இறந்தவர் உடலை கழுகுக்கு இரையாக்கும் பார்ஸி பண்பாடு..!

இறந்தவர் உடலை கழுகுக்கு இரையாக்கும்  பார்ஸி பண்பாடு..!
X

பார்சி இனத்தின் பண்பாடுகள் 

1000 ஆண்டுகளுக்கு முன்பு அன்றைய பாரசீகம் என்று அழைக்கப்பட்டது இன்றைய ஈரான்.

மங்கோலிய மன்னன் செங்கிஸ்கான் படையெடுப்பால் பாதிக்கப்பட்ட பல பார்சி மக்கள் குழுக்கள், பல திசைகளில் பயணமாயின. அப்படி பயணமான ஒரு குழு குஜராத்தின் அன்றைய மன்னன் ஜாதவ் ராணாவிடம் குடியுரிமை கேட்டது. அவர் இங்கு குடியிருக்க இயலாது என மறுத்தார். அக்குழுவின் தலைவனுக்கு பால் அனுப்பி, நாங்கள் பால் போன்றவர்கள் இதில் உங்களால் எப்படி இணைய முடியும் என்றாராம் மன்னன். பாரசீகத்திலிருந்து வந்த அக்குழுவின் தலைவனோ, பாலில் சிறிது சர்க்கரையை சேர்த்து, இப்படி இணையலாமே என்றானாம். அதிசயித்த மன்னர் அவர்களை ஏற்றார்.

குஜராத்தில் அக்குழுவினர் வந்து தங்கிவிட்டனர். பாரசீகத்திலிருந்து வந்ததால் பார்ஸிகள் என்றே அறியப்படுகின்றனர். ஜொராஷ்டிரம் அவர்கள் மதம். ஜொராஸ்ட்ரிய மதம் ஜொராஸ்டார் என்ற ஞானியால் தோற்றுவிக்கப்பட்டது. ஜொராஸ்டார் இன்றைய வடக்கு ஈரானில் பிறந்தவர் என்கின்றனர். இவர் தனது 40-வது வயதில் வட கிழக்கு ஈரானிய மன்னன் விஷ்டாஸ்பா என்பவரைச் சந்தித்து, தனது மதக்கோட்பாடுகளை அவருக்கு விளக்கி, மன்னரை தனது சமயத்துக்கு மாற்றினார். இதன் காரணமாக, ஜொராஷ்ட்ரிய மதம் நாட்டின் மதமாக வளர்ந்து இருக்கிறது.

உலகில் ஒரே ஒரு கடவுள்தான் இருக்கிறார். அவரது பெயர் 'அஹூரா மாஜ்டா'' என்கிறார் ஜொராஸ்டார். அதன்பொருள் மெய் அறிவுகொண்ட கடவுள் என்பதாகும். கடவுளைப் போலவே இந்த உலகில் தீமையும் நெடுங்காலமாகவே இருந்து வருகிறது. அதன் வடிவம் அங்ரா மைன்யு.

நன்மைக்கும் தீமைக்குமான போராட்டமே நமது வாழ்க்கை. அதற்கான போராட்டக் களம்தான் இந்த பூமி. இதில் நன்மை எது தீமை எது என்பதை ஆராய்ந்து அறிய வேண்டியவன் மனிதனே என்பது அவரது கருத்து. வெப்ப மண்டலப் பிரதேசத்தில் வாழ்ந்த மனிதர்களுக்கு நீரின் முக்கியத்துவம் தெரியும். நீரைப் போற்றுவார்கள். குளிர் பிரதேசத்தில் வாழ்பவர்கள் நெருப்பைப் போற்றுவார்கள். பார்ஸிகளின் வழிபாடு நெருப்போடு தொடர்புடையது.

நெருப்பையே வழிபடுவார்கள். ஈரானிலிருந்து எடுத்து வந்த நெருப்பை வைத்து, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு குஜராத்தில் உட்வாடா பகுதியில் குடியேறிய பார்ஸிகள் நெருப்புக் கோயில் ஒன்றைக் கட்டினார்கள். அந்த நெருப்பு இன்று வரை எரிந்து கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் 1795 ல் பார்ஸியின் ஒரு சிறு கூட்டம் ராயபுரத்தில் குடியேறியது. அங்கும் ஒரு நெருப்புக் கோயில் கட்டினார்கள். இன்று வரை அந்தக் கோயிலிலும் ஈரானிய நெருப்பு எரிந்து கொண்டிருக்கிறது. இந்தியா முழுவதிலும் 1,50,000 பேர் வாழ்கிறார்கள். சென்னையில் 300 குடும்பங்கள் இருக்கிறது.

1885 ல் காங்கிரஸ் கட்சியை உருவாக்கிய தாதாபாய் நௌரோஜி முதல் தொழிலதிபர்கள் டாடா, வாடியா, கோத்ரெஜ் வரை பார்சிகள் தான். இந்திராவின் கணவர் பெரோஸ் காந்தியும் பார்ஸி தான். இந்தியாவின் பெரும் கோடீஸ்வரர்கள் பார்ஸிகள் தான்.

ரத்தன் டாடா பார்ஸி இனத்தைச் சேர்ந்தவர். பாரசீகத்திலிருந்து இங்கு வந்து குஜராத்தில் குடியேறிய இனம் என்பதால் பார்ஸி எனப் பெயர். பார்ஸி சமூகத்தின் நடைமுறை வித்தியாசமானது.

பார்ஸிகள் தங்கள் இனத்துக்குள்ளேயே மண உறவு கொள்ளக்கூடியவர்கள். பார்ஸி இனப்பெண்ணைத் தவிர வேறு சமயத்தைச் சேர்ந்தவரை மண உறவு கொள்ள அனுமதியில்லை. இது மிகவும் கண்டிப்பான உத்தரவு.

