குடுகுடுப்பைக்காரர்கள் குறிசொல்ல காரணம் என்ன..? சுவாரசிய வரலாறு..!

Kudukuduppai Karan
X

Kudukuduppai Karan

Kudukuduppai Karan-குடுகுடுப்பை என்று சொன்னால் 'ஜக்கம்மா சொல்றா' என்ற வார்த்தைகள் நம் செவிகளில் தானே வந்து விழும்.

Kudukuduppai Karan

'நல்ல காலம் பொறக்குது..நல்ல காலம் பொறக்குது..ஜக்கம்மா சொல்றா..ஜக்கம்மா சொல்றா' டிகுடிங்.. டிகுடிங்..டிகுடிங்..டிகுடிங்...என்று குடுகுடுப்பை ஓசை விடிகாலை நேரத்து காற்றில் தவழ்ந்து உறக்கத்தில் இருக்கும் நாம் விழிக்கும்போது..ஏதோ குடத்துக்குள் இருந்து ஒரு ஓசை வருவது போல இருக்கும். அந்த சூழலை இன்னும் இறுக்கமாக்க நாய்கள் வேறு குறைக்கும்.

பலர் ஜன்னல் வழியாக குடுகுடுப்பைக்காரருக்குத் தெரியாமல், அவர் நம்ம வீட்டுக்கு என்ன குறி சொல்கிறார் என்று கேட்பார்கள். பல வீடுகளுக்கு அவர் சொல்வது சரியாகவே இருப்பதாக அடுத்த நாள் பேசிக்கொள்வார்கள். இதில், விந்தையான விஷயம் மற்றும் என்னை ஆச்சர்யப்படுத்திய விஷயம், அதிகாலை குறி சொல்லி முடித்து சென்றுவிடும் அவர்கள், விடிந்தவுடன் மீண்டும் ஒவ்வொரு வீடுகளுக்கும் வருவார்கள். அதிகாலை நேரத்தில் எந்தெந்த வீடுகளுக்கு என்ன குறி சொன்னார்களோ அதையே சரியாக ஒவ்வொரு வீடுகளுக்கும் மீண்டும் சொல்வார்கள். இது அவர்களின் நினைவாற்றலை உறுதிப்படுத்தும் ஒரு செயலாகும்.

இப்போது குடுகுடுப்பைக்காரர்களைப் பற்றிய கட்டுரைக்குள் செல்வோம்.

எழுத்தாளர் ந.முருகேசபாண்டியன்

ஓர் அறிமுகம்

பேராசிரியர், எழுத்தாளர், விமர்சகர், ஆய்வாளர் என பன்முகத்தன்மை கொண்ட ந.முருகேசபாண்டியன் மதுரைக்கருகிலுள்ள சமயநல்லூர் சத்தியமூர்த்தி நகரில் வாழும் குடுகுடுப்பைக்காரர்களைப் பற்றி 1980ம் ஆண்டுகளில் அவர் செய்த இனவரைவியல் ஆய்வுநூலே ‘குடுகுடுப்பைக்காரர்களின் வாழ்வியல்’. அந்த ஆய்வு நூலில் இருந்து எடுக்கப்பட்ட சில சுவையான சம்பவங்களை இங்கு தொகுத்து வழங்குகின்றோம். இந்த நேரத்தில் எழுத்தாளர் ந.முருகேசபாண்டியன் அவர்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்.

காரணம் எனக்குள் பல காலங்களாக குடுகுடுப்பைக்காரர்களைப்பற்றிய தேடுதல் இருந்தது. இன்றைய காலகட்டம் போல அன்று தேடுதலுக்கான வசதிவாய்ப்புகள் இல்லை. அன்று தோன்றிய தேடுதலுக்கான விடை இன்று எனக்கு கிடைத்துளளது. நேரடியாக அவர்கள் வசித்த ஊரில் இருந்து திரு.முருகேசபாண்டியன் ஆய்வு செய்து இந்த ஆய்வு நூலை அவர் வெளியிட்டிருப்பது தெரிகிறது.

குடுகுடுப்பைக்காரர்களைப் பற்றி அவர்கள் சொல்லும் கதை சுவாரசியமானது. ஆதியில் ஈசுவரன் ஒவ்வொரு மனிதனுக்கும் 'இன்ன தொழிலைச் செய்' என்று கூறிப் படியளந்தான். ஈசுவரன் படியளந்த நேரத்தில் ஒரு ஆள் மட்டும் தூங்கிவிட்டான். பின்னர் விழித்தெழுந்த அவன், ஈசுவரனிடம் சென்று தனக்கு ஏதாவது தொழில் தருமாறு மன்றாடி நின்றான்.

