Google Map போல் வாழுங்கள்...வாழ்வு மிக இனிமையாகும்

Google Map போல் வாழுங்கள்...வாழ்வு மிக இனிமையாகும்
X
நீங்கள் Google Map போல் வாழ்ந்தால் வாழ்க்கை மிகவும் இனிதாக மாறும்.

இது குறித்து தேனி மாவட்டம், சின்னமனுாரை சேர்ந்த ஆன்மீகவாதியும், தேசியவாதியுமான என்.பாஷ்யம் கூறியதாவது: இன்று பலரும் தங்களது வாழ்க்கையை தாங்களே கடுமையாக்கிக் கொள்கின்றனர். பிறர் செய்யும் சிறு தவறுகளை கூட மிகப்பெரிதாக கற்பனை செய்து, அவர்களுடன் பிரச்னை உண்டாக்குகின்றனர். இதனால் இரு தரப்பிற்கும் இடையே மனக்கசப்பும், நிம்மதியின்மையும் நிலவுகிறது. இந்த பிரச்னைக்கு இப்போது உள்ள தலைமுறைக்கு புராணங்களில் இருந்தோ, இதிகாசங்களில் இருந்தோ விளக்கம் சொன்னால் புரியாது. புராணங்களையும், இதிகாசங்களையும் புரியாமல் வாழும் தலைமுறைக்கு Google-ஐ மையப்படுத்தி அறிவுரை சொன்னால் புரியும்.

அதாவது நீங்கள் Google Map உதவியுடன் செல்லும் போது வழி தவறினால், Google Map உங்களை கண்டிக்கவோ அல்லது திட்டுவதோ செய்யாது என்பதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா?

ஒருபோதும் அது உங்களுக்கு எதிராக குரல் உயர்த்தி , “நீங்கள் இடதுபுறம் திரும்பி இருக்க வேண்டும், முட்டாள்! இப்போது நீங்கள் மிக நீளமான பாதையில் செல்ல வேண்டியிருக்கும், இது உங்களுக்கு அதிக நேரத்தையும் எரிவாயையும் செலவழிக்க வைக்க போகிறது, மேலும் நீங்கள் சந்திப்பிற்கு தாமதமாக போவீர்கள்’ என்று கத்துவதில்லை. கூப்பாடு போடுவதில்லை. அப்படிச் செய்திருந்தால், நீங்கள் அதைப் பயன்படுத்துவதை நிறுத்தி இருப்பீர்கள், மாறாக, அது மீண்டும் வழியமைத்து, நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு உள்ள அடுத்த சிறந்த வழியைக் காண்பிக்கும்.

நீங்கள் செல்ல விரும்பும் இடத்தை அடையச் செய்வதே அதன் முதன்மையான நோக்கமே தவிர, தவறு செய்ததற்காக உங்களை வருத்தப்பட வைப்பது அல்ல. இதில் ஒரு சிறந்த பாடம் உள்ளது. தவறு செய்தவர்கள் மீது, குறிப்பாக நமக்கு நெருக்கமாக இருப்பவர்கள் மீது எப்போதும் நமது விரக்தியையும் கோபத்தையும் இறக்கி வைப்பது உண்டு. அதனால் என்ன பயன் , ஒரு பிரச்னையை எதிர்கொண்டால் அதை சரி செய்ய முனைய வேண்டுமே தவிர பிறரை பழி சொல்வதை முதலில் நிறுத்த வேண்டும். உங்கள் குழந்தைகள், மனைவி, சக பணியாளர்கள் மற்றும் நீங்கள் விரும்பும் நபர்களுக்கு நீங்கள் ஒரு Google Map ஆக இருங்கள். வாழ்க்கை இனிமையாக இருக்கும்... இவ்வாறு கூறினார்.

Next Story