ராஜேந்திர பாலாஜியை நெருங்கியது போலீஸ் : இன்று இரவு கைதாக வாய்ப்பு

ராஜேந்திர பாலாஜியை நெருங்கியது போலீஸ் : இன்று இரவு கைதாக வாய்ப்பு

முன்னாள் அமைச்சர் ராஜந்திர பாலாஜி

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை தனிப்படை போலீசார் நெருங்கிவிட்டதாகவும், இன்று இரவே கைதாக வாய்ப்பு உள்ளதாகவும் போலீசார் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதவி வகித்த துறையில் ஆட்சியில் இருந்த போதே பல்வேறு புகார்கள் எழுந்தன. அவரை அமைச்சர் பதவியில் இருந்து கூட நீக்க வாய்ப்பு என்று அதிமுக ஆட்சி காலத்திலேயே அதிகம் பேசப்பட்டது.

அமைச்சர் பதவியை தக்க வைக்க முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பாஜக அடிப்படை உறுப்பினர் போலவே பேசியும் வந்தார். அவர் அமைச்சராக இருந்தபோது அவர் பேசயி அத்துமீறிய பேச்சுக்கள் திமுகவை சீண்டுவதாகவே இருந்தது என்று கூறப்படுகிறது.

திமுக ஆட்சி அதிகாரத்திற்கு வந்த உடனேயே எப்படியும் வழக்குகளில் முதல் ஆளாக ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்படுவார் என்று பரவலாக பேசப்பட்டது. இந்த நிலையில் ஆவின் உள்ளிட்ட அரசு நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடமும் ரூ.3 கோடி வரை பணம் பெற்று பணி வழங்காமலும்,, பணத்தையும் திருப்பி கொடுக்காமலும் ஏமாற்றியதாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அவரின் தள்ளுபடி செய்யப்பட்டது. தொடர்ந்து, அவரை கைது செய்யும் முனைப்பில் தமிழக போலீசார் இருந்தனர். ஆனால், முன்ஜாமீன் கிடைக்கவில்லை என்றதும் கடந்த வெள்ளிக்கிழமையே ராஜேந்திர பாலாஜி தலைமறைவானார். விருதுநகரில் அதிமுக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர் அப்படியே எஸ்கேப்பாகி விட்டார்.

இதையடுத்து இவரை பிடிப்பதற்காக குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கணேஷ் தாஸ் தலைமையில் 6 தனிப்படை அமைக்கப்பட்டது. தென் மாவட்டங்கள், வடமாவட்டங்கள், சென்னை என்று தனி தனியாக தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. அவர் பெங்களூருவில் பதுங்கியிருப்பதாகவும் ஒரு தகவல் வெளியானது. இதனால், பெங்களூரு விரைந்த ஒரு தனிப்படை, அங்கு அவரை தீவிரமாக தேடி வருகிறது.

ராஜேந்திர பாலாஜியுடன் தொடர்பில் இருந்த 600 பேரின் செல்போன் எண்களை சைபர் கிரைம் போலீசார் கண்காணித்து வருகின்றனர். மேலும், அவருக்கு நெருக்கமானவர்களும் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். ஆனாலும், போலீசாரால் இதுவரை ராஜேந்திர பாலாஜியை பிடிக்க முடியவில்லை.

திமுக தயாரித்து வைத்துள்ள ஹிட் லிஸ்டில் முக்கிய இடம் பிடித்தவரான ராஜேந்திர பாலாஜி போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து வருவது முதலமைச்சர் ஸ்டாலினை மூடு அவுட் ஆக்கியுள்ளதாக கூறப்படுகிறது. எனவே, முன் ஜாமீன் மறுக்கப்பட்டதும் அவரை சூட்டோடு சூடாக கைது செய்யாதது ஏன் என்று போலீசாரை ஸ்டாலின் கடுமையாக பேசியதாகவும் கூறப்படுகிறது. . இதனால், ராஜேந்திர பாலாஜி விவகாரத்தில் போலீசார் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்.

போலீசாரின் கண்காணிப்பு வளையத்துக்குள் இருப்பவர்கள் ராஜேந்திர பாலாஜியுடன் பேசினால் அதை வைத்து அவரின் இருப்பிடத்தை கண்டுபிடிக்கும் வகையில் போலீசார் கண்காணித்து வருகிறனர். அதன்படி, பழைய மாடல் போன் மூலம் ராஜேந்திர பாலாஜி புது சிம் போட்டு பயன்படுத்தி வருவதை போலீசார் கண்டுபிடித்துவிட்டதாக கூறப்படுகிறது.

புதிய சிம் கார்டில் இருந்து ராஜேந்திர பாலாஜிக்கு நெருக்கமானவர்களுக்கு கால்கள் சென்றுள்ளது. அதுபோல மிகவும் நெருக்கமானவர்களும் அந்த நம்பருக்கு கால் செய்து பேசியதையும் போலீசார் கண்டுப்பிடித்து விட்டதாக கூறப்படுகிறது

இதன் மூலம் ராஜேந்திர பாலாஜி பெங்களூருவில் இருக்க அதிகம் வாய்ப்பு உள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. உளவுத்துறை போலீசாரும் ராஜந்திர பாலாஜி பெங்களூரில் இருக்கலாம் என்று உறுதி செய்துள்ளனராம். இதனால் இவரை பிடிக்க ஏற்கனவே தனிப்படை போலீசார் பெங்களூருவில் காத்து உள்ளனர்.

மேலும் ஒரு தனிப்படை போலீசார் பெங்களூருவுக்கு விமானம் மூலம் சென்றுள்ளனர். எனவே ராஜேந்திர பாலாஜி இன்று இரவே கைதாக வாய்ப்புள்ளதாக தமிழக போலீசார் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Tags

Next Story