Kudukuduppai Karan

எல்லாத் தொழில்களும் ஏற்கனவே பங்கிடப்பட்டுப் பிரித்துக் கொடுத்து விட்டமையால், ஈசுவரன் இந்த மனிதனுக்கு ஏதாவது ஒரு தொழிலைக் கொடுக்கவேண்டுமே என்று யோசித்தார். பின்னர் ஈசுவரன், தனது கையில் வைத்திருந்த சித்துடுக்கையையும் சீங்குழலையும் வந்தவனிடம் கொடுத்து ‘நீ சொல்வது அஞ்சுக்கு ரெண்டு பலிக்கும். இவற்றை வைத்துப் பிழைத்துக்கொள்’ என்று கூறி அந்த மனிதனை அனுப்பினார். ஈசுவரன் அன்று எங்களுக்கு கொடுத்த அந்த நாளில் இருந்து நாங்கள் பிறருக்கு குறி சொல்லிக் கொண்டு குடுகுடுப்பைக்காரர்களாகத் திரிகிறோம்.

ஆந்திராவில் இருந்து தமிழகம் நோக்கி..

விஜயநகரத்தின் வீழ்ச்சி மற்றும் மழையில்லாமல் ஏற்பட்ட பஞ்சம் போன்ற காரணங்களால் பதினைந்தாம் நூற்றாண்டில் ஆந்திராவிலிருந்து அந்த மக்கள் தமிழகம் வந்தனர். குடுகுடுப்பைக்காரர்கள் கம்பளத்து நாயக்கர்களில் நித்திரவார் பிரிவைச் சேர்ந்தவர்கள்.

நாடோடிகளாக

குடுகுடுப்பைக்காரர்கள் பல நூற்றாண்டுகளாக நாடோடிச் சமுதாயமாகத் திரிந்த அவர்கள் தற்போது ஓரிடத்தில் நிலையாகத் தங்கி வாழத் தொடங்கியுள்ளனர். மதுரை, பரவை கண்மாய்க்கருகில் இவர்கள் தங்கியிருந்த நிலத்தை காமராஜர் முதல்வராயிருந்த போது அவர்களுக்கே வழங்கினார். அந்த இடத்திற்கு சத்தியமூர்த்தி நகர் என்று பெயர்.

Kudukuduppai Karan

தங்கலுக்குச் செல்லல்

சித்திரை, வைகாசி மாதங்கள் தவிர மற்ற மாதங்கள் குறிசொல்வதற்காக வெளியூர் சென்று வருகின்றனர். வெளியூர் செல்வதை ‘தங்கலுக்கு செல்வது’ என்று சொல்கின்றனர். பிற ஊர்களில் 'தங்கி' இருப்பதை வலியுறுத்த பயன்படுத்தப்பட்ட சொல்லாக இருக்கலாம். அவ்வாறு 'தங்கலுக்கு' செல்லும்போது நாலைந்து குடும்பங்களாக சேர்ந்து செல்கின்றனர்.

குற்றப்பணம் செலுத்தல்

‘ஒரு வாக்கு வெல்லும், ஒரு வாக்கு கொல்லும்’ என்பதில் பெரு நம்பிக்கை கொண்டுள்ளனர். தாங்கள் சொல்வது ஜக்கம்மா அருளால் பலிக்கும் என்பதால் யாரையும் திட்ட மாட்டார்கள். கணவன் மனைவியைத் திட்டினால்கூட ‘குற்றப்பணம்’ கட்ட வேண்டும்.1980ம் ஆண்டுகளில் குற்றப்பணம் 2 ரூபாய் என்பதாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இந்த செயல்பாடு அவர்கள் பெண்களை சமமாக மதித்து நடப்பவர்கள் என்பதை உறுதிசெய்யும் விதமாக இருக்கிறது.

மறுமணம் செய்யும் உன்னத குணம்

திருமணம் செய்ய விரும்பும் பெண்ணின் தந்தைக்கு மணமகன் பணம் தர வேண்டும். அவருடன் சேர்ந்து குடுகுடுப்பைத் தொழிலுக்கு மூன்று அல்லது ஆறு மாதம் செல்ல வேண்டும். அவருக்கு பிடித்திருந்தால் மருமகனாக ஏற்றுக்கொள்வார். உடன்போக்குத் திருமணமும், தம்பதியரில் யாரேனும் பிரிந்தாலோ அல்லது இறந்தாலோ மறுமணம் செய்து கொள்ளும் வழக்கமும் இவர்களிடம் உண்டு. மறுமணம் செய்துக்கொள்ளும் இந்த நடைமுறையும் அவர்கள் ஒரு வளர்ந்த சிந்திக்கும் திறனுள்ள சமூகம் என்பதை மெய்ப்பிக்கிறது.

