‘ஹர்காரா’ படத்தின் அசல் கதை இந்த படம்தான்; சென்னை ஐகோர்ட் உத்தரவு

‘ஹர்காரா’ படத்தின் அசல் கதை இந்த படம்தான்; சென்னை ஐகோர்ட் உத்தரவு
X

ஹர்காரா படத்தின் போஸ்டர்.

"ஹர்காரா" படத்தின் அசல் கதை "ஓட்டத் தூதுவன் 1854 படத்தை அடிப்படை கொண்டது’ என்ற வாசகத்தை இடம் பெறச்செய்ய வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாட்டின் முதல் அஞ்சல்காரர் குறித்த கதை என்ற வாசகத்துடன் சமீபத்தில் வெளியான ஹர்காரா திரைப்படம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு ஒன்றை சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்த உதவி இயக்குநராக பணியாற்றிய சிதம்பரம் தொடர்ந்துள்ளார்.

இந்த மனுவில், பல திரைப்படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய அனுபவத்தில், நாட்டின் முதல் அஞ்சல்காரர் குறித்த "ஓட்டத் தூதுவன் 1854" என்ற கதையை எழுதி, திரைக்கதையை உருவாக்கி இருந்தேன். எனது கதையை சென்னை முகப்பேரை சேர்ந்த தயாரிப்பாளர் ராம் அருண் காஸ்ட்ரோ என்பவரிடம் கூறி, அவரையே கதாநாயகனாக வைத்து படமெடுத்தேன்.

படத்திற்கு இருவரும் உரிமையாளர்கள் என 2014 ஆம் ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டு, உருவான படம் 2016-இல் பல திரைப்பட விழாக்களில் பங்கேற்று பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால் இதுவரை திரையரங்குகளில் வெளியாகவில்லை.

இந்த நிலையில் அதே கதையை வைத்து "ஹர்காரா" என்கிற படத்தை தன்னுடைய கதை மற்றும் திரைக்கதை எனக் கூறி, தயாரிப்பாளர் ராம் அருண் காஸ்ட்ரோ எடுத்துள்ளதாக மனுவில் சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் விஜய் பிரசாந்த் ஆஜராகி "கதை, திரைக்கதை - ஆர்.சிதம்பரம்" என்று குறிப்பிடாமல் படத்தை வெளியிட தடைவிதிக்க வேண்டும் என வாதிட்டார்.

பின்னர் நீதிபதி, "ஹர்காரா படத்தில் எழுத்துகள் போடும்போது "ஹர்கரா படம் ஆர்.சிதம்பரம் எழுதிய ஓட்டத் தூதுவன் 1854 திரைப்படத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது" என்கிற வாசகத்தை ஆங்கிலம் மற்றும் அந்தந்த மொழிகளில் இடம்பெறச் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

ஒடிடி தளத்தில் வெளியிடும்போதும் இந்த வாசகங்கள் இடம்பெற வேண்டும் என்றும். படத்தின் மூலம் ஈட்டப்படும் வருமானத்தில் சிதம்பரத்திற்கு எந்த பங்கையும் வழங்க வேண்டியது இல்லை என்றும் ராம் அருண் காஸ்ட்ரோவிற்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 29 ஆம் தேதிக்கு நீதிபதி ஆஷா தள்ளிவைத்தார்.

Next Story
மனித உணர்வுகளை புரிந்து கொள்ளும் AI பற்றி நீங்களும்  தெரிந்து கொள்ளுங்கள்!