சீமான் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருச்சி போலீஸ் கமிஷனரிடம் புகார்
சீமான் மீது மனு கொடுக்க வந்த தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்ககோரி திருச்சி மாநகர போலீஸ் கமஷனரிடம் புகார் மனு அளிக்கப்பட்டு உள்ளது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீபத்தில் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்கள் குறித்து தெரிவித்த கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா அளித்த கருத்துகளும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிறுபான்மையினர் நான் வருத்தம் தெரிவித்தால் மட்டும் கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் எனக்கு வாக்கு அளித்து விடுவார்களா? என்றும் கேள்வி எழுப்பிய சீமான் தமிழகத்தில் உள்ள இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் தமிழர்கள் தான் என்றும் கூறி இருந்தார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
இந்நிலையில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் திருச்சி மாவட்ட செயலாளர் ராயல் சித்திக் தலைமையில் மாவட்ட பொருளாளர் தென்னூர் கலீல் ரகுமான், மாவட்ட துணை செயலாளர் முஹம்மது தாஹா, தொழிற்சங்கமான மக்கள் ஜனநாயக தொழிலாளர் முன்னணி மாவட்ட செயலாளர் டேவிட் ஆரோக்கியராஜ் மற்றும் சிலர் இன்று திருச்சி மாநகர போலீஸ் கமிஷனரை சந்தித்து மனு அளித்தனர் .
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
தனக்கு வாக்களிக்காத இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களை சாத்தான்களின் பிள்ளைகள் என்று கூறிவிட்டு, இது நாள் வரை தனது கருத்துக்கு வருத்தமும், தனது வார்த்தையை திரும்ப பெறாமலும் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu