பா.ஜ.க.வலையில் சிக்கிய முதல் ஸ்டார் சரத்குமார்: கட்சிக்கு லாபமா? நஷ்டமா?

பா.ஜ.க.வலையில் சிக்கிய முதல் ஸ்டார்  சரத்குமார்: கட்சிக்கு லாபமா? நஷ்டமா?

சரத்குமார்

பா.ஜ.க.வலையில் சிக்கிய முதல் ஸ்டார் நடிகராக சரத்குமார் கருதப்படுகிறார். இது கட்சிக்கு லாபமா? நஷ்டமா? என பார்ப்போம்.

பா.ஜ.க.வில் இணைந்த முதல் ஸ்டார் நடிகர் சரத்குமார் என்ற பெருமையை பெற்றுள்ளார் சரத்குமார். இதன் மூலம் தமிழகத்தில் பா.ஜ.க. மேலும் வளர்ச்சி அடைவதற்கு வாய்ப்பு உள்ளது.

தமிழ் திரை உலகில் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்டு வருகிறார். நடிகர் சரத்குமார் சுப்ரீம் ஸ்டார் என்ற பட்டத்துக்குரியவர். கட்டிளம் காளை போன்ற உடல் அமைப்பு, முக அழகு, பெண்களை வசீகரிக்கும் வகையிலான கம்பீரம் என அத்தனை தகுதிகள் இருந்தும் அவ்வளவு எளிதாக சரத்குமார் தமிழ் திரை உலகில் நாயகனாக அல்ல, நடிகராக கூட என்ட்ரி ஆக முடியவில்லை. அவர் நடித்த முதல் திரைப்படம் சுராங்கனி திரைக்கு வராமலேயே பெட்டிக்குள் முடங்கி போனது.


இதன் காரணாக கண் சிமிட்டும் நேரம் என்ற திரைப்படத்தை தயாரித்து அதில் முக்கிய பாத்திரத்தில் நடிக்கவும் செய்தார் சரத்குமார்.இது தான் நடிகர் சரத்குமாருக்கு முதல் படம் என்றாலும் அவரை தமிழ் திரையுலகம் ஏற்றுக் கொண்டது புலன்விசாரணை என்ற படத்தில் அவர் வில்லனாக நடித்திருந்த பாத்திரம் மூலம் தான். அந்த படத்தில் விஜயகாந்த் கதாநாயகன் வில்லன் சரத்குமார் இந்த படத்தில் நடித்த பின்னர் தான் சரத்குமார் தமிழ் திரை உலகில் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டார் என்பது நிதர்சனமான உண்மை. சரத்குமார் சினிமாவிற்காக பட்ட கஷ்டங்கள் நஷ்டங்கள் கொஞ்ச நஞ்சம் அல்ல.

சென்னை மாநிலக் கல்லூரியில் அவர் படித்த போது மிஸ்டர் தமிழ்நாடு ஆணழகன் பட்டம் பெற்றவர் என்பது கூடுதல் தகவல். கல்லூரி படிப்பை முடித்ததும் ஐபிஎஸ் அதிகாரியாக வேண்டும் என்பது தான் அவரது கனவு. அந்த கனவு ஐபிஎஸ் பயிற்சி கூடாரம் வரை சென்று இறுதியில் கைகூடாமல் போனது தனி கதை.

சரத்குமார் தமிழி சினிமாவில் வளர்ச்சி அடைவதற்கு அவரது அக்காள் கணவரும் திமுகவில் அமைச்சராக இருந்தவருமான கே பி கந்தசாமி பெரிதும் துணை புரிந்தார் என்பதை அவரே பல பேட்டிகளில் நேரடியாக தெரிவித்து இருக்கிறார். இப்படித்தான் அவரது சினிமா உலக என்ட்ரி ஆரம்பத்தில் இருந்தது அதன் பின்னர் தனது திறமையான நடிப்பால் தமிழ் திரை உலகின் நாட்டாமை ஆனார். சூரியவம்சம், நாட்டாமை, சிம்மராசி, சேரன் பாண்டியன், ஐயா இப்படி அவரது பெயரை சொல்லும் படங்களை எண்ணிக்கொண்டே செல்லலாம். அந்த அளவிற்கு தமிழ் திரை உலகின் உச்சத்திற்கு சென்றார் அதனால் தான் அவர் சுப்ரீம் ஸ்டார் என அழைக்கப்பட்டார்.

சரத்குமாருக்கு சினிமா மீது இருந்த ஆர்வம் அரசியலிலும் ஈடுபட வைத்தது அதற்கு காரணம் ஆரம்பத்தில் அவருடைய வாழ்க்கை அதாவது திரை உலகில் அவர் என்டர் ஆகுவதற்கு முன்பு பத்திரிகையாளராக பணிபுரிந்தார் என்பது பலருக்கு தெரியாத உண்மை. தன்னுடைய அக்காள் கணவர் கே பி கந்தசாமி நடத்திய தினகரன் நாளிதழ் அப்போது திமுக ஆதரவு நாளிதழாக இருந்து வந்தது. அந்த நாளிதழின் பெங்களூரு மாநகரின் நிருபர் புகைப்பட கலைஞர் மற்றும் சர்குலேஷன் பொறுப்புகளை ஏற்று திறம்பட நிர்வாகியாக பெயர் எடுத்தவர். அப்போதே அவருக்கு அரசியல் மீது ஒரு நாட்டம் இருந்தது உண்டு இதை பலமுறை அவரே பேட்டிகளில் தெரிவித்து இருக்கிறார் ஆனாலும் அவர் ஆரம்பத்தில் அங்கம் வகித்தது திராவிட முன்னேற்றக் கழகம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினர் ஆனார். அதன் பின்னர் அங்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டு வெளியேறி அதிமுக சார்பில் நாங்குநேரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றி உள்ளார்.

