தென்னாட்டு நைட்டிங்கேர்ள் எஸ். ஜானகியம்மா பிறந்த தினமின்று

தென்னாட்டு நைட்டிங்கேர்ள் எஸ். ஜானகியம்மா பிறந்த தினமின்று
X
60 ஆண்டுகள் கலைப்பயணம்,17 மொழிகளில் 48ஆயிரம் பாடல்கள் என இசையுலகில் தனி சகாப்தம் படைத்த எஸ்.ஜானகியின் 84வது பிறந்தநாளின்று

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள பல்லேபட்லா என்கிற கிராமத்தில் 1938ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி பிறந்தவர் ,இசைக்கு மொழியேது என்பார்கள். ஆந்திராவில் பிறந்தவர், தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர். ஆனால், இவர் பாடாத மொழிகளே இல்லை. மூன்று வயதிலேயே இவர் பாட, இந்தக் குரலிலும் குழைவிலும் ஏதோ இருக்கிறது என இவரின் தாய்மாமா தான் கண்டறிந்தார். அவரின் வழிகாட்டுதலில்தான், சென்னைக்கு வந்தார். ஏவிஎம்மில் இணைந்தார் எஸ்.ஜானகி. முதலில் கோரஸ் பாடகியாகவும், பிறகு ஒன்றிரண்டு படங்களில் பாடத்துவங்கிய போதும் பெரிய அறிமுகம் அவருக்கு அமையவில்லை.

1962-ல் வெளிவந்த கொஞ்சும் சலங்கை படத்தில் இடம்பெற்ற சிங்கார வேலனே தேவா என்ற பாடல் பட்டிதொட்டி எங்கும் அவரை கொண்டு போய் சேர்த்தது. ஆனாலும் கூட பி.சுசீலா, ஜிக்கி, எல்.ஆர்.ஈஸ்வரி போன்றோர் ஆதிக்கம் செலுத்த அவ்வப்போது தனது கொஞ்சும் குரலால் மனதை வருடும் பாடல்களை வழங்க ஜானகி தவறவில்லை.

இளையராஜாவின் வருகைக்கு பின்னால் ஜானகியின் இசைப்பயணம் புதிய உச்சத்தை கண்டது. 1970களின் மத்தியில் தொடங்கி அடுத்த இருபது ஆண்டுகளுக்கு தமிழ் திரையுலகின் முன்னணி பாடகியாக எஸ்.ஜானகியே திகழ்ந்தார். மச்சான பாத்தீங்களா, செந்தூரப்பூவே, பூவரசம்பூ பூத்தாச்சு என 80-களில் புதிய அலையை உருவாக்கினார்.

தொடர்ந்து காற்றில் எந்தன் கீதம், நாதம் என் ஜீவனே, மெளனமான நேரம், ஒரு கிளி உருகுது, புத்தம் புது காலை, இது ஒரு நிலாக்காலம், கண்மணி அன்போடு காதலன், அடி ஆத்தாடி, சின்ன தாயவள் என காலத்தால் அழிக்க முடியாத கானங்களை வழங்கி இன்றளவும் நம்மை தாலாட்டுகிறார்..

90களில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் எஸ்.ஜானகி பாடிய பாடல்கள் தனி ரகம்...

ஒட்டகத்த கட்டிக்கோ, கத்தாழங் காட்டுவழி, காதல் கடிதம் தீட்டவே, நெஞ்சினிலே, மார்கழி திங்களல்லவா, என இவர்கள் கூட்டணியில் வந்த பாடல்கள் மிக குறைவே, ஆனால் என்றென்றும் இனிமையானவை..

4 தேசிய விருதுகள், 33 மாநில விருதுகள், தமிழ்நாடு அரசின் கலைமாமணி பட்டம் என அவரது திறமைக்கு கிடைத்த விருதுகள் ஏராளம், ஏராளம். 2013ம் ஆண்டு இந்திய அரசு கொடுத்த 'பத்ம பூஷன்' விருதை மிக தாமதமாகக் கொடுப்பதாக கூறி நிராகரித்தவர் ஜானகி என்பது குறிப்பிடத்தக்கது. எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான், அனிருத் என நான்கு தலைமுறை இசையமைப்பாளர்களுக்கு பாடியுள்ளார் ஜானகி.

2016-ம் ஆண்டு முதல் திரைப்படங்களில் பாடுவதை அவர் நிறுத்திக் கொண்டாலும், ஜானகியின் குரலை கேட்பதை ரசிகர்கள் ஒருபோதும் நிறுத்தப் போவதில்லை என்பதை விட நிறுத்த முடியாது என்பதுதான் நிஜம்

ஆக அறுபது ஆண்டுகள் கலைப்பயணம், 17 மொழிகளில் 48ஆயிரம் பாடல்கள் என இசையுலகில் தனக்கென ஒரு சகாப்தத்தை படைத்த எஸ்.ஜானகியின் 84வது பிறந்தநாளான இன்று எங்களது செய்தி குழு சார்பில் வாழ்த்தி வணங்குகிறோம்

Next Story
மல்லசமுத்திரத்தில் கொப்பரை வர்த்தகம்: விவசாயிகள் சந்தித்த நன்மைகள்