தி.மு.க. ஆட்சியின் அவலம் பற்றி எடப்பாடி பழனிசாமி பரபரப்பு குற்றச்சாட்டு

தி.மு.க. ஆட்சியின் அவலம் பற்றி எடப்பாடி பழனிசாமி பரபரப்பு குற்றச்சாட்டு
X

தூத்துக்குடி விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்தார்.

தி.மு.க. ஆட்சியின் அவலம் பற்றி எடப்பாடி பழனிசாமி பரபரப்பு குற்றச்சாட்டுகளை சுமத்தி உள்ளார்.

அரசு மருத்துவமனைக்கு கையுடன் சென்றால் கை இல்லாமல் வருவது தான் இன்றைய நிலைமை என தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்தில் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி சுவாமி தரிசனம் செய்தார். அங்கிருந்து கார் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வந்த அவருக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அவர் செய்தியாளரிடம் பேசும்போது கூறியதாவது:-

அம்மாவின் ஆட்சி காலத்தில் காவலர்களுக்கு மன அழுத்தத்தை போக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தோம். கோவை சரக டி.ஐ.ஜி. விஜயகுமாருக்கு ஆறுமாத காலம் மன அழுத்தம் இருந்ததாக கூறப்படுகிறது. அப்படி மன அழுத்தம் இருக்கும் நபருக்கு ஏன் பணி சுமை வழங்கினர் என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழகத்தில் இன்று காவலர் மன அழுத்த பயிற்சி நிறுத்தப்பட்டுள்ளது. என தகவல் வந்துள்ளது. கோவை சரக டி.ஐ.ஜி. விஜயகுமார் தற்கொலை சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

அமைச்சர் ரகுபதி மீது ஊழல் குற்றசாட்டு உள்ளது அவர் ஊழல் குறித்து பேச தகுதியும் அருகதையும் இல்லாதவர். எனவே அவர் ஊழல் குறித்து ஆளுனருக்கு கடிதம் எழுத அவருக்கு தகுதி இல்லை.

மேலும் ஊழல் குற்றச்சாட்டு தொடர்புடைய அமைச்சர்கள் நீதிமன்றத்தில் தி.மு.க.வால் நியமிக்கப்பட்டுள்ள அரசு வழக்கறிஞர்கள் சரியான விவாதம் செய்யாத காரணத்தினால் சொத்து குவிப்பு வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு வருகிறார்கள்.

மகளிர் உரிமைத்தொகை என்பது நடைமுறைக்கு வருமா என்பதே சந்தேகமாக உள்ளது வரட்டும் பாப்போம். கவர்னர் டெல்லி சென்று இருப்பது பேப்பர், டிவி செய்தி மூலம் தெரிந்து கொண்டேன். எதற்கு சென்றார் என தெரியாது.

அ.தி.மு.க. நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகின்றது.ஆகஸ்ட் 20-பிரமாண்ட மாநாடு நடைபெற இருக்கின்றது முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.தி.மு.க-தான் பி.ஜே.பி.க்கு அடிமை அ.தி.மு.க. யாருக்கும் அடிமை இல்லை.

தி.மு.க-தான் நடுங்கிபோய் இருக்கின்றது. அ.தி.மு.க. யாருக்கும் நடுங்கி பயந்து இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஐ..டி ரைடால் தி.மு.க. எப்படி பயந்து போனது என்பதை குறித்து டி ஆர் பாலுவே விளக்கம் கொடுத்துள்ளார்.

தி.மு.க. கட்சிக்கு கொள்கை கோட்பாடு கிடையாது அவர்கள் ஆட்சிக்கு வர என்னவேண்டுமானலும் செய்வார்கள்.மக்களை பற்றி என்றும் கவலைப்படும் கட்சி அ.தி.மு.க மட்டும்தான்.

தி.மு..க எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகின்றதோ அப்போதெல்லாம் விலை உயர்வு 70-சதவீதம் உயர்வது வழக்கம். தகுதியற்ற ஆட்சியினால் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. அரசு மருத்துவமனையில் தரமற்ற மருத்துவம் நடைபெறுகிறது.

சளிக்கு ஊசி போட போனால் நாய்கடிக்கு ஊசி போடும் அவலம் ஏற்பட்டுள்ளது. மேலும் அரசு மருத்துவமனைக்கு கையுடன் சென்றால் கை இல்லாமல் வெளியே வருகிறார்கள். ஆனால் அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் கை இல்லாமல் மருத்துவமனைக்கு சென்றால் கையுடன் திரும்புவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story