அதன் பின்னர் அந்த கட்சியில் இருந்து விலகி 1991 ஆம் ஆண்டு மூப்பனார் தமிழ் மாநில காங்கிரஸ் ஆரம்பித்தபோது தமிழக முழுவதும் த.மா.கா வேட்பாளர்களை ஆதரித்து சைக்கிள் சின்னத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார் இப்படி அவருடைய அரசியல் பிரவேசம் என்பது பல கட்சிகளில் இருந்து பல்வேறு பதவிகளையும் அவருக்கு பெற்றுக் கொடுத்திருக்கிறது இந்த நிலையில் தான் எத்தனை நாள் பல்லுக்கு தூக்குவது நம்மையும் தொண்டர்கள் தூக்குவதற்கு நாம் ஒரு கட்சி நடத்தினால்தான் முடியும் என்ற கோணத்தில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி என்ற கட்சியை கடந்த 2007 ஆம் ஆண்டு தொடங்கினார் சரத்குமார்.

சரத்குமார் பிறப்பால் காரைக்குடி பகுதியை சேர்ந்தவர் என்றாலும் அவருக்கு நாடார் என்ற ஜாதி அடிப்படையில் தென் மாவட்டங்களில் செல்வாக்கு மிக்க தலைவராக விளங்கினார். இன்றும் சரத்குமார் படங்கள் தென் மாவட்டங்களில் ரிலீஸ் ஆகிறது என்றால் குறிப்பிட்ட இன இளைஞர்கள் ஆரவாரம் செய்வது உண்டு அந்த வகையில் அவருடைய அரசியல் பல்வேறு மாவட்டங்களிலும் அந்த குறிப்பிட்ட சாதியை சேர்ந்த மக்கள் அதிக அளவில் சரத்குமார் ஆதரவு தெரிவித்தனர் ஒவ்வொரு தேர்தலிலும் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டே வருவதில் சரத்குமார் கில்லாடி

அந்த வகையில் தான் நடைபெற உள்ள 2024 நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.விற்கு ஆதரவளிப்பார் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென சரத்குமார் பா.ஜ.க.விற்கு ஆதரவளித்தார் அதனை தொடர்ந்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சிக்கு நெல்லை தொகுதி ஒதுக்கப்படும் அதில் சரத்குமார் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று சரத்குமார் சென்னையில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அங்கு வந்தார் இருவரும் சிறிது நேரம் பேசினார்கள் பின்னர் சரத்குமார் தனது கட்சியை பாரதிய ஜனதா கட்சியுடன் இணைப்பதாக அறிவித்தார் இந்த முடிவு அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்தது. ஆனால் அவர் எந்தவித ரியாக்சனையும் காட்டாமல் சிரித்துக் கொண்டே பேட்டி அளித்தார்.

தேச நலம் இளைஞர்கள் நலம் நாட்டின் பாதுகாப்பு கருதி தனது கட்சியை பாரதிய ஜனதா கட்சியுடன் இணைத்து இருப்பதாக குறிப்பிட்ட சரத்குமார் இது முடிவல்ல தேசிய கட்சியில் என்னுடைய பணியின் தொடக்கம் என்று அதிரடியாக பேட்டியும் அளித்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியை பொறுத்தவரை தமிழகத்தில் குஷ்புவில் தொடங்கி காயத்ரி ரகுராம் முறை திரைப்பட நடிகைகளின் சின்னத்திரை நடிகர் நடிகைகளையும் தான் வளைத்து போட்டு வந்தார்கள் அவர்களது வழியில் இப்பொழுது தான் சினிமா ஸ்டார் ஒருவர் அதுவும் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் சிக்கி இருக்கிறார். அவர் தனது கட்சியின் எதிர்காலம் தேசத்தின் நலம் கருதி இந்த முடிவை எடுத்திருப்பதாக அறிவித்திருப்பது எல்லோரையும் சிந்திக்க வைத்திருக்கிறது.


காரணம் தமிழ் திரை உலகில் இருந்து தேசியக் கட்சியான பாரதிய ஜனதாவில் இணைந்த முதல் நடிகர் சரத்குமார் தான் என்பது குறிப்பிடத்தக்கது சரத்குமார் சிறந்த நடிகர் என்பதால் தமிழக முழுவதும் நன்கு அறியப்பட்டவர் குறிப்பிட்ட சமுதாய மக்களின் வாக்கு வங்கி அவருக்கு கட்டாயம் உண்டு என்பது மறுக்க முடியாத உண்மை .அதே நேரத்தில் அவர் ஒரு நடிகர் என்ற அடிப்படையில் பொதுவான வாக்குகளும் அவருக்கு விழுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

அந்த வகையில் பாரதிய ஜனதாவில் சரத்குமார் தன்னை இணைத்துக் கொண்டது பாரதிய ஜனதாவிற்கு ஒரு பெரிய வளர்ச்சியாகவே கருதப்படுகிறது. நிச்சயமாக பாரதிய ஜனதா தனது வாக்கு வங்கியை பலப்படுத்துவதற்கு சரத்குமாரின் ஆதரவு கை கொடுக்கும் என்பதில் ஐயமில்லை. நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியின் முக்கிய பிரச்சார பீரங்கியாகவும் சரத்குமார் விளங்குவார் என்பதில் ஐயமில்லை.

Tags

Next Story