ஊட்டியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சார கூட்டத்தில் மயங்கி விழுந்த பெண்
![ஊட்டியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சார கூட்டத்தில் மயங்கி விழுந்த பெண் ஊட்டியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சார கூட்டத்தில் மயங்கி விழுந்த பெண்](https://www.nativenews.in/h-upload/2024/04/15/1890700-padam.webp)
ஊட்டியில் திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தன்னுடைய பிரச்சாரத்தில், பாஜகவை கடுமையாக விமர்சித்து பேசியிருக்கிறார்.
நீலகிரி தொகுதியில் திமுக வேட்பாளர் ஆ.ராசா போட்டியிடுகிறார்.அவரை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஊட்டி ஏடிசி அருகே பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
"நீலகிரி மாவட்டத்தின் பிரதான பயிரான பச்சை தேயிலைக்கு கிலோவுக்கு ரூ.35 ஆக நிர்ணயிக்க நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரியில் உள்ள சுற்றுலா தலங்கள், சுற்றுலா தல வழித்தடங்கள், இந்தியா சுற்றுலா வளர்ச்சி கழகம் மூலம் மேம்படுத்தப்படும். நீலகிரியில் தந்தை பெரியார் வனவிலங்குகள் சரணாலயம் அமைக்க அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில், அதற்கான பணிகள் விரைந்து தொடங்கப்படும். கோபிசெட்டி பாளையம், மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம், ஈரோடு ஆகிய வழித்தடங்களை உள்ளடக்கிய அகல ரெயில் பாதை திட்டம் நிறைவேற்றப்படும். நீங்கள் போடுகிற ஓட்டு தான், மோடிக்கு வைக்கிற வேட்டு. தமிழ்நாட்டிற்கு இதுவரை பிரதமர் மோடி ஏதாவது செய்து தந்திருக்காரா? சென்னை, நெல்லை, தூத்துக்குடி மழையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க வந்தாரா? வரவில்லை. பேரிடர் பாதிப்புக்கு எந்த நிதியும் அவங்க தரவில்லை.. இப்போ தேர்தலுக்காக அடிக்கடி தமிழகத்திற்கு வருகிறார்கள். ஒரே நாடு, ஒரே திட்டத்தை கொண்டு வரப்போவதாக பாஜக சொல்கிறது. ஆனால், அது நடைமுறையில் சாத்தியம் இல்லை.
ஜெயலலிதா இருந்தவரை தமிழகத்திற்குள் நீட் தேர்வு வரவில்லை. அவர் மறைவுக்கு பிறகான அதிமுக ஆட்சியில் தான் நீட் தேர்வு தமிழகத்திற்குள் வந்தது. நீட் தேர்வு காரணமாக அனிதா முதல் ஜெகதீசன் வரை 22 பேர் தற்கொலை செய்துள்ளனர். நீட் தேர்வு கொண்டு வந்து தமிழக கல்வி உரிமையையும் பறித்து விட்டனர். இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும், தமிழகத்திற்கு நீட் தேர்வில் விலக்கு அளிக்கப்படும். காங்கிரஸ் கட்சியும் தங்களது தேர்தல் அறிக்கையில் இதை பற்றி சொல்லியிருக்கிறது.
மகளிர் உரிமை திட்டம் கொண்டு வரப்பட்டு, மகளிருக்கு மாதம், மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. ஒரு கோடியே 60 லட்சம் பேர் விண்ணப்பித்ததில், ஒரு கோடியே 18 லட்சம் மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் மட்டும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் ஆயிரம் பேர் மகளிர் உரிமை தொகை பெற்று வருகிறார்கள். தேர்தல் முடிந்த 6 மாதத்தில் தகுதியுள்ள அனைத்து மகளிருக்கும் கண்டிப்பாக மகளிர் உதவித்தொகை வழங்கப்படும்.
இவ்வளவு நேரம் நான் இப்போ உங்ககிட்ட பேசிட்டு இருக்கேன் இல்லை? திமுக ஆட்சியில் என்னென்ன சாதனைகள் செய்தோம், என்னென்ன திட்டங்களை கொண்டுவந்தோம்? எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கிறோம் என்றெல்லாம் சொன்னேன் இல்லையா? நான் இப்போது உங்களை ஒன்னே ஒன்னு கேட்கிறன்.
