‘அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி’ - முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ

‘அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி’ - முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ

கோவில்பட்டியில் நடைபெற்ற வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசினார்.

நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் மிகப்பெரிய மெகா கூட்டணி அமையும் என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில், கோவில்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோவில்பட்டி நகராட்சி வள்ளுவர்நகர், பங்களா தெரு, கதிரேசன் கோவில் ரோடு, உள்ள 22 வாக்குச்சாவடிகளுக்கான முகவர்கள் தேர்தல் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கோவில்பட்டி நகர அ.தி.மு.க. செயலாளர் விஜயபாண்டியன் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ முன்னிலை வகித்தார். அனைத்திந்திய எம்.ஜி.ஆர் மன்ற இணைச்செயலாளர் காஞ்சி பன்னீர்செல்வம் அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி பேசினார்.

கூட்டத்துக்குப் பிறகு, முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலைக்கு பக்குவம் இல்லை. 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தான் பிரதமர் வேட்பாளர் என்று கூறி தனித்து நின்றோம். 37 இடங்களில் வெற்றி பெற்றோம். 1990 ஆம் ஆண்டில் சந்திரசேகர் மற்றும் 1998 ஆம் ஆண்டில் வாஜ்பாய் ஆகியோர் பிரதமராக வர அதிமுக கொடுத்த ஆதரவு தான் காரணம்.

ஆட்சிக்கு வந்தால் ஒரு நிலைப்பாடு, எதிர்க்கட்சியாக இருந்தால் ஒரு நிலைப்பாடு என்பது தி.மு.க.வின் வாடிக்கை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ஒழிக்க கூடிய ரகசியம், தந்திரம், மந்திரம், சூட்சுமம் எங்களுக்கு தெரியும் என்று தி.மு.க. தேர்தலின் போது கூறியது. ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்தில் நீட் தேர்வை ஒழிப்போம் என்று தி.மு.க. கூறியது. ஆனால் ஆட்சிக்கு வந்து மூன்றாம் ஆண்டு நெருங்கும் நிலையில் நீட் தேர்வினை எதிர்த்து கையெழுத்து இயக்கம் நடத்துகின்றனர். இது எவ்வளவு பெரிய ஏமாற்று நாடகம் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

மக்களை ஏமாளிகளாக நினைத்து ஏமாற்றுகின்றனர். நீட் தேர்வு வேண்டாம் என்று அ.தி.மு.க. ஆட்சியில் சட்டமன்றத்தில் மசோதா கொண்டுவரப்பட்டது. அதே வேலையைத்தான் இன்று தி.மு.க. செய்கிறது. நீட் தேர்வு விவகாரம் ஒன்றே தி.மு.க.வின் நிலைப்பாட்டை மக்களுக்கும், வெளி உலகிற்கும் பறைசாற்றுகிறது.

சசிகலா, ஓபிஎஸ், டி.டி.வி. தினகரன் ஆகியோர் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைப்பது அவர்களின் உரிமை. யாரும் யாருடனும் கூட்டணி சேரலாம். நாங்கள் மக்களை நம்புகிறோம். அ.தி.மு.க. தலைமையில் மிகப்பெரிய மெகா கூட்டணி அமையும். அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டணி குறித்து சில கட்சிகளுடன் பேசி இருக்கலாம், கூட்டணி முடிவாகி இருக்கலாம், ஆனால் அதை தற்போது சொல்ல முடியாது. அ.தி.மு.க. தலைமையில் அமையக்கூடிய மெகா கூட்டணி தான் வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

இவ்வாறு முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

Tags

Next Story