வி.சி.க. முதன்மை செயலாளர் உஞ்சை அரசன் சிகிச்சை பலனின்றி மரணம்

வி.சி.க. முதன்மை செயலாளர் உஞ்சை அரசன் சிகிச்சை பலனின்றி மரணம்

உஞ்சை அரசன்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முதன்மை செயலாளர் உஞ்சை அரசன் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முதன்மை செயலாளர் உஞ்சை அரசன் உடல் நல குறைவினால் மரணம் அடைந்தார்.

தொல். திருமாவளவன் எம்.பி.தலைமையிலான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முதன்மை செயலாளராக பதவி வகித்து வந்தவர் உஞ்சை அரசன். இவரது சொந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உஞ்சை விடுதி என்பதாகும். சென்னையில் தங்கி இருந்து கட்சி பணிகளை ஆற்றி வந்த இவருக்கு கடந்த இரண்டாம் தேதி திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து அவரை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இருதய செயலிழப்பு காரணமாக உஞ்சை அரசன் இன்று உயிரிழந்தார். அவரது உடல் நாளை சொந்த ஊரில் அடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தோழர் உஞ்சை அரசன் இன்று காலை 10மணியளவில் சென்னை தனியார் மருத்துவமனையில் காலமானார். அவரது உடல் கட்சியின் தலைமை யகமான அம்பேத்கர் திடலில் வைக்கப்பட்டு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து பட்டுக்கோட்டை அருகே உள்ள சொந்த ஊருக்கு உடல் கொண்டு செல்லப்படும் அங்கு நாளை (அக்டோபர் 25 )அவருக்கு இறுதி வணக்கம் செலுத்தி அவ்வூரில் நல்லடக்கம் செய்யப்படும். உஞ்சை அரசன் மறைவின் காரணமாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடிகள் ஒரு வார காலத்திற்கு அரைக்கம்பத்தில் பறக்க விட வேண்டும் என அறிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.

Tags

Next Story