ரயில் பயண சீட்டு விற்பனை உதவியாளர்கள் : விண்ணப்பிக்க அனுமதி..!

ரயில் பயண சீட்டு விற்பனை உதவியாளர்கள் : விண்ணப்பிக்க அனுமதி..!
X

திண்டுக்கல் ரயில்வே நிலையம் (கோப்பு படம்)

ரயில் பயண சீட்டுகளை விற்பனை செய்ய பொதுமக்களும் விண்ணப்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ரயிலில் பயணம் செய்ய முன்பதிவு இல்லாத பயணச் சீட்டுகள் பயணச் சீட்டு அலுவலகங்கள், தானியங்கி இயந்திரங்கள், மொபைல் போன் செயலிகள் ஆகியவற்றின் மூலம் வழங்கப்படுகின்றன. தானியங்கி இயந்திரங்கள் மூலம் பயண சீட்டுகள் பெற உதவியாளர்கள் நியமிக்கப்பட்டு வந்தார்கள்.

இதுவரை இந்த உதவியாளர்களாக ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்கள் மட்டுமே செயல்படும் படி இருந்தது. தற்போது பொதுமக்களும் ரயில் பயணச்சீட்டு விற்க தானியங்கி இயந்திரங்களில் உதவியாளர்களாக பணியாற்ற வாய்ப்புத் தர ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இந்த உதவியாளர்களுக்கு அவரது முயற்சியால் விற்கப்பட்ட மொத்த பயணச் சீட்டு கட்டணத்தில் மூன்று சதவீதம் கமிஷனாக வழங்கப்படும். இந்த உதவியாளர்கள் ஓராண்டு காலத்திற்கு பணியமடுத்தப்படுவார்கள். இது மாதிரியான 14 உதவியாளர்கள் மதுரை, திருநெல்வேலி, திருச்செந்தூர், தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், போடிநாயக்கனூர், புனலூர் ஆகிய ரயில் நிலையங்களில் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர்.

தற்போது திண்டுக்கல், பழனி, காரைக்குடி, ராமேஸ்வரம், ராமநாதபுரம், மானாமதுரை, கல்லிடைக்குறிச்சி, கோவில்பட்டி, விருதுநகர், சங்கரன்கோவில், புதுக்கோட்டை, சாத்தூர், செங்கோட்டை, மதுரை, திருச்செந்தூர், தூத்துக்குடி, போடிநாயக்கனூர் மற்றும் புனலூர் ரயில் நிலையங்களுக்கு தானியங்கி இயந்திரங்களில் பயணச்சீட்டு விற்க உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான விண்ணப்பங்கள் மற்றும் மேல் விவரங்கள் https://sr.indianrailways.gov.in என்ற இணையதளத்தில் உள்ளது. விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி தேதி ஜூன் 11 என வரையறுக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story