இரவில் சீக்கிரமே சாப்பிடச் சொல்கிறார்களே, ஏன் தெரியுமா....!?

இரவில் சீக்கிரமே சாப்பிடச்  சொல்கிறார்களே, ஏன் தெரியுமா....!?

சரியான நேரத்தில் உணவு உண்பது அவசியம்.(கோப்பு படம்)

இன்றைய பரபரப்பான காலக்கட்டத்தில் அலுவலகம், வேலை என்று நிறைய கடமைகள் ஒவ்வொருவருக்கும் இருக்கின்றன.

வேலைகளையெல்லாம் முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து சேருவதற்குள் தாமதமாகி விடுகிறது. எனினும், இரவு நாம் உண்ணும் உணவை முடிந்த வரை சீக்கிரம் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும். அப்படி இரவில் சீக்கிரம் உணவை உண்பதால் ஏற்படும் பயன்களைப் பற்றித்தான் இந்தப் பதிவில் காண உள்ளோம்.

இரவில் சீக்கிரமாக உணவு சாப்பிடுவதால் அதை ஜீரணிக்க உடலுறுப்புகளுக்கு போதுமான நேரம் கிடைக்கும். இதனால் செரிமான அமைப்பு சுமூகமாக செயல்பட வழிவகுக்கும். ஆனால், இரவில் தாமதமாக சாப்பிடுவதால் செரிமான உறுப்புகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும். இதனால் இரவு உணவு ஜீரணமாக தாமதமாகும்.

இரவு தாமதமாக சாப்பிடுவதன் மூலம் தூக்கம் தடைப்படும். உணவை ஜீரணிக்க உறுப்புகள் அதிக நேரம் எடுத்துக்கொள்வதால் தூக்கம் தடைப்படும். இதுவே உணவை நேரத்தோடு சாப்பிடும்போது சீக்கிரமே ஜீரணமாகி நல்ல ஆழ்ந்த தூக்கத்திற்கு வழிவகுக்கும்.

இரவு தூங்கும் போது உடல் இயற்கையாகவே புத்துணர்ச்சி பெறுவதற்கான செயல்பாட்டில் ஈடுபடும். ஆனால், இரவு தாமதமாக சாப்பிடுவதால் உடலில் உள்ள ஆற்றல் முழுவதுமே உணவை ஜீரணிக்கவே செலவாகிவிடும். இதனால் அடுத்த நாள் மந்தமான, சோர்வான உணர்வை கொடுக்கும். ஆனால், சீக்கிரம் சாப்பிடுவதன் மூலம் சீக்கிரம் ஜீரணம் ஆகிவிடுவதால், அடுத்த நாள் எந்த மந்தத்தன்மையும் இல்லாமல் புத்துணர்ச்சியுடன் செயலாற்றலாம்.

உணவிலிருந்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கு உடலுக்குப் போதுமான நேரம் கிடைக்க வேண்டும். இரவு உணவை முன்கூட்டியே உண்பதால் அதிக நேரம் கிடைக்கும். இதனால் உணவிலிருந்து ஊட்டச்சத்துகளை உறிஞ்சும் வேலை சுறுசுறுப்பாக நடைபெறும். அதேசமயம் உணவை தாமதமாக உண்ணும் பது இந்த செயல்முறையும் தாமதமாகும்.

தூங்குவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு அதிக உணவை எடுத்துக்கொண்டால், உடலில் சக்கரையை அதிகரிக்கும். இது நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இரவு சீக்கிரமே சாப்பிட்டால் சீக்கிரம் செரிமானம் ஆவதன் காரணமாக இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். வளர்சிதை மாற்றத்தில் கோளாறுகள் ஏற்படுவதையும் தடுக்கும். உடலின் மொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

வளர்சிதை மாற்றத்தின் செயல்பாடு இரவு நேரங்களிலும், மாலை நேரங்களிலும் குறைந்து விடும். இதனால் இரவு தாமதமாக சாப்பிடுவதால் அதிகப்படியான கலோரிகள் எரிக்கப்படாமல் கொழுப்பாக உடலில் சேர்ந்துவிடும். இதனால் உடல் எடை அதிகரிக்கும். உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இரவில் உணவை சீக்கிரம் உண்ண வேண்டியது மிகவும் அவசியமாகும்.

எனவே இரவு நேரம் குடும்பத்துடன் சேர்ந்து ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உணவு உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்தி கொண்டால், தாமதமாக சாப்பிடும் பழக்கம் மாறிவிடும். நீங்களும் முயற்சித்துப் பாருங்களேன்.

Tags

Next Story