பணம் கொண்டு சென்றதாக புகார்: அண்ணாமலை ஹெலிகாப்டரில் அதிகாரிகள் சோதனை

கட்டு கட்டாக பணம் கொண்டு செல்லப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் பாஜக தலைவர் அண்ணாமலை சென்ற ஹெலிகாப்டரில் கர்நாடாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தி உள்ளனர்.
224 தொகுதிகளை கொண்ட கர்நாடகா மாநில சட்டசபைக்கு வருகிற மே 10ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. கர்நாடக சட்டமன்ற தேர்தலின் பா.ஜ.க. தரப்பு இணை பொறுப்பாளராக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உள்ளார்.ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை ஏற்கனவே கர்நாடகா மாநிலத்தில் போலீஸ் சூப்பிரண்டு மற்றும் கமிஷனராக பணியாற்றியவர் என்பதால் பாஜ கட்சி மேலிடம் இந்த பொறுப்பினை அவருக்கு அளித்து உள்ளது.
இந்நிலையில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை சென்ற ஹெலிகாப்டரில் கட்டுக்கட்டாக பணம் எடுத்து செல்லப்பட்டதாகவும், அதனை உடுப்பி தொகுதி வாக்காளர்களுக்கு விநியோகிக்க பா.ஜ.க. திட்டமிட்டுள்ளதாகவும் காங்கிரஸ் வேட்பாளர் வினய்குமார் தரப்பினர் குற்றஞ்சாட்டினர்.
காங்கிரஸ் வேட்பாளர் வினய்குமார் புகார் கூறியதன் அடிப்படையில் ஹெலிகாப்டரில் சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பேசி உள்ள வினய்குமார், ‘எனக்கு வந்துள்ள தகவலின்படி அண்ணாமலை வந்த ஹெலிகாப்டரில் பணம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளேன். காவல் துறையினரிடமும் புகார் அளித்துள்ளேன். எனக்கு மாவட்ட தேர்தல் அதிகாரி மீது நம்பிக்கை உள்ளது. உரிய நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறேன்’ என்றார்.
இதுகுறித்து உடுப்பி தேர்தல் அதிகாரி சீதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அண்ணாமலை திங்கட்கிழமை காலை 9.55 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் உடுப்பி சென்றார். ஹெலிகாப்டர் மற்றும் அவர் எடுத்துச் சென்ற பையை அதிகாரிகள் குழு ஆய்வு செய்ததில் நடத்தை விதிகளை மீறும் பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை. ஹோட்டலிலிருந்து உடுப்பி மாவட்டம், கப்பு தொகுதி செல்லும் வழியில் எஸ்.எஸ்.டி குழுவினர், உத்யாவர் சோதனைச் சாவடியில் மீண்டும் சோதனை நடத்தினர். மதியம் 2 மணியளவில் கடையாலி அருகே உள்ள ஓஷன் பேர்ல் ஹோட்டலுக்கு அண்ணாமலை வந்தடைந்தார், ஒவ்வொரு கட்டத்திலும் சோதனை நடத்தப்பட்டது, விதிமீறல்கள் எதுவும் கண்டறியப்படவில்லை என அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள
உடுப்பியில் மக்களுக்கு விநியோகம் செய்வதற்காக அண்ணாமலை ஹெலிகாப்டர் மூலம் பெரும் தொகையை கொண்டு வந்ததாக காங்கிரஸ் வேட்பாளர் வினய் குமார் சொரகே குற்றம் சாட்டியதையடுத்து தேர்தல் ஆணையம் தரப்பில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.
இந்த சம்பவம் கர்நாடக அரசியலில் புயலை கிளப்பி உள்ள நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள அண்ணாமலை ‘எல்லோரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களைப் போலவே கருதுகிறார்கள். நான் சாமானியன். எங்களுடைய கொள்கை வேறு, அவர்களது கொள்கை வேறு. காலவிரயத்தை குறைப்பதற்காகவே ஹெலிகாப்டரில் பயணம் செய்தேன். எங்கள் வெற்றி உறுதியானதால் தேவையற்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்துகின்றனர். தோல்வி பயத்தால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக எங்கள் மீது குற்றம்சாட்டுகின்றனர்’ என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu