/* */

தமிழகத்தில் நான்கு முனை போட்டி! வெல்லப்போவது யார்?

தமிழகத்தில் பெரும்பாலும் வெற்றி, தோல்வியை கூட்டணி கணக்குகள் நிர்ணயிக்கும் விதத்தில்தான் வாக்குகள் பதிவாகும் என்பது தேர்தல் வரலாற்றின் பல பக்கங்கள் உறுதி செய்கின்றன

HIGHLIGHTS

தமிழகத்தில் நான்கு முனை போட்டி! வெல்லப்போவது யார்?
X

தமிழகத்தில் நாடாளுமன்றத்தில் நான்கு முனை போட்டி நிலவுவதால் உச்சகட்ட எதிர்பார்ப்பு நிலவுகிறது.

18-வது மக்களவைக்கான முதற்கட்டத் தேர்தல் தமிழகத்தில் வரும் 19-ம் தேதி நடைபெற இருக்கிறது. அதற்கான வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது. வேட்பு மனு தாக்கலில் பெரும் பரபரப்பு இல்லாவிட்டாலும், அரசியல் கட்சிகளின் சதுரங்க நகர்த்தல்கள் உச்சத்தில் இருந்தன.

கூட்டி, கழித்து, அனைத்துக் கட்சிகளும் கிட்டத்தட்ட ஒவ்வொரு அணியில் ஐக்கியமாகிக் கொண்டன. எனவே, தற்போது உறுதியாக தமிழகத்தில் 4 முனைப் போட்டி நிலவுகிறது. அதில், கடந்த முறை தமிழகத்தில் மகத்தான வெற்றிப் பெற்ற திமுக தலைமையிலான “ஐஎன்டிஐஏ”, பாஜக தலைமையிலான தே.ஜ.கூ , அதிமுக தலைமையிலான ஓர் அணி மற்றும் தனித்துக் களமிறங்கும் நாம் தமிழர் என நான்கு அணிகள் போட்டியிடுகின்றன.

இதில் திமுக-வைப் பொறுத்தமட்டில், கடந்த தேர்தலின் போது இடம்பெற்ற கட்சிகளே இம்முறையும் அணியில் உள்ளன. திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலைச்சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொமதேக ஆகிய கட்சிகள் தேர்தலில் போட்டியிடுகின்றன. இவை தவிர்த்து, கமல்ஹாசனின் ம.நீம மற்றும் சிறு, குறு என பல கட்சிகளும், அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

பாஜக அணியைப் பொறுத்தமட்டில், பாமக, தமாகா, புதிய நீதி கட்சி, அமமுக, ஓபிஎஸ் தரப்பு, இந்திய ஜனநாயக கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகியவை தேர்தலில் களமிறங்க உள்ளன. இந்த அணிக்கும் சில சிறு கட்சிகளின் ஆதரவு இருக்கிறது.

மெகா கூட்டணி அமைப்போம் எனக் கூறி வந்த அதிமுக-வைப் பொறுத்தமட்டில், தேமுதிக, எஸ்டிபிஐ மற்றும் புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் தேர்தலில் போட்டியிடுகின்றன. இந்த அணிக்கும் வெளியிலிருந்து சிலர் ஆதரவு தெரிவிக்கின்றனர்.

நாம் தமிழர் கட்சியைப் பொறுத்தமட்டில், இந்தமுறையும் தனித்தே 40 தொகுதிகளிலும் களம் காண்கிறது. விரைவில், அனைத்து வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தும் விழாவுடன், பரப்புரையைத் தொடங்குகிறார் அக் கட்சியின் தலை, சீமான்.

இந்த நான்கு முனைப் போட்டியில், திமுக அணியில் பெரும்பாலான கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துவிட்டனர். பாஜக-வில் சிறு கட்சிகள் மட்டுமே வேட்பாளர்களை அறிவித்துள்ளன. அதிமுக அணியில், முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. நாம் தமிழரில் பல வேட்பாளர்கள் முன்னரே அறிவிக்கப்பட்டு விட்டனர். எனவே, இம்முறை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துவிட்டது.

