/* */

விடுதலை வேட்கையை கவிதையில் ஊட்டிய மீசைக்கவியின் வரலாறு அறிவோம்..! வாருங்கள்..!

Subramaniya Bharathiyar History in Tamil-தாய்மொழியான தமிழின் மீது அளவுகடந்த அன்புகொண்டவர் பாரதி. பன்மொழிப் புலமைபெற்ற பாவலர்.

HIGHLIGHTS

விடுதலை வேட்கையை கவிதையில் ஊட்டிய மீசைக்கவியின் வரலாறு அறிவோம்..! வாருங்கள்..!
X

bharathiyar history in tamil-மீசைக்கவி பாரதி வரலாறு.(koppu

Subramaniya Bharathiyar History in Tamil

நவீன தமிழ்க் கவிதைகளின் சிற்பியாக விளங்கியவர் மீசைக்கவி பாரதி. தமிழ், தமிழர் நலன், பெண் விடுதலை, தீண்டாமை போன்றவற்றிற்காக ஒரு நூற்றண்டிற்கு முன்னரே தன் கவிதையால் இந்த உலகுக்கு ஓங்கி உரைத்தவன் பாரதி. அதனால்தான் அவன் மகாகவி என்று அழைக்கப்பட்டான். சுப்ரமணிய பாரதியார் ஒரு கவிஞனாக மட்டும் இல்லாமல் ஒரு சிறந்த எழுத்தாளராகவும், நல்ல பத்திரிக்கையாசிரியராகவும் இருந்தவர்.

"பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்" என்று பெண்ணுரிமைக்காக பாடி பெண்கள் இந்த சமுதாயத்தில் சம உரிமை பெற அச்சாணியாக இருந்தவர்,பாரதி. இவரே தான், "சாதிகள் இல்லையடி பாப்பா; குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;" என்று தீண்டாமை ஒழிப்புக் குறித்து பாடியவரும் இவர். தம் எழுத்துகள் மூலமாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டிய நம் முண்டாசுக் கவிஞன் பாரதியாரின் வாழ்க்கை வரலாறு குறித்து இங்கு காண்போம்.

பிறப்பு :

மகாகவி பாரதியார், சின்னசாமி ஐயருக்கும், இலட்சுமி அம்மாளுக்கும் மகனாக 1882ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 11ம் தேதி , திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள எட்டயபுரத்தில் பிறந்தார். அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் சுப்பிரமணி.

இளமைக்கால வாழ்க்கை :

பாரதியார் 5 வயதிலேயே தன் தாயை இழந்துவிட்டார். ஏழு வயது முதலே கவிதைகள் மூலமாக கர்ஜிக்கத் தொடங்கினார். இவருக்கு 11 வயது இருக்கும்போது இவரது கவி பாடும் ஆற்றலையும் புலமையையும் பாராட்டிய எட்டயபுர மன்னர் இவருக்கு பாரதி என்ற பட்டத்தை வழங்கினார். அன்றில் இருந்து இவரது பெயர் சுப்பிரமணிய பாரதியார் என்றானது.

திருநெல்வேலியில் உள்ள இந்துக் கல்லூரியில் 9ம் வகுப்பு வரை படித்த பாரதியார், அப்போதே தமிழ் அறிஞர்களோடும் பண்டிதர்களோடும் சொற் போரில் சுதந்திரமாகவும் அறிவுப்பூர்வமாகவும் ஈடுபட்டார். அதனால், அவரின் தமிழ் புலமை மேலும் அதிகரித்தது. அன்றைய திருநெல்வேலி சீமையில் வசித்த பலர் இவரின் புலமையை கண்டு வியக்கத் துவங்கினர்.

திருமண வாழ்க்கை

1897ம் ஆண்டு ஜூன் மாதம் 15ம் தேதி பாரதி தம் வாழ்நாளில் மறக்க முடியாத தேதியாக மாறியது. 14 வயது மட்டுமே நிறைவடைந்த அவருக்கு 7 வயது சிறுமியான செல்லம்மாளோடு திருமணம் நடந்தேறியது. அது ஒரு பால்ய திருமணம். இது போன்ற தவறுகள் இனி நடக்கவே கூடாது என்று அவர் அப்போது எண்ணினார். அதன் பாதிப்பினால் பின்னாளில் தன் கவிதைகள் மூலம் பால்ய திருமணத்திற்கு எதிராக பொங்கி எழுந்தார், மகாகவி பாரதியார்.