Kudukuduppai Karan

படம் : நன்றி -ட்விட்டர்.

பெண் தெய்வங்கள்

குடுகுடுப்பைக்காரர்களின் குலதெய்வமாக ஜக்கம்மா இருந்தாலும் சத்தியம் செய்யும்போது துடியான தாய்த்தெய்வங்களான மடப்புரம் காளி – கொல்லங்குடி காளி மீதே சத்தியம் செய்கின்றனர். நள்ளிரவு நேரங்களில் குடுகுடுப்பையை அடித்துக்கொண்டு குறிசொல்லிச் செல்பவர்களை 'சாமக்கோடாங்கி' என்று அழைப்பதும் வழக்கம். மறுநாள் காலை வீடுவீடாகச் சென்று குறிசொல்லி பணம் மற்றும் அரிசியை வாங்குவர். பெண்களும், சிறுவர்களும் பகல் நேரங்களில் ஏடு போட்டு, கைரேகைப் பார்த்து குறிசொல்கின்றனர். அவர்களது தெய்வங்கள் எல்லாம் பெண் தெய்வங்களாக இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

போகிப்பண்டிகை கொண்டாடும் குடுகுடுப்பைக்காரர்கள்

குடுகுடுப்பைக்காரர்கள் வழக்கத்தில் போகி பண்டிகையை சிறப்பாக கொண்டாடுகின்றனர். அன்று தாங்கள் இருக்கக்கூடிய இடத்தை சுத்தம் செய்து, கோழி அறுத்து இறைச்சி உணவு சாப்பிடுகின்றனர். அன்று குறிசொல்லச் செல்வது கிடையாது. ஆனால் அன்று வேட்டைச் செல்வார்கள். அவ்வாறுவேட்டைக்குச் செல்வதை ‘பாரிவேட்டை’ என்றழைக்கின்றனர்.

சங்கம் வைத்து தீர்வு

குடுகுடுப்பைக்காரர்கள் அவர்களுக்கென சாதிச்சங்கம் வைத்துள்ளனர். அந்த சங்கத்தில்தான் அவர்களுக்குள் ஏற்படும் பிணக்குகளைத் தீர்த்துக்கொள்கின்றனர். நீ எந்த கட்சியில் வேணுமானாலும் இருந்ததுக்கோ..ஆனால் கட்சி ஊருக்குள் வரக்கூடாது என்பது அவர்கள் கொள்கை. ஆமாம், பல்வேறு அரசியல் கட்சிகளில் இருந்தாலும் குடியிருப்பு பகுதிகளில் அரசியல் கட்சிகளின் கொடிகள், தோரணங்கள் கட்டுவதில்லை.

Kudukuduppai Karan

கம்பளி முடிச்சு

முன்பெல்லாம் குடுகுடுப்பைக்காரர்கள் குரைக்கும் நாய்களின் வாயைக்கட்ட சுடுகாட்டிலிருந்து இரவு கிளம்பும் போது கம்பளியில் ஒரு முடிச்சு போடுவார்களாம். பிறகு மறுநாள் காலையில்தான் அவிழ்ப்பார்களாம். இப்போது அப்படி முடிச்சு போடுவதும் கிடையாது. சுடுகாட்டுக்குப் போய் வரும் சாமக் கோடங்கிகளும் குறைவு.

குடுகுடுப்பைக்காரர்களின் இன்றைய தலைமுறையினர் குடுகுடுப்பைத் தொழிலை செய்ய விரும்பாமல் எல்லோரையும் போல படித்து வேறு பணிகளுக்குச் செல்ல விரும்புவது ஆரோக்யமான விசயம். இது சமூக மாற்றத்திற்கான ஒரு திறவுகோல். இருப்பினும் இன்னும் சிலர் இத்தொழிலையே செய்து வருகின்றனர். குடுகுடுப்பைக்காரர்களைப் பற்றி தமிழ்த்திரைப்படங்களில் நகைச்சுவைக் காட்சிகளில் மட்டுமே பெரும்பாலும் பதிவு செய்துள்ளனர். ஆனால், அவர்களின் வாழ்வியல் குறித்த எந்த பதிவுகளையும் செய்ததில்லை.

சமூகக் கருத்துக்களுடன் திரைப்படம் எடுக்கும் இளம் இயக்குனர்கள் இதை முயற்சிக்கலாமே..!?


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story