கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியாதது தான் திராவிட மாடல் அரசு: பா.ஜ.க. குற்றச்சாட்டு

கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியாதது தான் திராவிட மாடல் அரசு: பா.ஜ.க. குற்றச்சாட்டு

கோவில்பட்டியில் நடைபெற்ற பா.ஜ..க செயற்குழுக் கூட்டத்தில் முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பா பேசினார்.

கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியாதது தான் திராவிட மாடல் அரசு என பா.ஜ.க. மாநில துணை தலைவர் சசிகலா புஷ்பா தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மந்திதோப்பு சாலையில் உள்ள தூத்துக்குடி வடக்கு மாவட்ட பா.ஜ.க. அலுவலகத்தில் வைத்து மாவட்ட செயலாளர் வெங்கடேசன் சென்னே கேசவன் தலைமையில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும் பா.ஜ.க. மாநில துணைத் தலைவருமான சசிகலா புஷ்பா கலந்துகொண்டு பேசினார். தேர்தல் பூத் கமிட்டி அமைப்பது, கடந்த 9 ஆண்டுகளில் பாரதப் பிரதமர் மோடி செய்த சாதனைகள் குறித்து வீடு வீடாகச் சென்று மக்களிடம் எடுத்துரைப்பது குறித்தும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் பா.ஜ.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


தொடர்ந்து, பா.ஜ.க. மாநில துணைத் தலைவர் சசிகலா புஷ்பா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியின் அராஜகத்தையும், மோடி ஆட்சியின் சாதனைகளையும் மக்களுக்கு எடுத்துரைக்கு வாய்ப்பாக அமையும் வகையில் இந்த செயற்குழு கூட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்திற்கு பாரத பிரதமர் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கயத்தார், கோவில்பட்டி, விளாத்திகுளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் திட்டத்தை கொண்டு வந்துள்ளார்.

ஆனால் கனிமொழி இது என்னவோ தி.மு.க. ஆட்சி கொண்டு வந்தது போல் அவர் திறந்து வைக்கிறார். முத்ரா திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு பாரத பிரதமர் அதிக அளவு கடனை வழங்க நிதி ஒதுக்கி உள்ளார். தமிழ் மொழியின் மீது மிகுந்த அக்கறையும் ஆர்வம் கொண்டு தமிழை வளர்க்க பெரும் ஆர்வம் காட்டி வருகிறார் பிரதமர் மோடி.

ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் பட்டப் பகலில் அரசு அதிகாரி வெட்டி படுகொலை செய்யபட்டதுதான் திராவிட ஆட்சி மாடல். இந்த விவகாரத்தில் கனிமொழியும் ,தமிழக அரசும் நீலி கண்ணீர் வடிக்கிறது. கள்ளச்சாரயத்தை கட்டுப்படுத்த முடியாத அரசு தான் திராவிட மாடல் அரசு.

தூத்துக்குடியில் மாவட்டத்தில் கஞ்சா நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இதனை தடுக்க காவல்துறை தவறிவிட்டது. கனிமொழி தூத்துக்குடி மாவட்டத்திற்கு வந்த பிறகு காவல்துறை முழு சுதந்திரமாகவும் நேர்மையாகவும் செயல்பட முடியவில்லை. அவற்றை ஆதாரத்தோடு மக்களிடம் கொண்டு செல்ல இருக்கிறோம்.

கனிமொழி எம்.பிக்கும் அமைச்சர் கீதா ஜீவனுக்குக்கும் மாவட்டத்தில் மோதல் போக்கு தான் நிலவுகிறது. இதனை மக்களிடம் வீடுவிடாக சென்று எடுத்துரைக்க உள்ளோம். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்து கட்சி தலைமை தான் முடிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags

Next Story