கற்ற மொழிகள்

பாரதியார் 16 வயதில் தன் தந்தையையும் இழந்தார். அதன் பிறகு வறுமையில் வாடித் தவித்தார். பிறகு எப்படியோ கஷ்டப்பட்டு காசிக்கு சென்று அலகாபாத் பல்கலைக்கழகத்தில் சம்ஸ்கிருத மொழியையும், இந்தி மொழியையும் கற்றறிந்தார். இது தவிர ஆங்கிலம், வங்காளம் போன்ற பிற மொழிகளிலும் தனிப் புலமை பெற்று விளங்கினார். இத்தனை மொழிகளில் புலமை பெற்றதால் தான், "யாம் அறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்" என்று உலகுக்குச் சொன்னார் மகாகவி பாரதியார்.

பாரதி செய்த பணிகள்

4 ஆண்டுகள் காசியில் இருந்துவிட்டு தமிழகம் திரும்பினார் பாரதியார். பிறகு எட்டயபுர மன்னரின் அழைப்பை ஏற்று அரசவை கவிஞராக பணியாற்றினார். அழகிய தமிழ்க் கவிதைகள் பலவற்றிற்கு சொந்தக்காரரான பாரதியாரின் எழுத்துக்கள் முதல் முதலில் 1903ம் ஆண்டு அச்சில் வந்தது. அதன் பிறகு மதுரை சேதுபதி பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றினார். பிறகு சுதேச மித்திரன் பத்திரிகையின் துணை ஆசிரியராக பொறுப்பேற்றார்.

இந்திய விடுதைலை போராட்டத்தில் பாரதியாரின் பங்கு

தன்னுடைய தீராத சுதந்திர தாகத்தை தணிக்க 1905ம் ஆண்டு முதல் முழுமையாக அரசியலில் ஆர்வம் காட்டினார், மகாகவி. அதன் பிறகு கப்பல் ஓட்டிய தமிழன் வ.உ சிதம்பரம் பிள்ளை போன்றோரோடு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. அதன் பிறகு கொல்கத்தாவில் தாதாபாய் நவ்ரோஜி தலைமையில் நடைபெற்ற மகா சபை கூட்டத்திலும் கலந்து கொண்டார். அப்போது சுவாமி விவேகானந்தரின் சிஷ்யர் நிவேதிதா தேவியை சந்திக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அவரிடம் ஆசி பெற்ற பாரதியார், அவரை தம் ஞான குருவாக ஏற்றுக்கொண்டார்.

1907ம் ஆண்டில் "இந்தியா" என்னும் வார ஏட்டையும் "பால பாரதம்" என்ற ஆங்கில இதழையும் பொறுப்பேற்று நடத்தினார் பாரதியார். இந்திய விடுதலை போராட்டத்தில் பாரதியார் தீவிரமாக ஈடுபடத் துவங்கினார். தாம் ஆசிரியராக இருந்த இந்தியா என்னும் பத்திரிகையை விடுதலை வேட்கையை மக்களுக்கு ஊட்டுவதற்கான களமாக பயன்படுத்தினார். சுதந்திரப் போராட்டத்தில், பாரதியாரின் பாடல்கள் காட்டுத்தீயாய் பரவி தமிழர்களை வீறுகொள்ளச் செய்தது.

கத்தியின்றி ரத்தமின்றி

யுத்தமொன்று வருகுது

சத்தியத்தின் நித்தியத்தை

நம்பும்யாரும் சேருவீர்..!

என்று நெருப்பு கனலாய் கொந்தளித்தார் மகாகவி பாரதியார்.

கைது வாரன்ட் பிறப்பித்த வெள்ளையரசு

பாரதியாரின் சுதந்திர எழுச்சி மிக்க பாடல்களும் கேலி சித்திரங்களும் மக்கள் மனதில் விடுதலைத்தீயை கொழுந்துவிட்டு எரியச் செய்தது. சுதந்திர போராட்டத்திற்கு கை கொடுத்து வழி நடத்தியது. இதனால் "இந்தியா" பத்திரிகை மீது பிரிட்டிஷ் அரசின் பார்வை விழுந்தது. மேலும் பாரதியாருக்கு கைது வாரன்ட் பிறப்பித்ததாக தகவல் வந்தது. அதனால் தன் நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பிரெஞ்சு நாட்டின் ஆதிக்கத்தில் இருந்த பாண்டிச்சேரியில் தலைமறைவாக வாழ்ந்தார் பாரதியார். 1908ம் ஆண்டு முதல் "இந்தியா" பத்திரிகை புதுவையில் இருந்து வெளி வரத் துவங்கியது.

தன் பேனா முனையின் எழுத்துக்கள் மூலம் பெரும் புரட்சியை ஏற்படுத்திக்கொண்டிருந்தார், பாரதியார். அவரது பத்திரிகை பிரசாரத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. பத்திரிகையின் செல்வாக்கும் படிப்படியாக அதிகரித்தது. இதனை கவனித்த பிரிட்டிஷ் அரசு, அந்த பத்திரிகையை படிக்க தடை விதித்தது. இதனால் சென்னையில் பிறந்து புதுவையில் வளர்ந்த "இந்தியா" பத்திரிகையும் பாதை அறியாது பாதியில் நின்றது.

