தினமும் குளிக்காத கணவன்! விவாகரத்து கோரும் ஆக்ராபெண்

தினமும் குளிக்காத கணவன்! விவாகரத்து கோரும் ஆக்ராபெண்
கோப்புப்படம்
திருமணமான 40 நாட்களுக்குப் பிறகு, கணவரின் வித்தியாசமான குளியல் பழக்கத்தால் விவாகரத்து கோரி பெண் ஒருவர் மனு தாக்கல் செய்தார்.

உத்தரபிரதேசத்தின் ஆக்ராவில் ஒரு பெண் திருமணமான ஒரு மாதத்திற்குப் பிறகு ஒரு விசித்திரமான சுகாதார பிரச்சினை காரணமாக, விவாகரத்து கோரியதாகக் கூறப்படுகிறது,

இது பற்றிய விவரங்களை பார்க்கலாம். ஆக்ராவை சேர்ந்த ராஜேஷ் என்பவர் மாதத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை மட்டுமே குளிப்பதை வழக்கமாக வைத்திருந்தார். இதனால் அவரது உடலின் துர்நாற்றத்தை சகித்துக்கொள்ள முடியாமல் மனைவி விவாகரத்து முடிவை எடுத்துள்ளார். ராஜேஷ் எனும் அந்த நபர் கங்கை நதியிலிருந்து தண்ணீரை எடுத்து வாரத்திற்கு ஒரு முறை தன்மீது தெளித்துக்கொள்வார். இதனால் தான் சுத்தமானதாக அவர் நம்பியுள்ளார். திருமணம் செய்து கொண்ட பிறகு, ராஜேஷ் மனைவியின் வற்புறுத்தலின் காரணமாக கடந்த 40 நாட்களில் ஆறு முறை மட்டுமே குளித்துள்ளார்.

இதை அடுத்து அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் காவல் துறையினரிடம் வரதட்சணை துன்புறுத்தல் புகார் அளித்து விவாகரத்து கோரினர். குடும்ப நல மைய ஆலோசகரின் ஆலோசனையை தொடர்ந்து, ராஜேஷ் இறுதியில் மனம்திருந்தி தினமும் குளிப்பதற்கும், சுத்தமாக இருக்கவும் ஒப்புக்கொண்டார். ஆனாலும், அந்தப் பெண் இனி அவருடன் வாழ விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார். இந்த ஜோடி ஒரு வாரத்தில் மீண்டும் ஆலோசனை மையத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எப்படியாவது இந்த ஜோடியை சேர்த்து வைக்க குடும்ப நல ஆலோசனை மையத்தினர் விரும்பினாலும், பாதிக்கப்பட்ட பெண் இனி ராஜேஷ் உடன் வாழவே முடியாது என பிடிவாதமாக கூறி வருகிறார்.

இதேபோன்ற ஒரு விசித்திரமான விவாகரத்து வழக்கு இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆக்ராவில் இருந்து பதிவாகியுள்ளது .

சில மாதங்களுக்கு முன்பு, டெல்லியில் இருந்து மூன்று மணி நேரத்திற்கும் குறைவான தூரத்தில் உள்ள உத்தரபிரதேச நகரத்தில் ஒரு பெண், பிரபலமான பேக்கேஜ் செய்யப்பட்ட சிற்றுண்டியான குர்குரே பாக்கெட் கிடைக்காததால், கணவரிடம் இருந்து விவாகரத்து கோரினார் .

Tags

Next Story