தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிக்க மதுரையில் கருத்து கேட்ட கனிமொழி எம்.பி.

தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிக்க மதுரையில் கருத்து கேட்ட கனிமொழி எம்.பி.

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி எம்பி.

தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிக்க மதுரையில் கனிமொழி எம்.பி. கருத்து கேட்டு உள்ளார்.

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்காக 'உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்' - DMKManifesto2024' என்ற பெயரில் கோரிக்கை மனுக்களை மக்களை நேரில் சந்தித்து பெறும் பணியை தொடங்கியுள்ள திமுகவின் நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு. திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி. தலைமையிலான நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் சுற்றுப்பயணத்தின் மூன்றாம் நாளான இன்று (07/02/2024) மதுரை பாண்டிகோவில் அருகே நடைபெற்றது. இதில் மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

விவசாயிகளின் பிரதிநிதிகள், தொழில் முனைவோர், கல்வியாளர்கள், தொழிற்சங்கங்கள், மாணவர் சங்கங்கள், கிறிஸ்தவ, இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் சங்கங்கள், தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள், திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்த தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினருடன் கலந்துரையாடி தங்களின் கோரிக்கைகளை வழங்கினர்.

கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி எம்பி கூறியதாவது:-

அனைத்து தரப்பு மக்களை சந்தித்து தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டியவை குறித்து கேட்டோம். ஜி.எஸ்.டியால் பாதிக்கப்பட்டுள்ளதாக சிறு, குறு தொழில் முனைவோர் கருத்து தெரிவித்துள்ளனர். திமுகவின் சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளது. மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை பாஜக நிறைவேற்றவில்லை.

தென்மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு தரும் நிதி உள்ளிட்டவை குறைந்து கொண்டே வருகிறது. கல்விக்காக ஒதுக்கப்படும் நிதி குறைந்து கொண்டே வருகிறது. இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு ஒரு பைசா கூட வரவில்லை. சென்னை, தென்மாவட்ட வெள்ள பாதிப்பை மூத்த ஒன்றிய அமைச்சர்கள் ஆய்வு செய்தும் நிதி தரவில்லை. ரயில்வே உள்ளிட்ட திட்டங்களுக்கு தென் மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு பாரபட்சம் காட்டுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

தி.மு.க. செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், திமுக விவசாய அணிச் செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன், தக­வல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழ­னி­வேல் தியா­க­ரா­ஜன், சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ, மற்றும் தமிழக அரசு தலைமைக் கொறடா கோவி.செழியன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஆகியோர் பரிந்துரைகளை மக்களிடமிருந்து பெற்றனர்.

தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து முடித்ததும் கட்சி நிர்வாகிகள் தெரிவித்த கருத்துகள் மற்றும் பொது மக்கள் தெரிவித்த கருத்துகள் அனைத்தும் ஆய்வு செய்யப்படும். அவை அனைத்தும் தொகுக்கப்பட்டு தி.மு.க. தேர்தல் அறிக்கையாக இறுதி செய்யப்படும். மேலும், பொதுமக்களிடம் கருத்துக்கேட்கும் நடைமுறை துவங்கியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவிற்குப் பரிந்துரைகளை எழுத்துப்பூர்வமாகவோ, சமூகவலைதளங்கள் மூலமாகவோ, தொலைபேசி, மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்ப பொதுமக்களுக்கு தி.மு.க. தலைமை வேண்டுகோள் விடுத்துள்ளது. அடுத்த மாதம் முதல் வாரத்தில் தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியாக வாய்ப்பு உள்ளது.

Tags

Next Story