திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் செல்போன் திருடியவர் கைது

திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் செல்போன் திருடியவர் கைது
X
திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் செல்போன் திருடிய நபரிடமிருந்து 40,000/- மதிப்புள்ள செல்போன் பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் பகுதியைச் சேர்ந்த தண்டாயுதபாணி மகன் சங்கரநாராயணன் என்பவர் தற்போது சென்னை சோழிங்கநல்லூரில் வேலைபார்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் (24.03.2022) திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு வந்தவர் இரவு கோவில் வளாகத்திலேயே தங்கியிருந்துள்ளார். நேற்று (25.03.2022) காலை எழுந்து பார்க்கும் போது தான் வைத்திருந்த செல்போனை காணவில்லை என்று சங்கரநாராயணன் அளித்த புகாரின் பேரில் திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

போலீசாரின் விசாரணையில் சங்கரநாராயணனின் செல்போனை திருடியது திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர், வடலிவிளை பகுதியை சேர்ந்த மதியழகன் மகன் சிங்கத்துரை (53) என்பவர் திருடியது தெரியவந்தது.

இதுகுறித்து திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கல்யாணசுந்தரம் வழக்குப்பதிவு செய்து சிங்கதுரையை கைது செய்து அவரிடமிருந்து திருடப்பட்ட ரூபாய் 40,000/- மதிப்புள்ள ஆப்பிள் ஐ போனையும் பறிமுதல் செய்தார்.

மேலும் சிங்கதுரை மீது வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கும், ஏர்வாடி காவல்நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கும், வள்ளியூர் காவல் நிலையத்தில் திருட்டு வழக்கு உட்பட 5 வழக்குகளும், திருநெல்வேலி மேலப்பாளையம் காவல் நிலையத்தில் 2 திருட்டு வழக்குகளும், பணகுடி காவல் நிலையத்தில் திருட்டு வழக்கு உட்பட 4 வழக்குகளும் என மொத்தம் 13 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story