திருப்பத்தூர் அருகே விபத்தில் சிக்கிய நடிகர் சரத்குமாருக்காக வந்த கேரவன்
நடிகர் சரத்குமார்.
நடிகரும் சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமார் பயணித்த கேரவன், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே விபத்துக்குள்ளானதில் பலர் காயமடைந்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. இதில் நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார், குடும்பத்துடன் கலந்து கொண்டார். அப்பகுதியில் உள்ள மேலும் சில கோவில்களுக்கும் சென்று தரிசனம் செய்தார் சரத் குமார். அவரை அழைத்து வருவதற்காக கேரவன் வரவழைக்கப்பட்டிருந்தது. இதில் சரத்குமார், அவரது மனைவி ராதிகா சரத்குமார், அவரது மகள் வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட சிலர் பயணித்தனர்.
சரத்குமார் உள்ளிட்டோர் கோயிலுக்கு வந்த பின்னர், அவர்கள் பயணித்த அந்த கேரவன் திண்டுக்கல்லுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அப்போது, திருப்பத்தூர் அருகே சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த பேருந்தின் மீது மோதி அந்த கேரவன் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் வந்த 13 பேர் காயமடைந்தனர்.
பக்தர்களை ஏற்றி வந்த பேருந்து, கேரவன் ஒன்றோடு ஒன்று மோதியதில் பேருந்தில் இருந்த 13பேர் காயமடைந்துள்ளனர். கேரவனில் ஒருவருக்கு லேசான காயம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. பின்பு காயமடைந்த அனைவரும் திருப்பத்தூர் அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் திருப்பத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu