மேகதாதுவில் அணை: கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் மீண்டும் வலியுறுத்தல்
மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பாக கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் மத்திய அரசை மீண்டும் வலியுறுத்தி உள்ளார்.
HIGHLIGHTS
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பாக கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் மீண்டும் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து உள்ளார்.
தமிழகத்திற்கு காவிரி நீரை வழங்குவது தொடர்பாக காவிரி நடுவர் மன்றம் ஏற்கனவே இறுதி தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்த தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு நீர் பங்கீடு பற்றி கண்காணிப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின்படி காவிரி நீர்பாசன பகுதிகளில் கர்நாடகமோ தமிழகமோ புதிதாக எந்த ஒரு அணையும் கட்டக்கூடாது. ஆனால் கர்நாடகம் நடுவர் மன்ற தீர்ப்பிற்கு எதிராக காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிதாக ஒரு அணை கட்ட திட்டமிட்டு உள்ளது. இதற்காக நிதி ஒதுக்கீடு செய்து ஆய்வு பணிகளையும் மேற்கொண்டு உள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் மேகதாதுவில் அணை கட்ட ஒன்பது ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என கூறப்பட்டு இருந்தது.
இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் அரசு பதவி ஏற்றதும் துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் கர்நாடக மாநிலத்தின் நீர்ப்பாசன துறை அதிகாரிகளை கூட்டி ஒரு ஆலோசனை கூட்டம் நடத்தினார். அதில் மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை விரைவாக முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதற்கு தேவையான அனைத்து அனுமதியையும் டெல்லியில் மத்திய மந்திரிகளிடம் பேசி வாங்கி தர தான் தயாராக இருப்பதாகவும் பேசினார்.
இதனை தொடர்ந்து தற்போது சிவகுமார் மீண்டும் மத்திய அரசுக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். கர்நாடக மாநிலத்தின் அனைத்து நீர்ப்பாசன திட்டங்களையும் தமிழகம் எதிர்த்து வருகிறது. இதனால் கர்நாடகம் பாதிக்கப்படுகிறது. எனவே தமிழ்நாட்டுடன் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.