர்கள். ஜனவரி மாதத்தில் செலவுகள் அதிகரித்துக் காணப்படும். அதேபோல், வீட்டுச் சூழல் சற்று மோசமாக இருக்கும். ஆனால், ஜனவரிக்கு பிறகு குடும்பத்தில் பிரச்னை குறைந்து ஒற்றுமை மேம்படும். ஏப்ரல் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் உடன்பிறந்தவர்களுடன் ஏற்படும் பிரச்னைகளை தவிர்க்கவும்.

விட்டுக்கொடுப்பது சிறப்பு

எந்த காரியமாக இருந்தாலும் ஒரு முறைக்கு இரண்டு முறை யோசித்து செய்வது நன்மையைத் தரும். கணவன்-மனைவி இடையே சண்டை சச்சரவுகள் வந்தாலும் விட்டுக்கொடுத்து போவது நல்லது. அதிக வேலை காரணமாக உங்களுக்கு உடல் வலிகள் ஏற்படலாம். தேவையில்லாமல், மற்றவரை சந்தேகப்படுவதை தவிர்த்து விடுங்கள்.

பரிகாரம்:

கால பைரவரை வணங்குங்கள், உங்களுக்கு பாதுகாப்பாக இருப்பார். அதேபோல், குல தெய்வம் கோவிலுக்கு சென்று வழிபட்டு வருவது நல்லது. சனிக்கிழமை சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவது நல்லது.

New year rasi palan 2023


மீனம்

குரு பகவானை ராசி அதிபதியாக கொண்ட மீன ராசிக்காரர்களே, உங்க ராசி நாதன் குருபகவான் உங்க ராசியிலேயே இருக்கிறார். இதனால், 2023 ஆம் ஆண்டு மிகவும் அற்புதமான ஆண்டாக அமையப்போகிறது. இத்தனை நாட்களாக தடைபட்ட திருமணம் கைக்கூடி வரும். பிள்ளைகள் மூலம் இருந்து வந்த பிரச்னைகள் விலகி நன்மை நடைபெறும்.

தனவரவு எப்படி இருக்கும்?

மே மாதத்திற்குப் பிறகு உங்களுடைய ராசிக்கு 2ஆம் வீட்டில் குருபகவான் சென்று ராகு உடன் இணைவதால் பொருளாதாரத்தில் திடீர் மாற்றங்கள் ஏற்படும். இருப்பினும், ஜனவரி மாதம் 12 ஆம் வீட்டில் சனி சஞ்சரித்த பிறகு பணம் சம்பந்தமான சின்ன சின்ன பிரச்னைகள் ஏற்படலாம். செலவுகளும் அதிகரிக்கலாம்.

எனவே, தேவையற்ற செலவுகளை தவிர்க்க வேண்டும். அதேபோல், ஏப்ரல் இறுதியில் இருந்து ஆகஸ்ட் நடுப்பகுதி வரை மிகவும் சவாலான நிலையை சந்திக்க நேரிடும். எனவே, இந்த காலக்கட்டத்தில் பெரிய அளவு முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. அதேசமயம், ஆகஸ்ட் மாதத்திற்கு மேல் திடீர் பண ஆதாயங்களை காணலாம்.

வேலை மற்றும் தொழில்

ஆண்டின் ஆரம்பத்தில் சாதகமான பலன்களை பெறுவீர்கள். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வெளிநாட்டில் வேலை எதிர்பார்ப்பவர்களுக்கும் வேலை கிடைக்கும். இருப்பினும், மே - ஜூலை மாதங்களுக்கு இடையில் வேலை இழப்பு மற்றும் வேலை மாற்றம் போன்ற சூழ்நிலைகள் ஏற்படலாம்.

எனவே, எதற்கும் ஆயத்தமாக இருக்க வேண்டியது அவசியம். வியாழன் 7 வது வீட்டிலும் சனி 11 வது வீட்டிலும் இருப்பதால், வணிகத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். லாபம் இருமடங்காக மாறும். இதனால், உங்க தொழில் புதிய உயரத்திற்கு செல்லும்.

இதில் கவனம் தேவை

வாகனத்தால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால், ஜனவரி - மார்ச் வரை வாகனம் வாங்குவதை தவிர்க்கவும். வாகனம் வாங்க வேண்டும் நினைத்தால் மே - ஜூலை காலக்கட்டத்தில் வாங்கிக்கொள்ளலாம். சிலருக்கு சொத்து வாங்குவதற்கு யோகம் உண்டு. இன்னும் சிலர் புது வீடு கட்டி குடியேறவும் வாய்ப்புள்ளது. இந்த ஆண்டு, உடல்நலம் தொடர்பான பிரச்னைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இல்லையென்றால், பெரிய நோயின் பிடியில் சிக்கிக்கொள்ளும் வாய்ப்பு அதிகம்.

திருமண வாழ்க்கை

இந்த வருடம் திருமணமான தம்பதிகளுக்கு அற்புதமாக ஆண்டாக இருக்கும். சனி 11 ஆம் வீட்டிலும், சூரியன் 10 ஆம் வீட்டிலும், வியாழன் 1ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பதால், திருமண வாழ்க்கை அழகாக மாறும். இருவருக்குமிடையே நல்ல அன்பு, பரஸ்பர புரிதல் அதிகரிக்கும். இருவரும் கலந்து பேசி பிரச்னைகளை தீர்த்துக் கொள்வீர்கள்.

ஜனவரி 17 ஆம் தேதி 12 ஆம் வீட்டில் சனி இருப்பதால் குடும்பத்தில் ஒருவருக்கு உடல்நலப் பிரச்னைகள் ஏற்படலாம். இதனால் உங்கள் ஆரோக்யமும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே, கவனமாக இருந்து சிக்கலைத் தீர்க்க முயற்சி செய்யுங்கள். அக்டோபர் மாதத்திற்கு பிறகு அனைத்து பிரச்னையிலிருந்து விடுதலை பெற்று பெருமூச்சு விடுவீர்கள்.

பரிகாரம்:

வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் அம்பாளுக்குச் சர்க்கரைப் பொங்கல் சமர்ப்பித்து வழிபாடு செய்துவந்தால், அனுகூலப்பலன்களை அடையலாம். முடிந்தால், ஒருமுறை திருப்பதி வெங்கடேசப் பெருமாளை தரிசித்து வாருங்கள்; குழப்பங்கள் நீங்கி வாழ்வில் திருப்பம் உண்டாகும்.

Updated On: 3 Oct 2023 10:25 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க