10 வருஷம் ஒரு மனிதர் இந்த நாட்டை ஆண்டு இருக்கிறார்.அவருக்கு 29 பைசா என்று நான் ஒரு பெயரும் வைத்திருக்கிறேன். காரணம் தமிழ்நாட்டில் இருந்து நாம ஜிஎஸ்டி வரி கட்டுகிறோம். மத்திய அரசு அதை வாங்கி பிரித்து அனைவருக்கும் சமமாக தானே தரவேண்டும்? ஆனால், நம்ம கிட்டயிருந்து 1 ரூபாயை வரியாக வாங்கும் மத்திய அரசு வெறும் 29 காசுகளை தான் நமக்கு தருகிறது. ஆனால் யோகி ஆதித்யநாத் ஆளும் உத்தர பிரதேசம் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களில் ஒரு ரூபாய் ஜிஎஸ்டி கட்டினால் 3 ரூபாயாக திரும்பி கிடைக்கிறது. பீகாரில் 1 ரூபாய் கொடுத்தால் 7 ரூபாயை திருப்பிக் கொடுக்கிறது. தமிழ்நாட்டிற்கு மட்டும் 29 பைசாவா?" என்று கேள்வி எழுப்பினார் உதயநிதி.
உதயநிதி தன்னுடைய பேச்சில் பாஜக அரசை கடுமையாக விமர்சிக்கும்போது, 29 பைசா என்று பிரதமரையும் மறக்காமல் விமர்சித்து வருகிறார். இதற்காகவே, ஒரு பெரிய வெள்ளை தாளில், 29 காசு படத்தினை பெரிதாக வரைந்து வைத்திருக்கிறார்.. ஒவ்வொரு தொகுதியிலும் பேசும்போதெல்லாம் அதை எடுத்து, பொதுமக்களுக்கு உயர்த்தி காட்டி, 29 பைசாவுக்கு விளக்கமும் தந்து தருகிறார். அதன்படியே ஊட்டியிலும், அந்த 29 பைசா வெள்ளை பேப்பரை உதயநிதி உயத்தி காட்டவும், கூடியிருந்த திமுகவினர் கைகளை தட்டி முழக்கமிட்டனர். உதயநிதி இன்று ஊட்டியில் பிரச்சாரம் மேற்கொண்டபோது, ஏராளமானோர் காலையிலேயே திரண்டு வந்துவிட்டனர். ஊட்டியில் தற்போது சீசன் என்பதால், வெயில் தென்பட துவங்கி உள்ளது.
பிரச்சார வேனில் உதயநிதி பேசிக் கொண்டேயிருந்தபோது, கூட்டத்தில் ஒரு பெண்ணுக்கு திடீரென மயக்கம் வந்துவிட்டது. இதைப்பார்த்து பதறிப்போன உதயநிதி,அந்தம்மாவை முதல்ல நிழலில் உட்கார வைங்க. அவங்களுக்கு தண்ணி கொடுங்க என்று பதறி சொன்னார் உதயநிதி. அங்கிருந்தவர்கள், அப்பெண்மணிக்கு தண்ணீர் தரவும், அவர் மெல்ல கண் விழித்தார். உடனே உதயநிதி, ஆஸ்பத்திரிக்கு போகணுமா? ஆம்புலன்ஸ் வர சொல்லட்டுமா? என்று கேட்டார். அதற்கு அந்த பெண், வேண்டாம், தற்போது நலமாக இருப்பதாக சொன்னார்.. அதற்கு பிறகே தன்னுடைய பேச்சை துவங்கினார் உதயநிதி.
உதயநிதிக்கு அணிவிப்பதற்காக, ஆளுயர மாலை கொண்டுவரப்பட்டது. ஆனால், அந்த மாலையை வாங்கி, பக்கத்தில் நின்றிருந்த ஆ.ராசாவுக்கு அணிவித்துவிட்டார் உதயநிதி. பிறகு, பிரச்சார வேனில் இருந்த உதயநிதிக்கு, ஒரு சிறுமி சால்வை அணிவிக்க சென்றார்.உடனே உதயநிதி சால்வையை வாங்கிய மறுகணமே, அந்த குழந்தையின் கையை பிடித்து, பத்திரமாக பிரச்சார வேனிலிருந்து இறக்கிவிட்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu