பிரதமர் மோடியை எதிர்த்து போட்டி: நாம் தமிழர் கட்சி சீமான் அறிவிப்பு

பிரதமர் மோடியை எதிர்த்து போட்டி: நாம் தமிழர் கட்சி சீமான் அறிவிப்பு
X

காயல்பட்டினத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.

நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி தமிழ்நாட்டில் போட்டியிட்டால் அவரை எதிர்த்து போட்டியிடுவேன் என சீமான் தெரிவித்தார்.

திருச்செந்தூர் அருகேயுள்ள காயல்பட்டினத்தில் நாம் தமிழர் கட்சியின் மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அபூபக்கர் சித்திக், சைனப் அபிபா திருமணம் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மாநில கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மணமக்களை வாழ்த்தி பேசியதாவது:-

மேடையில் அரசியல் பேச வேண்டாம் என்று சொன்னார்கள். நாங்கள் சந்தர்ப்பத்திற்கு பேசுபவர்கள் கிடையாது. சத்தியத்தை பேசுபவர்கள். அரசியல் என்பது வாழ்வியல். அது இல்லாமல் எதுவும் கிடையாது. அபூபக்கர் சித்திக் இந்து மதப் பெண்ணை திருமணம் செய்துள்ளார். சீமான் மதமாற்றுகிறார் என்று இந்துக்கள் கூட சொல்லவில்லை. ஆனால் இஸ்லாமியர்கள் தான் சொன்னார்கள்.

மணப்பெண்ணின் பெயர் நேற்று வேறு அவருடைய மதம் வேறு, வழிபாடு வேறு இன்று அவர் சைனப் அபிபா. நேற்று அவள் பெரும்பான்மை இன்றிலிருந்து அவள் சிறுபான்மை என்று சொன்னால் உங்களுக்கு கோபம் வருதா இல்லையா?. எனக்கு கோபம் வரனுமா இல்லையா?. அதனால்தான் சிறுபான்மை என்று சொன்னால் செருப்பால் அடிப்பேன் என்று சொன்னேன்.

நான் தமிழன். பெரும்பான்மை தேசிய இனத்தின் மகன். மதம் மாறினாலும் அந்தப் பெண்ணின் மொழியும் இனமும் தமிழர் என்பதை மாற்ற முடியுமா?. உங்களுக்கு கோபம் வரவில்லை என்றால் இருங்கள் எனக்கு கோபம் வரும் நான் கோபக்கார தலைவனின் மகன் அப்படிதான் இருப்பேன் என் பிள்ளைகளும் அப்படித்தான் இருப்பார்கள்.

பெரியார் சொன்னது போல் நான் பேசுவதில் நல்லது இருந்தால் எடுத்துக் கொள்ளவும். கெட்டது இருந்தால் விட்டு விடுங்கள். 18 சதவீத ஜிஎஸ்டியில் சிறுபான்மை மக்களுக்கு 10 சதவீத ஜிஎஸ்டியா? விதிக்கப்பட்டுள்ளது. இதில் என்ன பெரும்பான்மை சிறுபான்மை என்று பேசுவது.

அரசியல் சாசனத்தில் சிறுபான்மை இன மக்களுக்கு சலுகைகள் மட்டும் தான் கொடுக்கப்பட்டு உள்ளது. விடுதலை பெற்ற இந்தியாவில் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் எத்தனை பேர் பிரதமராக இருந்துள்ளார்கள். ஒன்றுக்கும் பயன்படாத ரப்பர் ஸ்டாம்பு பதவியை அப்துல் கலாமிற்கு கொடுத்தார்கள். இந்த நிலத்தில் சிறுபான்மையினருக்கு தேவைப்படுவது உரிமை. சலுகைகள் அல்ல.

காயல்பட்டினம் தி.மு.க.வின் கோட்டை என்றார்கள். அந்த கோட்டையில் ஓட்டையை போட்டு என்னுடைய கோட்டையாக மாற்றக்கூடிய புரட்சியாளன் நான். எல்லாம் மாறும். நீங்க எங்கு சென்றாலும் நான் உங்கள் கூட தான் இருப்பேன்.

என்னை எப்போது நம்ப போறீங்க என்று தெரியவில்லை. ஒரு வேலை பிரதமர் மோடி தமிழ்நாட்டில் தேர்தலில் போட்டியிட்டால் எனக்கு ஒரு விடிவு காலம் வரும். ஏனென்றால் நான் அவரை எதிர்த்து போட்டியிடுவேன். உண்மையிலே இவன் டப் தான் கொடுக்கிறான். சண்டைதான் போடுகிறான் என்று என்னை நம்புவீர்கள்.

இவ்வாறு சீமான் பேசினார்.

Tags

Next Story