பார்ஸி ஆணோ, பெண்ணோ வேறு யாரையும் திருமணம் செய்தால், பார்ஸிகளின் வழிபாடு மற்றும் சடங்குகளில் இருந்து முற்றிலும் விளக்கி வைக்கப்படுவார்கள். டாடா குடும்பமும் அதற்கு விதிவிலக்கல்ல.

டாடா வாரிசுகள் இவர்கள்.

1.ஜாம்செட்ஜி நுசர்வாஞ்சி டாட்டா (1839 - 1904). டாடா நிறுவனத்தை நிறுவியவர். குஜராத் மாநிலத்திலுள்ள நவ்சாரி எனுமிடத்தில் பிறந்தவர். எஃகு உற்பத்திக்குப் பெயர்பெற்ற ஜாம்ஷெட்பூர் நகரத்திற்கு இவருடைய நினைவாகவே இவரது பெயர் சூட்டப்பட்டது.

2.இரத்தன்ஜி தாதாபாய் டாடா ( 1856-1926) ஆர்.டி.டாடா என சுருக்கமாக அழைக்கப்பட்டார். டாடா குழுமத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தவர்.

3.நேவல் ஹார்முஜி டாடா (1904 -1989) இரத்தன்ஜி தாதாபாய் டாடாவின் வளர்ப்பு மகன்.

3.ஜே.ஆர்.டி. டாட்டா எனப் பரவலாக அறியப்படும் ஜஹாங்கிர் ரத்தன்ஜி தாதாபாய் டாடா (1904 -1993). இந்திய விமானப் போக்குவரத்தின் முன்னோடியாகக் கருதப்படுபவர்.

4.ரத்தன் டாட்டா (1937-2024) தற்போது இறந்தவர். நேவல் ஹார்முஜி டாடாவின் மகன்.

ஆர். டி. டாடா எனும் 2 வதாக உள்ளவர் ஒரு பிரெஞ்சு கிறிஸ்தவப் பெண்ணைக் காதலித்து திருமணம் செய்தார். இதை பார்ஸி சமூகம் ஏற்கவில்லை. அப்பெண்ணை பார்ஸியாக மதம் மாற்ற ஏற்பாடு செய்தார் ஆர்.டி.டாடா. அதையும் பார்ஸிகள் ஏற்கவில்லை.

இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் ஆர். டி. டாடா. பார்ஸிகள் சார்பாக பார்ஸி பஞ்சாயத்து எனும் அமைப்பு வாதிட்டது. ஆர். டி. டாடாவிற்கு எதிராக நீதிமன்றம் அப்போது தீர்ப்பு கூறியது. எனவே ஆர். டி. டாடாவின் குடும்பத்தை பார்ஸிகள் ஒதுக்கி வைத்தனர்.

எனவே தான் தற்போது இறந்த ரத்தன் டாடாவின் தந்தையான நேவல் ஹார்முஜி டாடாவை வளர்ப்பு மகனாக அறிவித்தார். ஆர். டி. டாடா. பார்ஸிகள் இறந்த உடலை எரிக்கவோ, புதைக்கவோ கூடாது. கழுகுக்கு இரையாக வைக்கிறார்கள். இறந்த உடலை கொண்டு போய் வைக்கும் கட்டிடத்திற்கு "டாக்மா" அல்லது "டவர் ஆப் சைலன்ஸ்" எனப்பெயர். இதற்கு அவர்கள் சொல்லும் விளக்கம் இதுதான்.

புதைத்தால் மண் மாசுபடும். எரித்தால் காற்று மாசுபடும். நதியில் உடலை விட்டால் நீர் மாசுபடும். பூமியை மாசுபடுத்தக்கூடாது என்பதால் கழுகுக்கு உணவாகத் தந்து விடுகிறோம் என்கிறார்கள். ஆனால் இது பாலைவனம் வழியாக அலைந்து திரியும் நாடோடிகளின் பழமையான பாலைவனச் சடங்கு என்பதே மானுடவியலாளர்களின் கருத்து.

இறந்தவரின் உடலை வெள்ளைத் துணியால் சுற்றிய பிறகு அதை யாரும் தொடக்கூடாது. உடலை வெளியே எடுத்து வரும் போது ஒரு நாய் பார்க்க வேண்டும். நாய் மரணத்தின் தூதுவன் என்பது பார்ஸிகளின் நம்பிக்கை. அதன் பிறகு உடலை உயர்ந்த கட்டிடமாக உள்ள "டவர் ஆப் சைலன்ஸ்"-ல் வைப்பார்கள்.

மும்பையில் பார்ஸிகளின் இறந்த உடலை வைக்கும் "டவர் ஆப் சைலன்ஸ்" ஒன்று உள்ளது. இறுதிச்சடங்கு செய்பவர்கள் என பார்ஸிகளுக்குள் வெளி உலகத் தொடர்பில்லாத சிலர் உள்ளனர். அவர்களே இதைச் செய்கிறார்கள்.

"டவர் ஆப் சைலன்ஸ்"ஸில் வைத்த பிறகு கழுகுகள் தின்றது போக மீதத்தை அகற்றி விடுவார்கள். ஒரு ஆண்டுகள் உடல் அங்கேயே இருக்கும். விரைவில் உடல் அழிய இப்போது சூரியக் கண்ணாடி பயன்படுத்துகிறார்கள். பண்பாடுகள் பலவிதம் அதில் பார்ஸிகள் தனிவிதம்.

Tags

Next Story