புதுவையில் பாரதியாரின் கவிதை

பத்திரிகை முடங்கியதே தவிர பாரதியாரின் புலமை முடங்கவில்லை. அந்த காலகட்டத்தில் தான், கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலியின் சபதம் போன்ற அமர கவிதைகள் பலவற்றை இயற்றினார் பாரதியார். அதோடு 1912ம் ஆண்டு பகவத் கீதையை தமிழ் மொழியில் மொழி பெயர்த்து வெளியிட்டார் பாரதியார்.

பாரதியார் கைது

1918ம் ஆண்டு பாண்டிச்சேரியில் இருந்து வெளியேறி பிரிட்டிஷ் எல்லையில் காலடி எடுத்து வைத்த உடனேயே கைது செய்யப்பட்டார். 34 நாட்கள் சிறையில் வைக்கப்பட்டு பிறகு விடுதலை செய்யப்பட்டார். விடுதலையானதும் தம் மனைவியின் ஊரான கடையம் என்னும் ஊரில் குடியேறினார். அடுத்த இரண்டு ஆண்டுகளையும் கடயத்திலேயே செலவிட்டார்.

வறுமையின் பிடியில் பாரதியார்

கடையத்தில் இருந்த காலகட்டத்தில் பாரதியாரை வறுமை மீண்டும் சூழ்ந்துகொண்டது. தம் நிலையை விளக்கி சீட்டுக் கவிதை ஒன்றை எட்டயபுர மன்னருக்கு அனுப்பினார். ஆனால் மன்னரிடமிருந்தும் எதிர் பார்த்த உதவி கிடைக்கவில்லை. உலகில் எல்லா உயிரினங்களும் பசியில்லாமல் வாழவேண்டும் என்ற எண்ணம் பாரதியாரிடம் அந்த வறுமை சூழ்ந்த காலத்திலும் மேலோங்கி இருந்தது. வீட்டில் தன் மனைவி சமைக்க வைத்திருக்கும் சிறிதளவு அரிசியைக் கூட காக்கைக்கும் குருவிகளுக்கும் வாரி இறைத்து விட்டு, தான் பசியோடு வாழ்ந்த நாட்கள் ஏராளம். இத்தகையை உணர்வுள்ள ஒருவரால் தான், "தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்" என்று கவி பாட முடியும்.

வறுமையில் கூட தன்மானத்தோடு தான் வாழ்ந்தார். பொதுவாக கொடுக்கிற கை மேலேயும் வாங்குகிற கை கீழேயும் இருக்கும். ஆனால் அந்த இலக்கணத்தையும் மாற்றினார், நம் தேசிய கவி. ஒருமுறை தன்னுடைய பணக்கார நண்பர் ஒருவர், தட்டில் பணத்தையும் பட்டாடையையும் வைத்து பாரதியாரிடம் கொடுத்தாராம். ஆனால், பாரதியோ, தட்டை உம்மிடமே வைத்துக்கொள் என்று கூறி , தமது கைகளால் அந்த தட்டில் இருந்ததை எடுத்துக்கொண்டாராம். தன்னுடைய கை எதற்காகவும் தாழ்ந்துவிட கூடாது என்பதில் கவனமாய் இருந்துள்ளார் பாரதியார்.

மகாத்மா காந்தியுடன் சந்திப்பு

வறுமையில் வாடிய பாரதியார், 1919ம் ஆண்டு மீண்டும் சென்னைக்கு வந்தார். அப்போது ராஜாஜியின் வீட்டிற்கு ஒரு முறை சென்றபோது அங்கு மகாத்மா காந்தியை சந்தித்தார். இந்தியாவின் மும்மூர்த்திகளான ராஜாஜி, காந்தி மற்றும் மகா கவி பாரதியார் சந்தித்தது அதுவே, முதலும் கடைசியும் ஆகும்.

பாரதியார் மறைவு

1921ம் ஆண்டு ஜூலை மாதம், தான் வழக்கமாக செல்லும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலுக்குச் சென்றார். அங்கு யாரும் எதிர்பாரா விதமாக அந்த கோவில் யானை அவரை தூக்கி எறிந்தது. அதனால் தலையிலும் கையிலும் அவருக்கு காயங்கள் ஏற்பட்டன. அதோடு அவருக்கு அது ஒரு பேரதிர்ச்சியாக இருந்தது. அதனால் அவர் நோய்வாய்ப்பட்டார். சில நாட்களுக்கு பிறகு அவர் யானை தந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டபோதும் வயிற்றுக் கடுப்பு நோயால் பாதிக்கப் பட்டார். மருந்துகளை சாப்பிட மறுத்த அவர் தனது 39 வது வயதில், 1921ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ம் தேதி இவுலகை விட்டு மறைந்தார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 19 March 2024 9:48 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்