மத்திய மந்திரி எல். முருகன் ராஜ்ய சபா எம்.பி. ஆக போட்டியின்றி தேர்வு
மத்திய மந்திரி எல் முருகன் போட்டியின்றி ராஜ்ய சபா எம்பி ஆக தேர்வு செய்யப்பட்டார்.
தமிழகத்தை சேர்ந்த மத்திய இணையமைச்சர் எல் முருகன் போட்டியின்றி மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து மீண்டும் ராஜ்யசபா எம்பியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் எல் முருகன். இவர் தற்போது பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் தகவல் மற்றும் ஒலிப்பரப்புத்துறையின் இணை அமைச்சராக இருக்கிறார். இவர் கடந்த ராஜ்யசபா எம்பியாக தேர்வு செய்யப்பட்டு மத்திய இணையமைச்சராக செயல்பட்டு வருகிறார்.
இவர் கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் மத்திய பிரதேசத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாக செயல்பட்டு வருகிறார். இவரது ராஜ்யசபா எம்பி பதவிக்காலம் வரும் ஏப்ரல் மாதம் 2ம் தேதியுடன் முடிவுக்கு வர உள்ளது
எல் முருகன் மட்டுமின்றி அந்த மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாக தேர்வு செய்யப்பட்டு இருந்த பாஜகவின் அஜய் பிரதாப் சிங், கைலாஷ் சோனி, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் காங்கிரஸ் கட்சியின் ராஜ்மணி பட்டேல் ஆகியோரின் ராஜ்யசபா எம்பி பதவிக்காலமும் வரும் ஏப்ரல் மாதம் 2ம் தேதியுடன் முடிவுக்கு வர உள்ளது.
இதையடுத்து ராஜஸ்தான் மாநிலத்தில் காலியாக உள்ள 5 ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் எல் முருகன் தமிழகத்தில் நீலகிரி தொகுதியில் திமுகவின் ஆ ராசாவை எதிர்த்து களமிறக்கப்படுவார் என்ற செய்திகள் வெளியாகின. இதனால் அவர் மீண்டும் ராஜ்யசபா எம்பியாக தேர்வு செய்யப்படமாட்டார் என கூறப்பட்டது. ஆனால் பாஜக மேலிடம் ட்விஸ்ட் வைத்தது. அதாவது மத்திய பிரதேசத்தில் காலியாகும் 5 ராஜ்யசபா இடங்களுக்கு பாஜக 4 வேட்பாளர்களையும், காங்கிரஸ் ஒரு வேட்பாளரையும் அறிவித்தது. அதன்படி பாஜக சார்பில் மத்திய இணையமைச்சர் எல் முருகனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி எல் முருகன், உமேஷ்நாத் மகாராஜ், பன்சிலால் குர்ஜார், மாயா நாரோலியா, காங்கிரஸ் சார்பில் அசோக் சிங் ஆகியோர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டனர். இவர்கள் அனைவரும் மனுத்தாக்கலும் செய்தனர்.
ராஜ்யசபா எம்பிக்கள் என்பது கட்சி எம்எல்ஏக்கள் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மத்திய பிரதேசத்தில் இப்போது பாஜக ஆட்சி நடக்கிறது. இங்கு மொத்தம் 230 சட்டசபை தொகுதிகள் உள்ளன. கடந்த ஆண்டு இறுதியில் நடந்த தேர்தலில் பாஜக 163 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி 66 தொகுதிகளை மட்டும் கைப்பற்றி இருந்தது. தற்போதைய எம்எல்ஏக்கள் அடிப்படையில் 4 பாஜக வேட்பாளர்களும், ஒரு காங்கிரஸ் வேட்பாளரும் தேர்தல் இன்றியே வெற்றி பெறும் நிலை உருவானது.
இந்நிலையில் தான் இன்று போட்டியின்றி ராஜ்யசபா எம்பிக்களாக தேர்வானவர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. அதன்படி மத்திய பிரதேசத்தில் வேட்புமனு தாக்கல் செய்த எல் முருகன் உள்பட பாஜகவின் 4 வேட்பாளர்களும், காங்கிரஸ் கட்சியின் ஒரு வேட்பாளரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதன்மூலம் எல் முருகன் அடுத்த 6 ஆண்டுகள் ராஜ்யசபா எம்பியாக தொடர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu