ராமேஸ்வரத்தில் துவங்கியது அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள்’ நடைபயணம்

ராமேஸ்வரத்தில் துவங்கியது அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள்’ நடைபயணம்
X

அண்ணாமலையின் கையை பிடித்து உயர்த்தி நடைபயணத்தை தொடங்கி வைத்தார் மத்திய மந்திரி அமித்ஷா.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள்’ நடைபயணத்தை மத்திய மந்திரி அமித்ஷா இன்று ராமேஸ்வரத்தில் துவக்கி வைத்தார்.

மத்தியில் பிரதமராக உள்ள பா.ஜ.க.வின் மோடி அரசு சாதனைகளை, 9ஆண்டுகளில் தமிழகத்திற்கு வழங்கிய திட்டங்கள், அதனால் மக்கள் அடைந்த பலன்கள் பற்றி விரிவாக தமிழக மக்களிடம் எடுத்து சொல்வதற்காக பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை ஜூலை 28ம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து தமிழகம் முழுவதும் பாதயாத்திரை நடத்தப்போவதாக அறிவித்து இருந்தார்.

இந்த அறிவிப்பின்படி அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள்‘ என பெயர் சூட்டப்பட்ட நடைபயண யாத்திரை துவக்க விழா இன்று மாலை ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் நடைபெற்றது. என் மண், என் மக்கள் என்கிற இந்த மக்கள் பிரச்சாரத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த தொடக்க விழா நிகழ்ச்சியில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் உதயகுமார், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் எம்பி, மற்றும் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன், புதிய நீதி கட்சி தலைவர் ஏசி சண்முகம், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவி பச்சமுத்து உள்பட கூட்டணி கட்சி தலைவர்கள் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். தொடக்க விழா நிகழ்ச்சியில் ஏராளமான பா.ஜ.க. தொண்டர்களும் பங்கேற்றனர்.

முன்னதாக, தமிழகத்திற்கு வருகை தந்துள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு, மதுரை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின் , ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் வந்தடைந்தார்.

கூட்டத்தில் பேசிய அமித்ஷா தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளை மிக கடுமையாக விமர்சித்தார்.

Tags

Next Story