இந்த நான்கு அணிகளில், திமுக அணி, வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் அறிக்கை வெளியீடு, வரும் வெள்ளிக்கிழமை முதல் ஸ்டாலின் பரப்புரை என கிடுகிடுவென போட்டியில் முந்துகிறது. பாஜக மற்றும் அதிமுக-வில் தற்போதுதான் தொகுதி உடன்பாடே முடிந்திருக்கிறது. எனவே, பாஜக-விற்கு டெல்லி தலைமை எப்போது வெளியிடுகிறதோ, அப்போதுதான் தேர்தல் அறிக்கை. விரைவில் மக்களைக் கவரும் அம்சங்களுடன் அறிக்கை வெளியிடுவோம் எனக் கூறியுள்ளது அதிமுக. நாம் தமிழர் அறிக்கை குறித்து எந்தத்தகவலும் அதிகாரப்பூர்வமாக இதுவரை இல்லை.

சென்ற தேர்தலில் அதிமுக அணியில் அதிமுக 18.48, பாஜக 3.66, பாமக 5.42, தேமுதிக 2.19 என மொத்தம் 29.75 சதவீத வாக்குகளை பெற்றன

திமுக கூட்டணியில் திமுக 32.76 காங்கிரஸ் 12.76, இந்திய கம்யூனிஸ்ட், 2.43, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2.4 என மொத்தம் 50.35 சதவீத வாக்குகளை பெற்றது

நாம் தமிழர் கட்சி 3.89 சதவீத வாக்குகளை பெற்றது

கடந்த தேர்தலின் வாக்குச் சதவீதங்கள், இந்த முறை பல்வேறு ஊடகங்கள் நடத்திய தேர்தல் கணிப்புகள் ஆகியவற்றில், தமிழகத்தைப் பொறுத்தமட்டில் திமுக அணி அமோகமாக முந்துகிறது. ஆனால் பாஜக பரப்புரையில் மோடி, இம்முறை தமிழகத்தில் திடீர் திருப்பம் ஏற்படும். எதிர்பாராத தோல்வியை திமுக அணி சந்திக்கும் எனப் பேசியுள்ளார்.

மறுபக்கத்தில், எதிர்பார்த்த கூட்டணி அமையாவிட்டாலும், அதிமுக-வின் பலம் தேர்தலில் எதிரொலிக்கும் என்றும் தனித்துப் போட்டியிட்டு வெற்றிக் கண்ட ஜெயலலிதா போல், தாங்களும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் எடப்பாடி. வழக்கம்போல், குறிப்பிட்ட சதவீத வாக்குகளைக் கவர்ந்து, முத்திரைப்பதிக்கும் முயற்சியில் உள்ளார் சீமான்.

இந்த தேர்தலில் அரசுகளுக்கு எதிராக சில, பல கோபம் இருந்தாலும், எதிர்ப்பு அலை எதுவும் பெரிய அளவில் காணப்படவில்லை. ஆனால், தமிழகத்தில் பெரும்பாலும் வெற்றி, தோல்வியை கூட்டணி கணக்குகள் நிர்ணயிக்கும் விதத்தில்தான், வாக்குகள் பதிவாகும் என்பது தேர்தல் வரலாற்றின் பல பக்கங்கள் உறுதி செய்கின்றன. இந்தத் தேர்தலில், கூட்டணி மட்டுமல்ல, கட்சிகளின் வாக்குறுதிகளும் முக்கிய பங்காற்றும் .

இந்தியா முழுவதும் ஒரு கணக்கு என்றால், தமிழகத்தில் ஒரு தனி கணக்கு வாக்காளர்கள் மத்தியில் எப்போதுமே இருக்கும். இந்தமுறை திமுக அணி அனைத்திலும் வெற்றி பெறுமா? அல்லது பாஜக அணி அதிர்ச்சி கொடுத்து வெற்றிக்கனியைத் தட்டிச் செல்லுமா? அல்லது அதிமுக-வின் இரட்டை இலை வெற்றிச்சின்னமாக மாறுமா?, சீமான் வெற்றிக்கணக்கை தொடங்குவாரா? என பல கேள்விகள் எழுகின்றன.

வரும் 19-ம் தேதி, இந்த தேர்தலில் தமிழக மக்களவை தேர்தலில் வாக்காளர்கள் தங்கள் வாக்கை பதிவு செய்கிறார்கள். ஜூன் 4-ம் தேதி தமிழகத்தின் வெற்றியாளரை நாம் அனைவரும் காண இருக்கிறோம்.

Updated On: 21 March 2024 6:21 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்